ஹிண்டன்பர்க்: செபி தலைவருக்கு எதிராக நாடு முழுவதும் ஆக.22-ல் காங்கிரஸ் போராட்டம்- அதிரடி அறிவிப்பு!
டெல்லி: ஹிண்டன்பர்க் அறிக்கை விவகாரத்தை முன்வைத்து செபி தலைவர் மாதவி புரி புச் பதவி விலக வலியுறுத்தி நாடு முழுவதும் ஆகஸ்ட் 22-ந் தேதி போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன தலைமையிலான மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர்கள், பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அதானி குழுமத்தின் பங்குச் சந்தை முறைகேடுகள் தொடர்பாக அண்மையின் அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் நிறுவனம் அதிர்ச்சி தரக் கூடிய ஆய்வறிக்கையை வெளியிட்டது. அதில் இந்திய பங்குச் சந்தைகள் ஒழுங்காற்று அமைப்பான செபியின் தலைவர் மாதவி புரி புச் மற்றும் அவரது கணவர் அதானி குழுமத்தின் பல போலியான நிறுவனங்களில் பங்குகளை வைத்திருந்தது அம்பலப்படுத்தப்பட்டிருந்தது.

செபி தலைவருக்கு எதிரான ஹிண்டன்பர்க்கின் இந்த அறிக்கை பெரும் புயலைக் கிளப்பி இருக்கிறது. ஆனாலும் செபி தலைவர் மாதவி புரி புச் மற்றும் அதானி குழுமங்கள் இந்த குற்றச்சாட்டுகளை வழக்கம் போல மறுத்துள்ளன. ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனமும் இதற்கு பதிலடி கொடுத்துள்ளது.
இந்த நிலையில் டெல்லியில் இன்று காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் அனைத்து மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர்கள், பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் செபி தலைவர் மாதவி புரி புச் பதவி விலகக் கோரி நாடு முழுவதும் ஆகஸ்ட் 22-ந் தேதி போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.
இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் காங்கிரஸ் பொதுச்செயலாலர் கேசி வேணுகோபால் கூறியதாவது: டெல்லியில் இன்று காங்கிரஸ் பொதுச்செயலாளர்கள், பொறுப்பாளர்கள், மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமை வகித்தார்.
இன்றைய கூட்டத்தில் நாட்டின் மிகப் பெரிய ஊழலான அதானி மற்றும் செபி தலைவர் மாதவி புரி புச் தொடர்பான ஹிண்டன்பர்க் அறிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதனையடுத்து நாடு தழுவிய போராட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டது. அதானி குழுமத்தின் பங்குச் சந்தை முறைகேடு தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்த வேண்டும்; செபி தலைவர் மாதவி புரி புச் பதவி விலக வேண்டும். இந்த கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து மாநில தலைநகரங்களிலும் அமலாக்கத்துறை அலுவலகம் முன்பாக ஆகஸ்ட் 22-ந் தேதி போராட்டம் நடத்தவும் முடிவெடுக்கப்பட்டது. இவ்வாறு கேசி வேணுகோபால் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications