போச்சே.. குலாம் நபி ஆசாத்தை திடீரென சந்தித்த ஆனந்த் சர்மா.. காங்கிரசில் அடுத்த விக்கெட்? பின்னணி
டெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத் சமீபத்தில் கட்சியைவிட்டு விலகிய நிலையில், அவரை நேரில் சென்று சந்தித்துள்ளார் அக்கட்சியின் முன்னாள் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா.
இமாச்சலப் பிரதேசத்தின் காங்கிரஸ் கட்சியினுடைய வழிகாட்டுதல் குழுவின் முன்னாள் தலைவரான ஆனந்த் சர்மா சில தினங்களுக்கு முன்னர் கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அறிவித்திருந்தார்.
இவ்வாறு கட்சியின் முக்கிய பொறுப்புகளிலிருந்து விலகியவர்கள் நேரில் சந்திந்து கலந்துரையாடியுள்ள நிகழ்வு காங்கிரஸ் கட்சியில் மீண்டும் விவாதங்களை கிளப்பியுள்ளது.
நாட்டின் சுதந்திரத்திற்கு போராடிய கட்சிகளில் காங்கிரஸ் முக்கியமானதாக கருதப்படுகிறது. அதன் அடிப்படையில் இந்தியாவை சுதந்திரத்திற்கு பிறகு நீண்ட காலம் ஆட்சி செய்த கட்சியாக காங்கிரஸ் திகழ்கிறது. ஆனால் கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் இந்த நிலை தலைகீழாக மாறியது. கட்சியின் செல்வாக்கு நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் சரிவை நோக்கி சென்றுள்ளது. இந்நிலையில் தற்போது கட்சியின் முக்கிய தலைவர்கள் தொடர்ந்து ராஜினாமா செய்து வருகின்றனர்.
கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை தழுவியதையடுத்து கட்சியை மறுசீரமைக்க வேண்டும் என கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட பல 23 தலைவர்கள் கட்சியின் தலைமைக்கு கடிதம் எழுதி வலியுறுத்தினர். அப்போதிலிருந்து கட்சிக்குள் பெரும் சலசலப்புகள் நீடித்தது வருகின்றன. இதன் தொடர்ச்சியாக இமாச்சல பிரதேச காங்கிரஸ் கட்சியின் வழிகாட்டுதல் குழு தலைவர் பொறுப்பில் இருந்து அக்கட்சியின் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா திடீரென ராஜினாமா செய்தார்.
தான் காங்கிரஸில் 51 ஆண்டுகள் இருந்த போதும் சீனியர் என்ற முறையில் தம்மிடம் எதையுமே ஆலோசிக்காமல் அவமானப்படுத்தப்பட்டிருப்பதாக ஆனந்த் சர்மா கூறியுள்ளார். இதற்கு முன்னதாக ஜம்மு காஷ்மீர் தேர்தல் பிரசாரக் குழுத் தலைவராக அண்மையில் குலாம் நபி ஆசாத் நியமிக்கப்பட்டார். ஆனால் இவ்வாறு நியமிக்கப்பட்ட உடனே அவர் ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதனையடுத்து கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் வெளியேறுவதாக அவர் அறிவித்து சோனியா காந்திக்கு கடிதமும் எழுதியிருந்தார்.
இவருக்கு ஆதரவாக ஜம்முவின் காங்கிரஸ் முகமாக அறியப்படுகிற மற்றொரு மூத்த தலைவரான ஆர்எஸ் சிப் மற்றும் 5 முன்னாள் எம்எல்ஏக்களும் கட்சியை விட்டு விலகினர். இந்த விவகாரங்கள் கட்சியினுள் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது ஆசாத்தை இமாச்சல பிரதேச காங்கிரஸ் கட்சியின் வழிகாட்டுதல் குழு முன்னாள் தலைவர் ஆனந்த் சர்மா நேரில் சென்று சந்தித்துள்ளார். டெல்லியில் உள்ள ஆசாத்தின் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பு சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்ததாக சொல்லப்படுகிறது.
இந்த சந்திப்பின்போது உடன் ஆர்எஸ் சிப் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்தடுத்து முக்கிய தலைவர்கள் பலர் கட்சியை விட்டும், கட்சியின் பொறுப்புகளை விட்டும் விலகுவது கட்சிக்குள் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த சந்திப்பு முக்கியமானதாக கருதப்படுகிறது.