ராகுலின் பிஏ கூட முடிவு எடுக்குறாங்க.. சீனியர்களை அசிங்கப்படுத்திவிட்டார்.. போட்டு தாக்கிய குலாம் நபி
டெல்லி: காங்கிரஸ் கட்சிக்குள் ராகுல் காந்தி தலைமை பொறுப்பிற்கு வந்த பின்புதான் எல்லாம் மோசமாக மாறியது, அவரின் பிஏ கூட கட்சியில் முக்கிய முடிவுகளை எடுக்கிறார் என்று காங்கிரசில் இருந்து வெளியேறி உள்ள குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும், காஷ்மீர் முன்னாள் முதல்வருமான குலாம் நபி ஆசாத் காங்கிரஸ் கட்சியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.
காங்கிரஸ் கட்சிக்குள் நேரு குடும்பத்தை சேராத ஒருவர் தலைவராக வர வேண்டும் என்று இவர் கோரிக்கை விடுத்து வந்தார். காங்கிரஸ் கட்சியில் சோனியாவிற்கு எதிராக திரும்பிய ஜி 23 தலைவர்களில் இவர் முக்கியமானவராக இருந்தார்.
சோனியா காந்திக்கு எதிராக இவர் கட்சி கூட்டங்களில் பேசியதாகவும் கூறப்பட்டது. சோனியா காந்தியும் இவருக்கு முக்கிய பதவிகள் தராமல் ஓரம்கட்டி வந்ததாக கூறப்பட்டது.
பாஜக பிரமுகரை கொல்ல முயற்சி.. கைதாகி ஜாமினில் வந்த காங்கிரஸ் கவுன்சிலருக்கு பாலாபிஷேகம்..
குலாம் நபி ஆசாத்
கட்சி தலைமையுடன் கடந்த சில மாதங்களாக மனஸ்தாபத்தில் இருந்த குலாம் நபி ஆசாத் தற்போது கட்சியில் இருந்தே விலகி உள்ளார். இது தொடர்பாக அவர் எழுதி உள்ள கடிதத்தில், நான் காங்கிரஸ் கட்சியில் 1970 களில் சேர்ந்தேன். காங்கிரஸ் கட்சியில் பல காலமாக நான் உறுப்பினராக இருந்தேன் . ஆனால் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சிக்குள் வந்த பின் கட்சியின் நிலை மாறியது. 2013ல் காங்கிரசின் துணை தலைவராக ராகுல் காந்தி நியமிக்கப்பட்டார்
காங்கிரஸ்
அதற்கு முன் காங்கிரசில் இருந்த முறைகள், வழக்கங்கள் அவரால் உடைக்கப்பட்டன. காங்கிரசில் நிர்வாகிகள் கலந்தாலோசிக்கும் பழக்கத்தையே அவர் உடைத்துவிட்டார். ராகுல் காந்தி வருகையால் மூத்த தலைவர்கள் ஓரம்கட்டப்பட்டனர் . அனுபவமில்லாத துதி பாடுவோர் கூட்டம் கட்சியை நடத்த தொடங்கியது. அவரின் குழந்தை தனமான நடவடிக்கைகள் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கே களங்கம் விளைவிக்கும் வகையில் இருந்தது.
சோனியா காந்தி
2014ல் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைய அவரின் செயல்பாடுகள் முக்கிய காரணமாக இருந்தது. இடதுசாரிகள், சில கார்பரேட் நிறுவனங்களுக்கு இவரின் குழந்தைத்தனமான செயல்கள் வசதியாக மாறியது. காங்கிரஸ் கட்சியில் இதற்கு முன் நடந்த கூட்டங்களில் எடுக்கப்பட்ட ஆக்கபூர்வமான முடிவுகள் எதுவும் அமலுக்கு வரவில்லை. 2014 தேர்தலுக்கு முன் கட்சியில் செய்ய வேண்டிய மாற்றங்கள் என்று எடுக்கப்பட்ட முடிவுகள் கூட அமலுக்கு வரவில்லை.
ராகுல் காந்தி
கடந்த 9 வருடங்களாக பல்வேறு முக்கிய முடிவுகள் அமலுக்கு வரவில்லை. அந்த முடிவுகளை சோனியாவும், ராகுலும் சீரியசாக கூட எடுத்துக்கொள்ளவில்லை. இரண்டு லோக்சபா தேர்தல்களை மிக மோசமான முறையில் நாம் இழந்தோம். 39, 49 என்று மிக குறைவான இடங்களை மட்டுமே நாம் பெற்றோம். காங்கிரஸ் இப்போது இரண்டு மாநிலங்களில் மட்டுமே தனியாக ஆட்சி செய்கிறது. இன்னும் இரண்டில் கூட்டணியில் குறைவான எம்எல்ஏக்களுடன் ஆட்சியில் உள்ளது.
அட்டாக்
அதன்பின் தொடர் தோல்விகளால் ராகுல் காந்தி தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். அப்போது கூட மூத்த தலைவர்களை அசிங்கப்படுத்திவிட்டே அவர் ராஜினாமா செய்தார். அதன்பின் சோனியா காந்தி இடைக்கால தலைவராக வந்தார். முன்பு காங்கிரஸ் ஆளும் போது இருந்த ரிமோட் கண்ட்ரோல் மோட் மீண்டும் கட்சிக்குள் அமலுக்கு வந்துள்ளது. சோனியா பெயருக்கு தலைவராக இருந்தாலும் எல்லா முடிவுகளும் ராகுல் காந்தி மூலமே எடுக்கப்பட்டு வந்தது.
சமயங்களில் அவரின் பாதுகாவலர், பிஏ கூட முடிவுகளை எடுத்தனர், என்று குலாம் நபி ஆசாத் குற்றஞ்சாட்டி உள்ளார். காங்கிரஸ் கட்சிக்குள் ராகுல் காந்தி தலைமை பொறுப்பிற்கு வந்த பின்புதான் எல்லாம் மோசமாக மாறியது, அவரின் பிஏ கூட கட்சியில் முக்கிய முடிவுகளை எடுக்கிறார் என்று காங்கிரசில் இருந்து வெளியேறி உள்ள குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.