சோனியா மருமகன் வதேராவின் ரூ.37.64 கோடி சொத்துகள் முடக்கம்.. கூடுதல் குற்றப்பத்திரிகை! ED அதிரடி
டெல்லி: ஹரியானா மாநிலம் குருகிராம் நில மோசடி வழக்கு தொடர்பாக டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை கூடுதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. அதில் சோனியா காந்தியின் மருமகனும், பிரியங்கா காந்தியின் கணவருமான ராபர்ட் வதேராவின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ராபர்ட் வதேராவுக்கு சொந்தமான ரூ.37.64 கோடி சொத்துகள் அமலாக்கத்துறையால் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கால் ராபர்ட் வதேராவுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி. இவரது மருமகன் ராபர்ட் வதேரா. இவர் அடிப்படையில் தொழிலதிபர். பிரியங்கா காந்தியின் கணவரான இவர் மீது மோசடி வழக்கு உள்ளது. அதாவது ஹரியானா மாநிலம் குருகிராம் நிலம் வாங்கி, விற்பனை செய்தது தொடர்பாக அவர் மீது பணமோசடி புகார் எழுந்தது. அதில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்தது கண்டறியப்பட்டது.

ராபர்ட் வதேரா கடந்த 2008 ம் ஆண்டு பிப்ரவரியில் ஒம்காரேஷ்வர் பிராப்பர்ட்டிஸிடம் இருந்து ரூ. 7.5 கோடி மதிப்பிலான 3.5 ஏக்கர் நிலத்தை வாங்கியது. இதையடுத்து அங்கு அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டுவதற்கு, அப்போதைய காங்கிரஸ் முதல்வர் பூபேந்திர சிங் ஹுடா அனுமதி வழங்கினார்.
இதனால் ராபர்ட் வதேரா வாங்கிய நிலத்தின் மதிப்பு பலமடங்கு அதிகரித்தது. ராபர்ட் வதேராவின் ஸ்கைலைட் ஹாஸ்பிடாலிட்டி நிறுவனம் அங்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டவில்லை. அதன்பிறகு இந்த நிலத்தின் ஒரு பகுதி மட்டும் டிஎல்எஃப் நிறுவனத்துக்கு ரூ.58 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது. இதில் தான் முறைகேடு, சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வழக்கையே அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி ராபர்ட் வதேராவுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து ராபர்ட் வதேரா சமீபத்தில் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரித்தனர். மேலும் டெல்லி ரோஸ் அவென்யூ வளாக நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. தற்போது கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில் ராபர்ட் வதேராவின் பெயர் இடம்பெற்றுள்ளது. இந்த கூடுதல் குற்றப்பத்திரிகையின் மீது டெல்லி நீதிமன்றம் இன்று விசாரணையை தொடங்க உள்ளது. அதுமட்டுமின்றி வழக்கு தொடர்பாக ராபர்ட் வதேராவுக்கு சொந்தமான ரூ.37.64 கோடி மதிப்பிலான 43 சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன. இது ராபர்ட் வதேராவுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
இதுபற்றி அமலாக்கத்துறை சார்பில், ‛‛குருகிராம் நில விற்பனை மோசடியில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்துள்ளது. ராபர்ட் வதேராவுக்கு ஆதரவாக அப்போதைய காங்கிரஸ் அரசு செயல்பட்டுள்ளது. இதனால் நிலத்தின் மதிப்பு அதிகரித்துள்ளது. பணமோசாடி தொடர்பான ஆதாரங்கள் உள்ளன. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது'' என்றார்.












Click it and Unblock the Notifications