வரலாற்று வெற்றி டெல்லியில்.. கைகளை இழந்த பெண் மறுபிறவி அதிசயம்! மெய்சிலிர்க்க வைத்த ஆபரேஷன்
டெல்லி: விதியின் கோரப்பிடியில் சிக்கி, தன் இரு கைகளையும் இழந்து, இனி வாழ்நாள் முழுவதும் மற்றவர்களின் உதவியின்றி ஒரு பருக்கை சாப்பாட்டைக்கூட சாப்பிட முடியாது என்று முடங்கிப் போயிருந்த ஒரு பெண்ணின் வாழ்வில், அந்த நள்ளிரவு போன்கால், ஒட்டுமொத்த மாற்றத்தையும் கொண்டு வந்தது. டெல்லியின் புகழ்பெற்ற சர் கங்கா ராம் மருத்துவமனையில் சமீபத்தில் அரங்கேறிய அந்தச் சம்பவம், வெறும் மருத்துவச் சிகிச்சை அல்ல, அது ஒரு மனித உயிரின் மீட்சிக்கான போராட்டம் என்றே சொல்லலாம். அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்..!!!
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் அந்தப் பெண்.. கடந்த 2022-ம் ஆண்டு நிகழ்ந்த ஒரு கோரமான ரயில் விபத்தில் தனது 2 கைகளையும் இழந்துவிட்டார்.. முழங்கைக்குக் கீழ் கைகள் துண்டிக்கப்பட்ட நிலையில், அன்றாட வாழ்வின் சிறு தேவைகளுக்கும் அடுத்தவரை சார்ந்து வாழ்வது அவரை மனதளவில் சிதைத்து வந்தது.

ஆனால், மனிதாபிமானம் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது என்பதற்குச் சான்றாக, மற்றொரு புறம் ஒரு துயரமான சம்பவம் ஒரு நம்பிக்கைக் கீற்றை உருவாக்கியது.
டெல்லியை சேர்ந்த ஒரு நபர் விபத்து ஒன்றில் சிக்கி, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். துரதிர்ஷ்டவசமாக, மருத்துவர்கள் அவர் 'மூளைச்சாவு' அடைந்துவிட்டதாக உறுதிப்படுத்தினார்கள்..
மின்னல் வேகத்தில் நடந்த ஆபரேஷன்
அந்தப் பேரிடியைத் தாங்கிக்கொண்ட அவரது குடும்பத்தினர், ஒரு உன்னதமான முடிவை எடுத்தனர். "எங்கள் உறவினரின் உடல் மண்ணோடு மண்ணாவதை விட, சிலரது வாழ்வை மாற்றட்டுமே" என்று கூறி, அவரது இதயம், கல்லீரல், சிறுநீரகங்களுடன் சேர்த்து கைகளையும் தானம் செய்ய முன்வந்தனர். இது தொடர்பான சட்ட ரீதியான ஒப்புதல்கள் மற்றும் மருத்துவ ஆய்வுகள் மின்னல் வேகத்தில் முடிக்கப்பட்டன.
தகவல் கிடைத்த அடுத்த நிமிஷமே, மருத்துவமனையின் பிளாஸ்டிக் மற்றும் காஸ்மெடிக் அறுவை சிகிச்சைத் துறைத் தலைவர் டாக்டர் மகேஷ் மங்கள் தலைமையிலான 11 நிபுணர்கள் மற்றும் 20-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் அடங்கிய குழு தயார் நிலையில் நிறுத்தப்பட்டது. காவல்துறை உதவியுடன் 'கிரீன் காரிடார்' (Green Corridor) அமைக்கப்பட்டு, தானமாக பெறப்பட்ட கைகள் உரிய பாதுகாப்புடன் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டன.
ஆபரேஷன் அறையின் விளக்குகள் எரிந்தன. சுமார் 12 மணி நேரம் இடைவிடாது நடந்த அந்த சிக்கலான கை மாற்று அறுவை சிகிச்சையில், ஒவ்வொரு நரம்பும், ஒவ்வொரு ரத்த நாளமும் மிக நுணுக்கமாக இணைக்கப்பட்டன.
முதல்முறை சக்ஸஸ் - ஒளி பாய்ச்சிய கரங்கள்
அக்கம்பக்கத்தினர் மற்றும் அந்தப் பெண்ணின் உறவினர்கள் அறுவை சிகிச்சை அறைக்கு வெளியே தவமாய் தவம் கிடந்தனர். ஒவ்வொரு நிமிடமும் தவித்தபடியே இருந்தனர்.. விடியற்காலையில் ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்ததாக டாக்டர்கள் அறிவித்தனர்..
அப்போது அங்கு நிலவியது வெறும் மகிழ்ச்சி மட்டுமல்ல, மருத்துவ அறிவியலின் மீதான பெரும் பிரமிப்பு என்றே சொல்லலாம். டெல்லியில் இத்தகைய சிக்கலான "பைலேட்டரல் ஹேண்ட் டிரான்ஸ்பிளான்ட்" வெற்றிகரமாக முடிக்கப்பட்டது இதுவே முதல்முறை என்கிறார்கள்.
இப்போது அந்தப் பெண் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார். அவருக்குப் பொருத்தப்பட்ட கைகளில் ரத்த ஓட்டம் சீராக இருப்பதை உறுதி செய்துள்ள மருத்துவர்கள், இன்னும் சில வாரங்களில் அவர் தனது விரல்களை அசைக்கத் தொடங்குவார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
வரலாற்றில் பொற்காலம்
"இது ஒரு மிகப்பெரிய சவால். எலும்புகளை இணைப்பது எளிது, ஆனால் நரம்புகளையும் தசைநார்களையும் இணைத்து, ரத்த ஓட்டத்தைச் சீராக்குவது என்பது நூலிழை போன்ற நுட்பமான வேலை," என்று அறுவை சிகிச்சையில் பங்கேற்ற டாக்டர்கள் சொல்கிறார்கள்..
அதுமட்டுமல்ல இதுபோன்ற ஆபரேஷனுக்கு பல லட்சக்கணக்கான ரூபாய் செலவு ஆகும்.. ஆனாலும் மருத்துவமனை மற்றும் சில காப்பீட்டுத் திட்டங்களின் உதவியுடன் இது சாத்தியமாகி உள்ளது.
ஒருவரின் முடிவு, மற்றொருவருக்கு புதிய தொடக்கமாக அமைந்த இந்த சம்பவம், இந்திய மருத்துவ வரலாற்றில் ஒரு பொற்காலமாகப் பதிவாகியுள்ளது. இருள் சூழ்ந்த அந்தப் பெண்ணின் வாழ்வில், அடையாளம் தெரியாத அந்த நபரின் கைகள் இனி புதிய சரித்திரம் படைக்கப்போகின்றன.. ஆல் தி பெஸ்ட்!!












Click it and Unblock the Notifications