''விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துங்கள் பிரதமரே''.. மோடிக்கு, ஹரியானா துணை முதல்வர் கடிதம்!
டெல்லி: டெல்லியில் போராடும் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்துமாறு பிரதமர் மோடிக்கு, ஹரியானா துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா கடிதம் எழுதியுள்ளார்.
புதருக்குள் ஷாக்.. விறகு எடுக்க போன வனத்தாய்.. விரட்டி விரட்டியே கொன்ற படுபயங்கரம்..!
மத்திய அரசு நிறைவேற்றிய மூன்று வேளாண் சட்டங்களை கண்டித்து தலைநகர் டெல்லியில் பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் தலைநகர் டெல்லியில் சுமார் 130 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பேச்சுவார்த்தையில் பயன் இல்லை
கடந்த குடியரசு தினத்தன்று டெல்லியில் நிகழ்ந்த வன்முறை, கடும் குளிர் ஆகியவற்றை தாங்கி பெண்கள், குழந்தைகள் என குடும்பத்துடன் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு அவர்களுடன் இதுவரை 11 கட்ட பேச்சுவார்த்தை நடத்தி விட்டது. ஆனால் இதில் எதிலும் முடிவு கிடைக்கவில்லை.
கொரோனா 2-வது அலை
வேளாண் சட்டத்தை ஒன்றரை வருடத்திற்கு நிறுத்தி வைக்க தயாராக உள்ளதாக மத்திய அரசு கூறியது. ஆனால் வேளாண் சட்டத்தை முழுமையாக ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் திட்டவட்டமாக கூறினார்கள். தற்போது இந்தியா முழுவதும் கொரோனா 2-வது அலை வீசி வருகிறது. டெல்லியிலும் தினமும் 15,000-க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகி வருகின்றன.
போராட்டம் கவலையளிக்கிறது
இந்த நிலையில் டெல்லியில் போராடும் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்துமாறு பிரதமர் மோடிக்கு, ஹரியானா துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:- எங்கள் அன்ன பிரபுக்கள்(விவசாயிகள்) டெல்லி எல்லையில் சாலைகளில் உள்ளனர். மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை கண்டித்து 100 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருவது கவலைக்குரியது.
பேச்சுவார்த்தை குழு அமையுங்கள்
எனவே வேளாண் சட்டங்கள் குறித்த முட்டுக்கட்டைக்கு தீர்வு காணும் விதமாக ஒரு இணக்கமான முடிவை எடுக்க வேண்டும். போராடும் விவசாயிகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தைகளை தொடங்க மூன்று முதல் நான்கு மூத்த அமைச்சரவை அமைச்சர்கள் அடங்கிய குழுவை நீங்கள் அமைக்க வேண்டும். ஒவ்வொரு பிரச்சினைக்கும் பரஸ்பர பேச்சுவார்த்தை மூலம் ஒரு தீர்வு உள்ளது என்று துஷ்யந்த் சவுதாலா கூறியுள்ளார். கொரோனா 2-வது அலை வீசி வருவதால் டெல்லியில் போராடும் விவசாயிகள், போராட்டத்தை கைவிட்டு வீட்டுக்கு திரும்ப வேண்டும் என்றும் அரசு பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளதாகவும் மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ஏற்கனவே கூறியது குறிப்பிடத்தக்கது.