பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு.. உடனே 4 மத்திய கம்பெனி படைகளை அனுப்புங்க.. ஹரியானா முதல்வர் கோரிக்கை
டெல்லி: ஹரியானா மாநிலம் குருகிராமில் நடந்த வன்முறை சம்பவத்தில் பஜ்ரங் தள் இயக்கத்தைச் சேர்ந்த ஒருவரும் மருத்துவமனையில் இறந்துள்ளார். இதனால் வன்முறையில் இறந்தவர்கள் எண்ணிக்கை ஆறு ஆக உயந்துள்ளது.இந்நிலையில் வன்முறையை தடுக்க மேலும் 4 மத்திய படைகளை உடனே அனுப்பும் படி ஹரியானா முதல்வர் கோரிக்கை வைத்துள்ளார்
ஹரியானா மாநிலத்தில் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு சார்பில் கடந்த திங்கள்கிழமை பிரிஜ் மண்டல் ஜலாபிஷேக யாத்திரை என்ற பெயரில் ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலம் குருகிராம் மாவட்டத்தில் தொடங்கி நூ மாவட்டத்தில் முடிவடைவதாக இருந்தது. இந்நிலையில் கேட்லா மோட் பகுதியில் ஊர்வலம் சென்றபோது மற்றொரு மதத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினார்களாம். பின்னர் ஊர்வலத்தில் கற்கள் வீசப்பட்டதாக கூறப்டுகிறது. இதையடுத்து இரு தரப்பினருக்கு இடையே பயங்கர வன்முறை வெடித்தது.
ஒரு கும்பல் போலீஸாரின் வாகனங்கள் உள்பட பல வாகனங்களுக்கு தீ வைத்து எரித்தனர். மேலும், துப்பாக்கிகளாலும் சரமாரியாக சுட்டுக்கொண்டார்கள். இதனால் குருகிராமிலும் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையால் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே ஹரியானாவில் வன்முறை அதிகரித்தபடி இருக்கிறது. குருகிராம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு ஐந்து குடோன்களை சிலர் தீவைத்து எரித்தனர் இரண்டு இறைச்சிக் கடைகளை சூறையாடினர். காவல்துறை வருவதற்கு முன்பே இந்த சம்பவங்கள நடந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் புதன்கிழமையும் வன்முறை வெடித்தது. ஒரு டீக்கடை சேதப்படுத்தப்பட்டுள்ளது. சில குடிசைகள் சூறையாடப்பட்டுள்ளது.
இந்நிலையில் மோதலில் காயம் அடைந்த பஜ்ரங் தளத்தின் பிரதீப் சர்மா, டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களில் இரண்டு ஊர்காவல் படையினர் , ஒரு இமாம் ஆகியோரும் உள்ளனர்.
கலவரம் நடந்த நூஹ் பகுதியை தாண்டி குர்கான், ஃபரிதாபாத், பல்வால் ஆகிய மாவட்டங்களுக்கும் வன்முறை பரவி உள்ளது. இதனால் குர்கான், ஃபரிதாபாத், பல்வால் ஆகிய மாவட்டங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். மத்திய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூன்று கம்பெனி வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்கள். வதந்திகள் எதுவும் பரவாமல் தடுக்கும் வகையில் இணைய சேவை துண்டிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் வன்முறையை கட்டுப்படுத்த மேலும் 4 கம்பெனி படைகளை அனுப்புமாறு முதல்வர் மனோகர் பாரி கட்டார் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குருகிராமில் மட்டும் இதுவரை வன்முறையை கட்டுப்படுத்த 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே ஜெய் பாரத் மாதா வாஹினியின் தலைவரான தினேஷ் பார்தி மீது வகுப்புவாத வன்முறையைத் தூண்டும் வீடியோவை வெளியிட்டதாக வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் ஹரியாணா மாநிலத்தில் உள்ள ஒவ்வொருவரையும் பாதுகாப்பது காவல் துறையால் சாத்தியமில்லை என மக்கள் அமைதி காக்க வேண்டும் என அமமாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கலவரத்திற்கு என்ன காரணம்? பஜ்ரங் தள் ஆதரவாளர்கள் சிலர் சமூக வலைதளங்களில் வெளியிட்ட சர்ச்சைக்குரிய வீடியோயவே கலவரம் ஏற்பட காரணம் என்கிறார்கள். பஜ்ரங் தள் உறுப்பினரான மோனு மனேசர் பகிர்ந்த சர்ச்சை வீடியோ அண்மையில் வேகமாக பரவியது. இவர் பேரணியின்போது தானும் மேவாட் பகுதிக்கு வருவேன் என்று கூறியிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே ஊர்வலத்தில் இளைஞர்கள் சிலர் கல்வீசித் தாக்குதல் நடத்தினார்களாம். இதுவே கடைசியில் கலவரத்திற்கு காரணமாக மாறியது என ஹரியானா மாநில போலீஸார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications