பிரதமர் மோடி பங்கேற்ற அனைத்து கட்சி கூட்டத்தில்.. இவைதான் விவாதிக்கப்பட்டது.. டிஆர் பாலு பளிச்
டெல்லி: 19 நாட்கள் மட்டுமே நடைபெறும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் 31 மசோதாக்களை எப்படி விவாதிக்க முடியும் எனக் கேள்வி எழுப்பிய டி ஆர் பாலு, நீட் தொடங்கி விலைவாசி உயர்வு வரை 13 பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்பவுள்ளதாகத் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் வரும் நாளை முதல் வரும் ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாகத் தகுந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கையுடன் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறுகிறது.

ஆலோசனைக் கூட்டம்
இந்தநிலையில், மழைக்கால கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து ஆலோசிக்க நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தலைமையில் இன்று டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடியும் பங்கேற்றார். மேலும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். இதில் திமுக சார்பில் அக்கட்சியின் மக்களவை குழு தலைவர் டிஆர் பாலு, மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா ஆகியோர் பங்கேற்றனர்.

19 நாட்களில் 31 மசோதா
இந்த கூட்டம் முடிந்த செய்தியாளர்களிடம் பேசிய டி ஆர் பாலு, "19 நாட்கள் மட்டுமே நடைபெற உள்ள நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் 31 மசோதாக்களை எப்படி விவாதிக்க முடியும். இதற்காக எதிர்க்கட்சி தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசும் நேரம் குறைக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் காரணமாகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, எல்லைப் பகுதியில் சீனாவின் நடவடிக்கை ஆகிய மூன்று பிரச்சினை குறித்து முக்கியமாகக் கேள்வி எழுப்பவுள்ளோம்.

கவன ஈர்ப்பு தீர்மானங்கள்
மேலும், தமிழ்நாடு நலன் குறித்த பிரச்சினைகளையும் நாடாளுமன்றத்தில் எழுப்பவுள்ளோம். நீட் தேர்வில் விலக்கு, மருத்துவ படிப்புகளில் ஆல் இந்தியா கோட்டாவில் ஒபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு, மேகதாது என மூன்று கவன ஈர்ப்பு தீர்மானங்களைக் கொண்டு வரவுள்ளோம். மேகதாது விவகாரத்தில் கர்நாடக முதல்வரிடம் ஒரு மாதிரியும், தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சரிடம் வேறு மாதிரியும் பேசுகிறார்கள். எனவே நாடாளுமன்றத்தில் இது குறித்து மத்திய அமைச்சர்கள் விளக்கம் தரட்டும்.

13 பிரச்சினைகள்
ஒவ்வொரு முறையும் கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ்களை விவாதத்துக்கு எடுக்காமல் விட்டுவிடுகின்றனர். ஆனால் இந்த முறை அப்படி நடக்க அனுமதிக்க மாட்டோம். மேலும் பல மாதங்களாக நடைபெறும் விவசாயிகள் போராட்டம், தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகை, நியூட்ரினோ, பொருளாதார வீழ்ச்சி, ஸ்டேன் சுவாமி மரணம் உள்ளிட்ட 13 பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்பவுள்ளோம். இவை குறித்து தான் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பேசப்பட்டது" என்றார்.












Click it and Unblock the Notifications