டெல்லிக்கு பெரிய சிக்கல்.. அடுத்த 3 நாட்கள் புரட்டி எடுக்க போகும் மழை.. யமுனையில் அதிகரித்த வெள்ளம்!
டெல்லி: யமுனை ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில் வடமாநிலங்களில் மழை தொடர்ந்து நீடிக்கும் என்று வானிலை மையம் வார்னிங் வெளியிட்டு உள்ளது.
டெல்லி, இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், ஜார்கண்ட், ஹரியானா மாநிலங்களில் கனமழை நீடிக்கும். அதேபோல் உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம் ஆகிய வட மாநிலங்களில் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 3 நாட்களுக்கு அதாவது 19ம் தேதி வரை கனமழை நீடிக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பஞ்சாப் மாநிலத்தில் இதுவரை 29 பேர் பலியாகி உள்ளனர்.

ஹரியானா மாநிலத்தில் 26 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். டெல்லியில் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டு உள்ளது. யானுமை ஆற்றில் நீரின் அளவு அதிகரித்து வரும் நிலையில் தொடர்ந்து மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.
இதனால் வெள்ளம் மேலும் அதிகரிக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. பருவமழை காரணமாக வட மாவட்டங்கள் பலவற்றில் வெள்ளம் ஏற்பட்டு உள்ளது. முக்கியமாக இமாச்சல பிரதேசம், சட்டீஸ்கர் போன்ற மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. இங்கே ஏற்பட்ட கனமழை காரணமாக யமுனை நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
டெல்லியில் பாயும் யமுனை நதியில் இதனால் வெள்ளம் ஏற்பட்டு நகரம் முழுக்க பல்வேறு இடங்களுக்குள் தண்ணீர் தேங்கி உள்ளது. நேரம் செல்ல செல்ல இங்கே வெள்ளத்தின் அளவு அதிகரிக்க தொடங்கி உள்ளது. அங்கே விடாமல் பெய்து வரும் மழை காரணமாககடந்த புதன்கிழமை பிற்பகல் டெல்லியின் பழைய ரயில்வே பாலத்தில் யமுனா அதன் அதிகபட்ச பதிவு செய்யப்பட்ட அளவான 207.49 மீட்டருக்கு மேல் உயர்ந்தது.
1982 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஜூலை மாதத்தில் ஒரே நாளில் அதிக மழையை டெல்லி பதிவு செய்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 8:30 மணி வரை 24 மணி நேரத்தில் தேசிய தலைநகரில் 153 மிமீ மழை பெய்தது, அதைத் தொடர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் 107 மிமீ மழை பெய்தது. அதிக மழை பெய்த ஜூலை மாதங்களில் இதுவும் ஒன்றாகும்.
டெல்லியில் ஏற்பட்டுள்ள மாபெரும் வெள்ளத்திற்கு இதுவும் முக்கிய காரணம் ஆகும். டெல்லியில் ஏற்பட்டுள்ள இந்த வெள்ளம் காரணமாக முக்கியமான சாலைகள் பல வெள்ளக்காடாகி உள்ளன. இந்த வெள்ளம் காரணமாக 26,000 க்கும் மேற்பட்ட மக்கள் டெல்லி அரசாங்கத்தால் மேம்பாலங்களின் கீழ் அமைக்கப்பட்டுள்ள நிவாரண கூடாரங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
பல பகுதிகளில் பேரிடர் மீட்புக் குழுக்கள் களமிறக்கப்பட்டு, வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த வெள்ளம் காரணமாக கடந்த ஐந்து நாட்களில், 342 ரயில்களின் அட்டவணை பாதிக்கப்பட்டுள்ளது. ஐதுவரை வடக்கு ரயில்வே 140 ரயில்களை ரத்து செய்துள்ளது.
தேசிய தலைநகரின் சில பகுதிகளில் மழை மற்றும் வெள்ளம் காரணமாக ₹200 கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. அங்கே வரும் ஞாயிற்றுக்கிழமை வரை மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. இன்று மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications