நாட்டியே உலுக்கிய ஹத்ராஸ் பாலியல் வழக்கு... சிபிஐ ஏற்றது!!
டெல்லி: உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸில் 19 வயது தலித் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்தார். இந்த வழக்கில் உயர் வகுப்பைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஹத்ராஸ் என்னுமிடத்தில் பூல்கர்ஹி என்ற கிராமத்தைச் சேர்ந்த 19 வயது தலித் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, டெல்லியில் இருக்கும் சப்தார்ஜங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி இறந்தார்.

இந்த சம்பவத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்து இருந்தனர். இந்த நிலையில் சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்து மத்திய அரசுக்கு உத்தரப் பிரதேசம் முதல்வர் யோகி ஆதித்யநாத் பரிந்துரைத்து இருந்தார். இதை ஏற்று சிபிஐ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்கான ஆணையை இன்று மத்திய நிர்வாகம் மற்றும் பயிற்சி துறை இன்று பிறப்பித்துள்ளது. வரும் நாட்களில் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கும்.
இந்த சம்பவத்தில் நீதி கிடைக்க வேண்டும் என்று உயிரிழந்த பெண்ணின் பெற்றோர் வலியுறுத்தி இருந்தனர். மேலும், அந்தப் பெண்ணின் உடலை குடும்பத்தினர் சம்மதம் இல்லாமல் நடு இரவில் எரித்து விட்டதாகவும் குற்றம்சாட்டி இருந்தனர்.

கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி தலித் பெண் உடல் முடக்கப்பட்ட நிலையில், அவரது வீடு அருகே இருந்து மீட்கப்பட்டது. முதலில் இவர் ஹத்ராஸ் மாவட்ட மருத்துவமனை மற்றும் அலிகார் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு இருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி டெல்லியில் இருக்கும் சப்தர்ஜங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தனது வாக்குமூலத்தில், உயர் வகுப்பைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து, கழுத்தை நெறித்ததாக தெரிவித்து இருந்தார். இந்த நான்கு இளைஞர்களும் தற்போது போலீஸ் காவலில் உள்ளனர்.

தடவியல் மற்றும் பிரேத பரிசோதனையில் தலித் பெண் பாலியல் பலாத்காரம் செய்ததற்கான ஆதாரம் இல்லை என்று உத்தரப் பிரதேச போலீசார் தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு சிபிஐ கைக்கு மாறியுள்ளது.












Click it and Unblock the Notifications