ரூ.1200 கோடி லண்டன் மாளிகை! ஒரே பேமெண்டில் வாங்கிய இந்திய பிரபலம்! பின்னால் இருக்கும் ரஷ்யா கனெக்ஷன்
டெல்லி: இந்தியாவின் டாப் பெரும் பணக்காரர்களில் ஒருவர், பிரிட்டன் நாட்டில் 1200 கோடியில் சொகுசு பங்களாவை வாங்கியுள்ளார். பிரிட்டனில் சமீப ஆண்டுகளில் நடந்த மிகப் பெரிய முதலீடாக இது பார்க்கப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளில், அதிலும் கொரோனாவுக்கு பிறகு, இந்தியாவில் இருக்கும் பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு பல மடங்கு அதிகரித்துவிட்டது. இதனால் அவர்கள் வெளிநாடுகளில் முதலீடுகளைச் செய்து வருகின்றனர்.

அப்படி இந்தியர்கள் விரும்பி முதலீடு செய்யும் நாடுகளில் ஒன்றாகப் பிரிட்டன் இருக்கிறது. இதற்கிடையே இந்தியாவைச் சேர்ந்த பிரபலம் ஒருவரைப் பிரிட்டனையே வியக்க வைக்கும் மெகா டீலிங்கை சத்தமின்றி முடித்துள்ளார்.
இந்தியப் பிரபலம்: நமது நாட்டின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான ரவி ரூயா, லண்டனில் பிரம்மாண்ட மாளிகை ஒன்றை வாங்கியுள்ளார். $145 மில்லியன் அதாவது இந்திய மதிப்பில் ரூ.1200 கோடி கொடுத்து அவர் இந்த லண்டன் மாளிகையை வாங்கியுள்ளார். பிரிட்டன் நாட்டில் கடந்த சில ஆண்டுகளில் நடந்த மிகப் பெரிய ரியல் எஸ்டேட் டீலிங்காக இது கருதப்படுகிறது.
ரஷ்ய முதலீட்டாளர் ஆண்ட்ரே கோன்சரென்கோவுடன் தொடர்புடைய நிறுவனத்தில் இருந்து இதை அவர் வாங்கியுள்ளார். பிரிட்டனின் 150 பார்க் ரோட்டில் உள்ள ரீஜண்ட்ஸ் பூங்கா அருகே அமைந்துள்ள இந்த மாளிகையை அவர் இந்த மாதம் தான் வாங்கியுள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்ய அரசின் எரிசக்தி நிறுவனமான காஸ்ப்ரோம் இன்வெஸ்ட் யுகின் முன்னாள் சிஇஓ கோன்சரென்கோவிடம் தான் இந்த மாளிகை இருந்தது.
ரஷ்யா கனெக்ஷன்: ரஷ்யாவைச் சேர்ந்த இந்த கோன்சரென்கோ கடந்த 2012ஆம் ஆண்டில் அங்குள்ள கன்சர்வேடிவ் கட்சியின் ராஜ்குமார் என்பவரிடமிருந்து 120 மில்லியன் பவுண்டுகளுக்கு கொடுத்து இந்த மாளிகையை லீஸுக்கு எடுத்திருந்தார்.. லீஸ் காலம் முடிந்த நிலையில், இப்போது ரவி ரூயா இந்த மாளிகையை வாங்கியுள்ளார்.
கொரோனாவுக்கு பிறகு பல இடங்களில் K Shape recovery நடந்து வருகிறது. அதாவது பணக்காரர்கள் மேலும் மேலும் பணக்காரர்கள் ஆகி வருகின்றனர். அதேநேரம் ஏழைகள் மிகவும் ஏழைகள் ஆகி வருகிறார்கள். உலகளவில் 250 கோடிக்கும் மேல் சொத்து வைத்திருக்கும் சுமார் 17% பேர் கடந்த சில ஆண்டுகளில் குறைந்தது ஒரு வீட்டையாவது வாங்கியுள்ளனராம். இதுவே சமூகம் எப்படிப் பிளவுபட ஆரம்பித்துள்ளது என்பதையே காட்டுகிறது.
வெளிநாட்டு முதலீடுகள்: பிரிட்டன் நாட்டில் வெளிநாடுகளில் இருந்து பல நிறுவனங்களும் தனிநபர்களும் முதலீடு செய்துள்ளனர். இதற்கு எந்தவொரு வரைமுறையும் இல்லாமல் இருந்ததாகக் குற்றச்சாட்டு இருந்து கொண்டே இருந்தது. அதிலும் உக்ரைன் போருக்குப் பிறகு, ரஷ்ய முதலீடுகள் குறித்து பலரும் கேள்வி எழுப்பினர். அதன் பின்னரே வெளிநாட்டு முதலீடுகள், குறிப்பாக ரஷ்ய முதலீடுகளை முடக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
பிரிட்டனின் எடுக்கும் நடவடிக்கையில் இந்த மாளிகையை முன்பு வைத்திருந்த கோன்சரென்கோ பெயர் இல்லை.. இருந்த போதிலும், அவர் திடீரென இந்த மாளிகையின் லீஸை முடித்துக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ரஷ்யா மட்டுமின்றி சீனாவும் லண்டனில் மிகப் பெரிய முதலீடுகளைச் செய்துள்ளன. அங்குள்ள பல குடியிருப்புகள், அடுக்குமாடி கட்டிடங்களில் சீனா நேரடியாகவோ மறைமுகமாகவோ முதலீடு செய்துள்ளன. பிரிட்டனில் சீனா செய்துள்ள முதலீடுகள் குறித்து பிரிட்டன் நாடாளுமன்ற குழுவும் கூட கவலை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications