ஜார்க்கண்ட் முதல்வர் பதவிக்கு இவர்தான் பெஸ்ட்.. சோரனை நோக்கி கையைக் காட்டும் எக்சிட் போல் கணிப்பு!
டெல்லி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடத்தப்பட்ட எக்சிட் போல் கணிப்புகளில் முதல்வர் பதவிக்கு ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா செயல் தலைவர் ஹேமந்த் சோரனின் பெயரே முதலிடத்தைப் பிடித்துள்ளது.
ஜார்க்கண்ட் வாக்காளர்கள் அதிகம் விரும்பும் முதல்வர் வேட்பாளராக சோரன் உருவெடுத்துள்ளார். நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சிகளுடன் கூட்டணி வைத்து ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா போட்டியிட்டது. இந்தக் கூட்டணியே ஆட்சியைப் பிடிக்கும் என்று நடத்தப்பட்ட எக்சிட் போல் கணிப்புகள் அனைத்துமே திட்டவட்டமாக கூறி விட்டன.

காங்கிரஸ் கூட்டணியில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாதான் அதிக இடங்களைப் பெறும் என்றும் தெரிய வந்துள்ளது. அதேசமயம், பாஜகவை விட காங்கிரஸ் கட்சி தனிப்பட்ட முறையில் குறைந்த இடங்களிலேயே வெல்லும் சூழல் உள்ளதாகவும் எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் இந்தியா டுடே ஏக்சிஸ் மை இந்தியா நடத்திய கருத்துக் கணிப்பில் முதல்வர் வேட்பாளராக ஹேமந்த் சோரன் முதலிடம் பிடித்துள்ளார். அவருக்கு ஆதரவாக 29 சதவீத வாக்காளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தற்போதைய பாஜக முதல்வர் ரகுபர் தாஸ் 26 சதவீத வாக்குகளுடன் 2வது இடத்தில் உள்ளார். முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா தலைவருமான பாபுலால் மராண்டி 10 சதவீத ஆதரவுடன் 3வது இடத்தில் உள்ளார்.
இந்தத் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிட்டது. ஆனால் காங்கிரஸ் கட்சி வலுவான கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. இதனால் பாஜக ஆட்சியை இழக்கும் அபாயத்தில் உள்ளது. அதேசமயம், தேர்தல் முடிவுக்குப் பின்னர் பாஜகவும், பாபுலால் மராண்டியும் கூட்டணி வைக்கும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் 5 கட்டமாக சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. இதில் மொத்தமாக 71 சதவீத வாக்குகள் பதிவாகின. பதிவான வாக்குகள் டிசம்பர் 23ம் தேதி திங்கள்கிழமை எண்ணப்படவுள்ளன.












Click it and Unblock the Notifications