8 தொகுதிகளில் கம்மி ஓட்டுகளில் ஜெயித்த பாஜக.. ஹரியானாவில் நடந்தது சதி.. காங்கிரஸ் உறுதி!
டெல்லி: ஹரியானா மாநில சட்டசபை தேர்தலில் பாஜக சொற்ப வாக்குகளில் 8 தொகுதிகளில் வென்றிருக்கிறது; 32 வாக்குகள் முதல் 1997 வாக்குகள் வித்தியாசத்தில் இந்த 8 தொகுதிகளில் பாஜக வென்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது;' காங்கிரஸ் கட்சி வெல்ல வேண்டிய இந்த தொகுதிகளில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் நடந்திருக்கலாம் என சந்தேகம் கிளப்புகிறது காங்கிரஸ்.
ஹரியானா மாநில சட்டசபை தேர்தலில் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்று 3-வது முறையாக ஆட்சியை அமைத்துள்ளது. ஹரியானாவில் தேர்தல் சரித்திரத்தில் ஒரே கட்சி தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சி அமைப்பது இதுவே முதல் முறை.

ஹரியானாவில் 10 ஆண்டுகாலம் பாஜக ஆட்சியில் இருந்ததால் அதிருப்தி அலை வெடித்திருந்தது. ஆனால் இந்த அதிருப்தி அலையை காங்கிரஸ் அறுவடை செய்யாமல் மிதமிஞ்சிய நம்பிக்கையில் மிதந்தது. பாஜகவோ, அதிருப்தி அலையை எப்படி எதிர்கொள்வது என வியூகம் வகுத்து செயல்பட்டது. இதனால் பாஜகவுக்கு பிரம்மாண்ட வெற்றி கிடைத்திருக்கிறது.
ஹரியானா தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சியினரை கொந்தளிக்க வைத்துள்ளது. ஹரியானா வாக்கு எண்ணிக்கையின் போது தொடக்கத்தில் காங்கிரஸ்தான் அதிகமான இடங்களில் முன்னிலை வகித்தது. பாஜக சொற்பமான இடங்களில் தான் முன்னிலை என தெரிவிக்கப்பட்டது.
ஆனால் திடீரென அப்படியே எல்லாமே தலைகீழாக மாறிப் போனது. இறுதியாக பாஜக 48 இடங்களிலும் காங்கிரஸ் 37 இடங்களிலும் வென்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹரியானாவில் பெரும்பான்மைக்கு தேவை 46 இடங்கள்.
அதேநேரத்தில் இந்த தேர்தல் முடிவுகளை ஏற்கவே முடியாது என்கிறது காங்கிரஸ். ஏனெனில் காங்கிரஸ் கட்சி வெல்ல வேண்டிய 8 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் சொற்ப வாக்குகளில் ஜெயித்துவிட்டதாக அறிவித்துள்ளனர். மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் இந்த முறைகேடுகளை அரங்கேற்றி காங்கிரஸ் வெற்றியை சதி செய்து பறித்துவிட்டது பாஜக எனவும் குமுறுகின்றனர்.
பாஜக குறைவான வாக்கு வித்தியாசத்தில் வென்ற 8 தொகுதிகள்:
உச்சன கலன்- 32 வாக்குகள் வித்தியாசம்
தப்வாலி- 610
லோஹரு-792
அதம்பூர்- 1268
ரோஹ்டாக் - 1341
சதவுரா- 1699
தத்ரி- 1957
பஞ்ச்குலா- 1997
இந்த 8 தொகுதிகள் தான் தாங்கள் வெல்ல வேண்டிய தொகுதி என்கிறது காங்கிரஸ். மேலும் 9 தொகுதிகளில் 2,000 முதல் 5,000 வரைதான் வாக்கு வித்தியாசம் எனவும் சுட்டிக்காட்டுகிறது. ஒருவேளை காங்கிரஸ் வாதிடுவதைப் போல இந்த 17 தொகுதிகளிலும் அக்கட்சி வென்றிருந்தால் ஹரியானா கள நிலவரம் வேறானதாகவும் மாறியிருக்கக் கூடும் என்பது வெளிப்படையான ஒன்றுதான்.












Click it and Unblock the Notifications