ஓயாத பஞ்சாப் அக்கப்போர்...ராகுல் காந்தியுடன் ஹரீஷ் ராவத் ஆலோசனை- அடுத்த வாரம் சண்டிகரில் பஞ்சாயத்து!
டெல்லி: பஞ்சாப் முதல்வர் அமரீந்தர்சிங் மற்றும் பஞ்சாப் காங்கிரஸ் கமிட்டி தலைவர் நவ்ஜோத்சிங் சித்து இடையேயான பிரச்சனையை தீர்ப்பது தொடர்பாக அம்மாநில மேலிட பொறுப்பாளரான ஹரீஷ் ராவத் இன்று மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து சண்டிகரில் அடுத்த வாரம் இந்த பிரச்சனை தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெறும் என ஹரீஷ் ராவத் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநில சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. சட்டசபை தேர்தலுக்கு 6 மாதங்களே உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் வரிந்து கட்டிக் கொண்டு களத்தில் நிற்கின்றன.
ஆனால் பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர்களோ ஆளுக்கொரு திசையில் முறைத்துக் கொண்டு நிற்கின்றனர். பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்களின் போக்கால் காங்கிரஸ் மேலிடம் அதிர்ச்சி அடைந்திருக்கிறது.

காங். தலைவராக சித்து
பஞ்சாப் முதல்வர் அமரீந்தர்சிங் தமது தலைமையில்தான் சட்டசபை தேர்தலை காங்கிரஸ் எதிர்கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார். ஆனால் காங்கிரஸ் மேலிடம் இதனை ஏற்கவில்லை. முன்னாள் கிரிக்கெட் வீரரான நவ்ஜோத்சிங் சித்துவை பஞ்சாப் காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக்கியது டெல்லி. இதனை ஏற்க முடியாது என அமரீந்தர்சிங் அடம்பிடித்தார். பின்னர் ஒருவழியாக சமாதானம் செய்து வைக்கப்பட்டு சித்துவும் தலைவரானார்.

சித்து- அமரீந்தர்சிங் மோதல்
ஆனாலும் சித்துவுக்கும் அமரீந்தர்சிங்குக்கும் இடையேயான அக்கப் போர் ஓயவில்லை. இந்த விவகாரத்தில் முதல்வர் அமரீந்தர்சிங்கை விமர்சித்த சித்துவின் ஆலோசகர்களில் ஒருவரான மல்வீந்தர் மாலியை கட்சி பதவியில் இருந்து ராஜினாமா செய்ய டெல்லி மேலிடம் உத்தரவிட்டது. இதற்கு சித்து எதிர்ப்பு தெரிவித்தார். தம்மால் சுதந்திரமாக செயல்படவோ முடிவெடுக்கவோ முடியவில்லை என்றார். இதனால் அமரீந்தர்சிங், சித்து இடையே மீண்டும் மோதல் வெடித்தது.

அமைச்சர்கள் போர்க்கொடி
இந்நிலையில் அமரீந்தர்சிங்கை முதல்வர் பதவியில் இருந்து மாற்றியாக வேண்டும் என 4 கேபினட் அமைச்சர்கள் போர்க்கொடி தூக்கினர். இதன் பின்னணியில் சித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக மேலிட பொறுப்பாளரான ஹரீஷ் ராவத்தையும் 4 கேபினட் அமைச்சர்கள் சந்தித்து பேசினர். ஆனால் ஹரீஷ் ராவத், முதல்வர் அமரீந்தர்சிங்தான்.. அவரை தேர்தலுக்கு முன்னர் மாற்றும் பேச்சுக்கே இடமில்லை என திட்டவட்டமாக கூறியிருந்தார்.

ராகுலுடன் ஹரீஷ் ராவத் ஆலோசனை
இதையடுத்து டெல்லியில் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை இன்று ஹரீஷ் ராவத் சந்தித்து ஆலோசனை நடத்தினார். பஞ்சாப் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸில் அதிகரித்து வரும் கோஷ்டி பூசலுக்கு எப்படி தீர்வு காண்பது என இருவரும் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஹரீஷ் ராவத், சண்டிகரில் அடுத்த வாரம் அமரீந்தர்சிங், சித்து ஆகியோரை நேரில் சந்தித்து பேச உள்ளேன். அப்போது பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications