மக்களே குட் நியூஸ்.. இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் குறைவுதான்.. ஆறுதல் கொடுக்கும் மத்திய அரசு!
டெல்லி: இந்தியாவில் தினசரி பாதிப்பு அதிகரித்து வரும் வேளையில் ஆறுதல்அளிக்கும்படியாக இறப்பு விகிதம் குறைந்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறியுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா மீண்டும் தனது வேலையை காட்டி வருகிறது. உலக நாடுகளில் தினசரி பாதிப்பில் முதல் இடம் பிடித்து மோசமான சாதனையை படைத்துள்ளது.
மீண்டும் அதிகரிக்கும் கொரோனா
இந்தியா. மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், உத்தரப்பிரதேசம், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு, குஜராத், கேரளா, பஞ்சாப் மற்றும் டெல்லி ஆகிய 10 மாநிலங்களில் மட்டும் நாட்டின் மொத்த பாதிப்பில் 84.21 சதவீதம் உள்ளன. இந்தியாவில் தினசரி பாதிப்பு அதிகரித்து வரும் வேளையில் ஆறுதல்அளிக்கும்படியாக இறப்பு விகிதம் குறைந்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.
இறப்பு விகிதம் குறைவு
கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து விவாதிப்பதற்காக நடந்த உயர்மட்ட அமைச்சர்கள் குழு கூட்டத்தில் ஹர்ஷ்வர்தன் கூறியதாவது:- நாட்டில் தினசரி பாதிப்பு அதிகரித்து வந்தாலும் இறப்பு விகிதம் குறைவாகவே உள்ளது. தற்போது இறப்பு விகிதம் 1.28 சதவீதமாக உள்ளது. தற்போது தீவிர நோயாளிகளில் 0.46 சதவீதம் பேர் வென்டிலேட்டர்களிலும், 2.31 சதவீதம் பேர் ஐ.சி.யுவிலும், 4.51 சதவீதம் பேர் ஆக்ஸிஜன் ஆதரவுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் இதுவரை 94,334,262 பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,691,511 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
தடுப்பூசி பெற்றவர்கள் யார், யார்?
கடந்த வாரம் ஒரு நாளைக்கு 43 லட்சம் டோஸ் அளவைக் கொடுத்தோம். இது உலகம் முழுவதும் வழங்கப்பட்ட அளவை விட அதிகபட்சமாகும். சுகாதாரப் பணியாளர்களைப் பொறுத்தவரை 89 லட்சத்துக்கும் அதிகமானோர் முதல் டோஸையும், 54 லட்சத்துக்கும் அதிகமானோர் இரண்டாவது டோஸையும் பெற்றுள்ளனர். முன்னணி பணியாளர்களை பொறுத்தவரை 98 லட்சத்துக்கும் அதிகமானோர் முதல் டோஸைப் பெற்றுள்ளனர், 45 லட்சத்துக்கும் அதிகமானோர் இரண்டாவது டோஸைப் பெற்றுள்ளனர்.
84 நாடுகளுக்கு ஏற்றுமதி
45 மற்றும் 59 வயதிற்குட்பட்டவர்களில் 2.61 கோடிக்கும் அதிகமான பேருக்கு முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளது. இரண்டாவது டோஸ் 523,268 பேர் பெற்றுள்ளனர். 60 வயதிற்கு மேற்பட்டவர்களில் 3.75 கோடிக்கும் அதிகமானோர் முதல் டோஸையும், 13 லட்சத்துக்கும் அதிகமானோர் இரண்டாவது டோஸையும் பெற்றுள்ளனர். இந்தியா இதுவரை 84 நாடுகளுக்கு 6.45 கோடி அளவுள்ள தடுப்பு மருந்துகளை ஏற்றுமதி செய்துள்ளது என்று ஹர்ஷ்வர்தன் கூறினார்.
ராகுல் காந்தி கேள்வி
இந்த நிலையில் இந்திய மக்களுக்கு தடுப்பூசி தட்டுப்பாடு உள்ள நிலையில் மத்திய அரசு தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது ஏன்? என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ' கொரோனா பாதிப்புகள் அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு தடுப்பூசி பற்றாக்குறை என்பது மிகவும் கடுமையான பிரச்சினை; கொண்டாட்டம் அல்ல. தடுப்பூசியை ஏற்றுமதி செய்து நமது நாட்டு மக்களை ஆபத்தில் ஆழ்த்துவது சரியானதா? எந்தவொரு சார்பு இல்லாமல் மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் உதவ வேண்டும். இந்த தொற்றுநோயை நாம் அனைவரும் ஒன்றாக எதிர்த்துப் போராட வேண்டும், அதைத் தோற்கடிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.