"இந்திய பொருளாதாரமே ஆட்டம் காணும்!" வெப்ப அலையால் திரும்பிய பக்கமெல்லாம் சிக்கல்! ஏன் இத்தனை ஆபத்து
டெல்லி: இந்தியாவில் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இது நமக்குப் பல வழிகளில் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் வெப்பம் அதிகமாகவே பதிவாகி வருகிறது. பருவநிலை மாற்றம், அதிகமாகும் தொழிற்சாலைகள் என இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது.
பருவநிலை மாற்றத்தால் உலகில் இருக்கும் அனைத்து நாடுகளும் மிக மோசமாகப் பாதிக்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக இந்தியாவில் இதன் பாதிப்பு ரொம்பவே மோசமாகவே இருக்கிறது.
வெப்பம்: இந்தாண்டு இந்தியாவில் பிப். மாதமே வெப்பம் அதிகரிக்கத் தொடங்கியது. கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பிப். மாதம் உச்சபட்ச வெப்பம் பதிவானது. இந்தாண்டு கோடை காலம் ரொம்பவே மோசமாக இருக்கும் என்றே ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதற்கேற்ப மார்ச், ஏப்ரல் மாதங்களில் வெப்பம் மேலும் மேலும் அதிகரித்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

இதனிடையே வரும் மே மாதம் வெப்பம் இன்னும் கூட அதிகமாகவே இருக்கப் போகிறது. இது நாட்டின் பொருளாதாரத்தையே கடுமையாகப் பாதிக்கும் என்றும் மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நாட்டின் பல பகுதிகளில் மாதாந்திர அதிகபட்ச வெப்பம் இயல்பை விட அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மகசூல் குறைவு: இந்தியாவில் கடந்த 2022ஆம் ஆண்டில் வரலாறு காணாத வெப்பம் பதிவான நிலையில், அப்போதே அது பல பாதிப்புகளை ஏற்படுத்தியது. அதீத வெப்பம் காரணமாக நாட்டில் கோதுமை உற்பத்தி குறைந்தது. இது சர்வதேச அளவில் கோதுமை விநியோகத்தைப் பாதித்தது. வெப்பம் அதிகரிக்கும் நிகழ்வுகள் அதிகரிக்கும் நிலையில், நிறுவனங்கள் இதுபோன்ற வானிலை நிகழ்வுகளும் வரும் காலத்தில் தங்கள் முதலீடுகளைப் பாதிக்கும் என்று அஞ்சுகின்றனர்.
இது ஒரு பக்கம் என்றால் அதீத வெப்பம் காரணமாக ஏசி, பேன் உள்ளிட்ட கருவிகளின் பயன்பாடும் அதிகரிக்கிறது. இந்த அதீத மின்சார பயன்பாடு மின் கட்டமைப்பில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தி, கரண்ட் கட் அபாயத்தை அதிகரிக்கும். உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நமது நாட்டில் இன்னும் பல லட்சம் மக்கள் வெப்ப அலையில் இருந்து பாதுகாப்பாக இருப்பதில்லை. இது அவர்களை கடுமையாகப் பாதிக்கும். சில நேரங்களில் மரணத்திற்குக் கூட வழிவகுக்கும்.

பல்வேறு பாதிப்புகள்: வரும் காலங்களில் வெப்பம் மேலும் அதிகரிக்கும் என்றே அஞ்சப்படும் நிலையில், இது பாதிப்புகளை மோசமாக்கும். இந்தியாவில் மக்கள் அவதிப்படுவது ஒரு பக்கம் என்றால், விவசாய உற்பத்தி, பொருளாதார பாதிப்புகள் என்று எல்லா பக்கமும் நாம் பாதிப்பை எதிர்கொள்ளும் ஆபத்து இருக்கிறது.
இந்தாண்டு இந்தியா மட்டுமின்றி. தாய்லாந்து மற்றும் வங்கதேசத்திலும் வெப்பம் உயர்ந்து வருகிறது, சீனாவின் யுனான் மாகாணத்திலும் மிக மோசமான வறட்சியான வானிலை ஏற்பட்டுள்ளது. இப்படி இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளிலும் வெப்பம் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. வரும் ஆண்டுகளில் நாம் இதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இது மேலும் மோசமாகும் என்றே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வானிலை: வெப்பம் தொடர்ந்து உயர்ந்து வந்தாலும் கூட தமிழகத்தில் கடந்த சில காலமாக மழை பெய்து வெப்பத்தைத் தணித்தே வருகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று முதல் ஐந்து நாட்களுக்குக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது. வரும் மே 2ஆம் தேதி வரை மாநிலத்தில் பரவலாக மழை இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது












Click it and Unblock the Notifications