மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் ராஜினாமா.. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தவறியதால் நீக்கமா?
டெல்லி: மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் நீக்கப்பட்டுள்ளார். கொரோனா பரவலை சரி வர கட்டுப்படுத்த தவறியதால் அவரது பதவி பறிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மத்தியில் பாஜக தலைமையிலான அரசு அமைந்தது. இதன் பின்னர் 2 ஆண்டுகள் கழித்து மத்திய அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய பிரதமர் நரேந்திர மோடி விரும்பினார்.
இந்த நிலையில் மத்திய அமைச்சரவையில் இன்று மாலை விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. தற்போது ஒவ்வொரு அமைச்சர்களாக ராஜினாமா செய்து வருகிறார்கள்.

சந்தோஷ் கங்வார்
மத்திய அமைச்சர்களாக இருந்த ரமேஷ் பொக்ரியால், தாவர்சந்த் கெலாட், சந்தோஷ் கங்வார், சஞ்சய் தோத்ரே, தன்வி பாட்டீல் உள்ளிட்டோர் ராஜினாமா செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த ஹர்ஷவர்தன் ராஜினாமா செய்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏப்ரல் - மே மாதம்
ஏப்ரல்- மே மாதம் உச்சத்தில் இருந்த கொரோனா இரண்டாவது அலையை சரிவர கையாளவில்லை என்ற விமர்சனங்கள் ஹர்ஷவர்தன் மீது உள்ளது. மேலும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை, மருத்துவமனையில் படுக்கைகள், தடுப்பூசிகள் பற்றாக்குறையை போக்க எந்த நடவடிக்கையும் இவர் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

தோல்வியில் தடுப்பூசி திட்டம்
மத்திய சுகாதாரத் துறையின் கீழ் நடத்தப்படும் தடுப்பூசி திட்டமும் வெற்றிகரமாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டை அடுத்து அவரை ராஜினாமா செய்ய சொல்லியிருக்கலாம் என தெரிகிறது. இவருக்கு பதில் மத்திய சுகாதாரத் துறை பொறுப்பு யாருக்கு அளிக்கப்பட வாய்ப்பிருக்கிறது என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கொரோனா 3-வது அலை
கொரோனா 3-ஆவது அலை இன்னும் சில மாதங்களில் வரும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். இந்த ஆண்டுக்குள் இந்தியாவில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். கொரோனா வைரஸ், டெல்டா வேரியண்ட், தடுப்பூசி உள்ளிட்ட பிரச்சினைகளை சுமூகமாக கையாளக் கூடிய ஒருவருக்கு சுகாதாரத் துறை வழங்கப்படும் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications