செந்தில் பாலாஜி குறித்து நீதிபதி கேட்ட அந்த நறுக் கேள்வி ! சுப்ரீம் கோர்ட்டில் பரபரத்த வாதங்கள்
டெல்லி: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது நாளை தீர்ப்பு வழங்கப்படவுள்ள நிலையில் அந்த வழக்கில் இதுவரை நடந்த முக்கிய வாதங்கள் குறித்து பார்ப்போம்.
கடைசியாக இந்த வழக்கின் வாதங்கள் ஆகஸ்ட் மாதம் நடந்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அப்போது டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் வழக்கில் அவருக்கு ஜாமீன் கிடைத்ததை மேற்கோள்காட்டி செந்தில் பாலாஜி தரப்பும் இந்த வழக்கில் வாதம் செய்தது.

தமிழக மின்சார துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் மாதம் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்டார். ஓராண்டுக்கு மேலாகியும் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்கவில்லை.
அவரது ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும் சென்னை உயர்நீதிமன்றமும் தள்ளுபடி செய்துவிட்ட நிலையில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா அமர்வில் கடந்த மாதம் விசாரணைக்கு வந்தது.
அப்போது செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, வழக்குக்கு சம்பந்தமில்லாத வாதங்களை எல்லாம் அமலாக்கத் துறை முன் வைக்கிறது என்றார். அப்போது அமலாக்கத் துறை, செந்தில் பாலாஜிக்கு மாநில அரசு உதவி வருகிறது. இந்த வழக்கை 3 மாதங்களில் முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் தற்போது வரை முடிக்கவில்லை. இதில் செந்தில் பாலாஜி தரப்பில் 13 முறை இந்த வழக்கை ஒத்திவைக்க கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அமலாக்கத் துறை ஒரு முறை கூட அவ்வாறு கேட்டதில்லை. எனவே விசாரணை தாமதமாவது குறித்து தனியாக நாங்கள் அறிக்கை தாக்கல் செய்யவுள்ளோம் என வாதிட்டனர்.
அப்போது செந்தில் பாலாஜி தரப்பு, இந்த வழக்கின் விசாரணை எப்போது நிறைவடையும் என கேட்கும் நிலைக்கு அமலாக்கத் துறை உள்ளது. ஆனால் மனுதாரருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கை, விசாரணையே தொடங்காத நிலையில் அவரை எத்தனை நாட்களுக்கு சிறையில் வைத்திருக்க முடியும். 13 மாதங்களாக சிறையில் செந்தில் பாலாஜி இருந்து வருகிறார்.
பிஎம்எல்ஏ சட்ட பிரிவில் ஜாமீன் வழங்கக் கூடாது என்ற விதி இல்லை. அமலாக்கத் துறை தாமதமாகவே ஆவணங்களை கொடுத்தது என செந்தில் பாலாஜி தரப்பு வாதிட்டது. அப்போது அமலாக்கத் துறை, செந்தில் பாலாஜிக்கு எம்எல்ஏவாக இருப்பதாக செல்வாக்குமிக்க நபராக உள்ளார். எனவே அவர் வழக்கு தொடர்புடைய சாட்சியங்களை அழிக்க வாய்ப்புள்ளது. அவருக்கு ஜாமீன் கொடுக்கக் கூடாது என்றது.
அதற்கு செந்தில் பாலாஜி தரப்போ, செந்தில் பாலாஜி தற்போது எந்த பதவியிலும் வகிக்கிவல்லை. எனவே அமலாக்கத் துறை சொல்வது போல் அவரால் எந்த சாட்சிகளையும் கலைக்கவும் முடியாது, விசாரணையில் தனது செல்வாக்கை பயன்படுத்தவும் முடியாது என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி ஓகா, செந்தில் பாலாஜி தற்போது அமைச்சராக இல்லை என்பதால் அவரால் அமலாக்கத் துறை விசாரணையில் குறுக்கிட முடியாது என்கிறீர்கள். அப்படியென்றால் செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்தால் தனது செல்வாக்கை பயன்படுத்தி அமலாக்கத் துறை விசாரணையை ஒன்றுமில்லாமல் ஆக்க முடியுமா என நீதிபதி ஓகா கேள்வி எழுப்பினார்.
அதாவது அமைச்சராக இல்லாததால் அவரால் சாட்சிகளை கலைக்க முடியாதுனு சொல்றீங்களே, ஒரு வேளை அவர் அமைச்சராக இருந்தால் சாட்சிகளை விலைக்கு வாங்கி, விசாரணைக்கு முட்டுக் கட்டை போட முடியுமா? என முகுல் ரோத்தகியிடம், நீதிபதி கிண்டலாக கேட்டார்.
இதைத் தொடர்ந்து செந்தில் பாலாஜியின் வழக்கை விசாரிக்க விடாமல் தாமதப்படுத்தியது தமிழக அரசுதான் என அமலாக்கத் துறை குற்றம்சாட்டியது. அப்போது நீதிபதி செந்தில் பாலாஜி வழக்கை விரைவுப்படுத்த தமிழக அரசு முட்டுக்கட்டை போடுவது ஏன்? செந்தில் பாலாஜி வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி, வழக்கின் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். செந்தில் பாலாஜி வழக்கின் விசாரணைக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி நிலுவையில் வைத்தது ஏன்? கோப்புகளுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் 6 மாதமாக காலம் தாழ்த்தியது ஏன் என நீதிபதி பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார்.
இந்த நிலையில் இந்த ஜாமீன் வழக்கில் நாளை உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. எனவே செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications