"இளைஞர்களே! பிரதமர் மோடி மீது நம்பிக்கை வையுங்கள் பிளீஸ்!" அக்னிபாத் போராட்டம்.. ஜேபி நட்டா கோரிக்கை
டெல்லி: அக்னிபாத் போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா இளைஞர்களிடம் முக்கிய கோரிக்கையை விடுத்துள்ளார்
மத்திய அரசு ராணுவத்திற்கு ஆள் சேர்க்கப் புதிதாக அக்னிபாத் என்ற திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தில் கீழ் இணைபவர்கள் 4 ஆண்டுகள் மட்டுமே பணியில் இருக்க முடியும்.
அவர்களில் 75% பேர் 4 ஆண்டுகள் பணிக் காலத்திற்குப் பின், ராணுவத்தில் இருந்து விடுவிக்கப்படுவார்கள். மீதமுள்ள 25% பேர் மட்டுமே ராணுவத்தில் தொடர்வார்கள் என அறிவிக்கப்பட்டது.

போராட்டம்
இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் இளைஞர்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு இடங்களிலும் ரயில்களுக்கு தீ வைக்கப்பட்டு, பொதுச் சொத்துகள் சேதப்படுத்தப்பட்டு உள்ளது. இதையடுத்து மத்திய அரசு அக்னிபாத் வீரர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ள போதிலும், நிலைமை கட்டுக்குள் வரவில்லை.

மோடி மீது நம்பிக்கை
இதனிடையே பிரதமர் மோடி மீது நம்பிக்கை வைத்து, இளைஞர்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என பாஜக தலைவர் ஜேபி நட்டா வலியுறுத்தி உள்ளார். இது குறித்து டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜேபி நட்டா, "இந்த அக்னிபாத் ஒரு புரட்சிகரமான திட்டம். இளைஞர்களைத் தவறாக வழிநடத்தும் முயற்சிகள் நடக்கின்றன. ஆனால், பிரதமர் மோடி மீது இளைஞர்கள் அனைவரும் நம்பிக்கை வைத்து போராட்டத்தைக் கைவிட வேண்டும்!

அமைதி
இந்த திட்டம் குறித்து முழுமையாகப் புரிந்து கொண்ட பின்னர் போராட்டங்களை நடத்துங்கள்! இது ஒரு பெரிய வாய்ப்பு, வன்முறை பாதையைக் கையில் எடுத்துள்ள இளைஞர்கள் அமைதி பாதையை விரைவில் தேர்ந்தெடுப்பார்கள் என நம்புகிறேன். எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு முடிவு எடுங்கள். மேலும், மோடியின் தலைமையில் பாஜக எப்போதும் இளைஞர்கள் மற்றும் நாட்டைப் பற்றியே சிந்திக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்!" என்றார்.

போராட்டம்
அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக முதலில் பீகார் மாநிலத்தில் தொடங்கிய போராட்டம், அதன் பின்னர் நாடு முழுவதும் பரவியது. பல இடங்களில் போராட்டத்தில் வன்முறையும் கூட நடைபெற்றது. கடந்த 2 ஆண்டுகளாக ராணுவத்தில் ஆட்சேர்ப்பு நடைபெறாமல் உள்ள நிலையில், இப்போது மத்திய அரசு புதிதாக அக்னிபாத் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது எந்த விதத்தில் நியாயம் என இளைஞர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

சிக்கல்
வழக்கமாக ராணுவத்தில் நேரடியாக இணையும் இளைஞர்களுக்கு அடுத்த 17 ஆண்டுகளுக்கு அதில் தான் பணிபுரிவார்கள். ஆனால், அக்னிபாத் திட்டத்தில் ஒருவரால் 4 ஆண்டுகள் மட்டுமே பணிபுரிய முடியும் என்பதால், இது ஒரு கட்டத்தில் நாட்டில் வேலைவாய்ப்பின்மையை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. இதன் காரணமாக அக்னிபாத் திட்டத்தை எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி துறை ரீதியான வல்லுநர்களும் விமர்சிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications