அயோத்தி விவகாரம்.. மத்தியஸ்த குழு விசாரணை நடைமுறை என்ன?
டெல்லி: அயோத்தியில், சர்ச்சைக்குரிய இடப்பங்கீடு விவகாரத்தில் 3 பேர் கொண்ட மத்தியஸ்தர் குழுவை உச்ச நீதிமன்றம் அமைந்துள்ளது.
முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி இப்ராஹிம் கலிஃபுல்லா தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவில் வாழும் கலை தலைவர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். உத்தர பிரதேச மாநிலம் பைசாபாத்திலிருந்து இந்த குழு செயல்படும்.

மார்ச் 15ம் தேதி முதல் விசாரணை துவங்கும். முதல்க்கட்ட அறிக்கை 4 வாரத்திற்குள் சமர்பிக்கப்பட வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நீதிமன்றத்திற்கு வெளியே பிரச்சினைகளைப் பேசித் தீர்க்க கூடிய ஒரு நடைமுறைதான் மத்தியஸ்தம் என்பது. 1947 ஆம் ஆண்டின், தொழில் தகராறுகள் சட்டம் மூலமாக இதுபோன்ற மத்தியஸ்த முயற்சிக்கு முதன் முதலில், சட்டபூர்வ அங்கீகாரம் கிடைத்தது.
அதேநேரம் பாபர் மசூதி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அமைத்துள்ள சமரச குழு என்பது 1908ஆம் ஆண்டு குடிமை நடைமுறை சட்டத்தின் பிரிவு 89 வழங்கியுள்ள வழிகாட்டுதலின்படி அமைக்கப்பட்டது.
அயோத்தி விவகாரத்தை பொறுத்தளவில் மத்தியஸ்தம் முயற்சிக்கு இந்துமகாசபா கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருவதால், 2003ம் ஆண்டின், குடிமை நடைமுறை சட்டம் பிரிவு, 5(f)(ii) என்பதின்கீழ் மத்தியஸ்தம் நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இரு தரப்பினரின் ஒப்புதல் இல்லாவிட்டாலும், கட்டாயமாக மத்தியஸ்தம் செய்ய, சட்டம் வகை செய்கிறது.
சட்ட நடைமுறைப்படி, சம்பந்தப்பட்ட இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களுக்கு முதலில் நம்பிக்கையை ஊட்டும் செயலில் இறங்க வேண்டும். தங்களை அவர்களிடம் அறிமுகம் செய்து கொள்வதோடு, நடுநிலையாளர்கள் என்பதை அவர்களுக்கு உறுதிப்படுத்தி, மத்தியஸ்தம் நடைமுறையை இந்தக் குழு துவக்க வேண்டும் என்பது நெறிமுறை.
பிரச்சினைகளை சம்பந்தப்பட்ட தரப்பிற்கு புரியவைத்து, அவர்களுக்கு விளக்கம் கூறி ஒரு முடிவுக்குக் கொண்டுவருவது சமரச குழுவின் தலையாய பணி. அயோத்தி விவகாரத்தில் சமரசம் ஏற்படுத்தப்போகும் குழு தனது விசாரணை குறித்த தகவல்களை ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்பது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவாகும்.
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு என்பதாலும், தேர்தல் காலம் என்பதாலும், விசாரணை விவரங்கள் ஊடகங்களில் செய்தியாக வரக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications