உபி-இல் பரபரப்பு.. அகில் பார்திய அகாரா பரிஷத் தலைவர் மகந்த் நரேந்திர கிரி திடீர் தற்கொலை..சீடர் கைது
டெல்லி: அகில் பார்திய அகாரா பரிஷத் அமைப்பின் தலைவர் நரேந்திர கிரி தற்கொலை செய்து கொண்டார். உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் உள்ள பாகம்பரி மடத்தில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
வட இந்தியாவில் முக்கிய மத அமைப்புகளில் ஒன்று அகில் பார்திய அகாரா பரிஷத். இந்த அமைப்பின் தலைவராக இருந்தவர் நரேந்திர கிரி.
துறவிகளின் உச்சபட்ச முடிவெடுக்கும் அமைப்பான இந்த அமைப்பின் தலைவராக இருந்த நரேந்திர கிரி, இன்று தற்கொலை செய்து கொண்டதாக அம்மாநில போலீசார் தெரிவித்தனர்.

தற்கொலை
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்திலுள்ள பாகம்பரி என்ற இடத்தில் அமைந்துள்ள மடத்தில் நரேந்திர கிரியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்த அறை உட்புறம் பூட்டப்பட்டு இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். நைலான் கயிற்றில் தூக்கில் தொங்கிய நிலையில் அவரது உடலை போலீசார் கண்டெடுத்ததாக அம்மாநில போலீசார் தெரிவித்தனர். மேலும், அங்கிருந்து கடிதம் ஒன்றை போலீசார் கண்டெடுத்துள்ளனர். அதில் மன அழுத்தம் காரணமாகத் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தற்கொலை கடிதம்
தற்கொலை கடிதம் 6 முதல் 7 பக்கங்கள் வரை இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். அதில் இத்தனை ஆண்டுகளாகத் தான் கவுரவத்துடன் வாழ்ந்ததாகவும் அதை இனி இழந்துவிட்டு வாழத் தாயாராக இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார் என போலீசார் தெரிவித்தனர். இது குறித்து பிரயாக்ராஜ் போலீஸ் அதிகாரி கேபி சிங் கூறுகையில், "நாங்கள் அந்த தற்கொலை குறிப்பைப் படித்தோம். அதில் தான் நீண்ட நாட்களாக வருத்தத்தில் இருந்தாக குறிப்பிட்டுள்ளார். மேலும், அதில் தான் உயிரிழந்த பிறகு ஆசிரமத்தை என்ன செய்ய வேண்டும் என்பதையும் அவர் உயில் வடிவில் எழுதியுள்ளார்" என்று அவர் தெரிவித்தார்.

சீடர் கைது
அந்த தற்கொலை கடிதத்தில் ஆனந்த் கிரி என்ற சீடர் குறித்தும் அவர் தனது வருத்தம் மற்றும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இதையடுத்து ஆனந்த் கிரியை ஹரித்துவாரில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். ஆனந்த் கிரிக்கும் இந்த தற்கொலைக்கும் இடையே எதாவது தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். தான் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டது தொடர்பாக ஆனந்த் கிரி கூறுகையில், "அவர் தற்கொலை செய்திருக்க முடியாது. பணத்தைப் பறிக்க குருஜியை சித்திரவதை செய்துள்ளனர். இதில் எனக்கு எதிராக மிகப்பெரிய சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இதில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

15 நாட்கள் ஆகிறது
போலீஸ் அதிகாரிகள், நில மாஃபியா ஆகியோர் இணைந்து இந்த சதியில் ஈடுபட்டுள்ளனர். இந்த வழக்கில் போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன். குருஜியை எனக்கு எதிராகத் தூண்டிவிட்டுள்ளனர். நான் குற்றவாளி என்றால் தண்டனையைச் சந்திக்கவும் தயாராக இருக்கிறேன். நான் குருஜியுடன் பேசி 15 நாட்கள் ஆகிறது" என்று தெரிவித்தார். நரேந்திர கிரி உயிரிழப்பிற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்கள் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் இரங்கல்
இது குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "அகில் பார்திய அகாரா பரிஷத் தலைவர் நரேந்திர கிரியின் உயிரிழப்பு வேதனையளிக்கிறது. அவர் பல்வேறு சன்த் சமாஜங்களுக்கும் இடையே இணைப்புப் பாலத்தை உருவாக்கியவர். இறைவன் அவரது பொற்பாதத்தில் மகந்த் நரேந்திர கிரிக்கு இடம் தருவார். ஓம் சாந்தி" என்று பதிவிட்டுள்ளார். அதேபோல உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது ட்விட்டரில், "மகந்த் நரேந்திர கிரியின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. ஆன்மிக உலகிற்கும் பேரிழப்பு. மறைந்த நரேந்திர கிரியின் ஆன்மா ஸ்ரீராமரின் பொற்பாதங்களில் சாந்தியடைய இறைவனைப் பிரார்த்தனை செய்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications