நடுவானில் பறக்கும் போதும் இணைய சேவை.. ஏர் இந்தியா செய்த தரமான சம்பவம்.. இது எப்படி சாத்தியம்!
டெல்லி: ஏர் இந்தியா விமானம் இப்போது தங்கள் விமானத்தில் இலவச வை-ஃபை சேவையை வழங்கத் தொடங்கியுள்ளன. இந்த இலவச வை-ஃபை சேவை எப்படி வேலை செய்கிறது. இதன் பின்னணியில் இருக்கும் தொழில்நுட்பம் என்ன.. விமான பயணிகள் இதை எப்படிப் பயன்படுத்தலாம் என அனைத்து கேள்விகளுக்குமான பதிலை நாம் பார்க்கலாம்.
நமது நாட்டில் விமானங்களில் பணிப்போர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வெளிநாடுகளுக்கு மட்டுமின்றி, உள்நாட்டு பயணங்களுக்கும் விமானச் சேவை பயன்படுத்துவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இலவச வை-ஃபை:
தற்போதைய சூழலில் இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா ஆகிய இரு நிறுவனங்கள் தான் இந்தியாவில் முன்னணியில் உள்ளன. இரு நிறுவனங்களுமே சந்தையைப் பிடிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஏர் இந்தியா விமானத்தில் இப்போது வை-ஃபை சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது இத்தனை காலம் வானில் பறக்கும் போது வை-ஃபை சேவையைப் பயன்படுத்த முடியாது. ஆனால், அந்த நிலையை மாற்றும் வகையில் ஏர் இந்தியா தனது விமானங்களில் வை-ஃபை சேவையை வழங்க ஆரம்பித்துள்ளது.
முதற்கட்டமாக சில ரூட்களில் இயக்கப்படும் குறிப்பிட்ட வகை விமானங்களில் மட்டுமே இந்த வை-ஃபை சேவையை ஏர் இந்தியா வழங்குகிறது. ஏர்பஸ் A350, போயிங் 787-9, ஏர் பஸ் ஏ321 நியோ விமானங்களில் வை-ஃபை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் முன்பு விஸ்தாரா பிரண்ட்டில் இயக்கப்பட்ட விமானங்களிலும் வை-ஃபை சேவை வழங்கப்படும் எனத் தெரிகிறது.
எப்படிப் பயன்படுத்துவது:
பயணிகள் தங்கள் சாதனங்களில் Wi-Fiஐ ஆன் செய்ய வேண்டும். பிறகு 'Air India Wi-Fi' என்ற நெட்வொர்க்கைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போது நாம் ஏர் இந்தியா போர்ட்டலுக்கு ரிடைரக்ட் செய்யப்படுவோம். அதில் உங்கள் டிக்கெட்டின் PNR மற்றும் பெயர் உட்பட விவரங்களைப் பதிவிட வேண்டும். அவ்வளவு தான் இலவச வை பை கிடைத்துவிடும்.
எப்படி சாத்தியம்:
தற்போது அனைத்து பயணிகளும் இலவசமாக இந்த வை-பை வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. இருப்பினும், வரும் காலங்களில் இதற்குக் கட்டணம் நிச்சயம் வசூலிக்கப்படும் என்றே தெரிகிறது. வெளிநாடு விமானங்களில் ஏற்கனவே சில ஆண்டுகளாக இந்த வை-பை சேவை உள்ள நிலையில், அதை ஏர் இந்தியா நமது நாட்டிற்கு அறிமுகப்படுத்தியுள்ளது. விமானத்தில் பறக்கும் போது எப்படி இணையச் சேவை வழங்க முடிகிறது. இதன் பின்னணியில் உள்ள தொழில்நுட்பம் என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
இரு தொழில்நுட்பங்கள்:
In-flight Wifi என்று அழைக்கப்படும் இதற்கு இரண்டு வகையான தொழில்நுட்பங்கள் பயன்படுத்துகின்றன. முதலாம் வகையில் விமானத்தில் அடிப்புறம் உள்ளே ஒரு ஆண்டனா பொருத்தப்படும். விமானம் பறக்கும் போது பூமியில் அருகே உள்ள செல்போன் டவரில் இருந்து சிக்னலை எடுக்கும். நீர்நிலை, பாலைவனம் போன்ற டவர் இல்லாத இடங்களில் செல்லும் போது மட்டும் இதில் வை-பை கிடைக்காது. மற்றபடி எளிதாக இணையச் சேவை கிடைக்கும்.
அடுத்தது சாட்டிலைட் அடிப்படையிலான இணையச் சேவை. இதில் விமானத்தின் உடலின் மேல் பக்கம் ஆண்டனா பொருத்தப்பட்டு இருக்கும். அது சாட்டிலைட்களில் இருந்து சிக்னலை பெற்றுத் தரும். கடல், பாலைவனம் என எங்குச் சென்றாலும் இதில் இணையச் சேவை தங்கு தடையில்லாமல் கிடைக்கும். இது சற்றே புதிய தொழில்நுட்பம் என்ற போதிலும் பல விமான நிறுவனங்கள் இந்த முறையைத் தான் தேர்ந்தெடுத்துள்ளன.
இதுபோல பெறப்படும் சிக்னல்கள் விமான கேபினில் உள்ள சிறு வைஃபை சாதனங்கள் மூலம் பயணிகளுக்குக் கிடைக்கும் வகையில் செட் அப் செய்யப்பட்டு இருக்கும். உள்ளே இருக்கும் பிராசஸ் என்பது இரண்டிற்கும் ஒன்றாகவே இருக்கிறது. அதேநேரம் விமானம் அதிவேகமாகச் சென்று கொண்டு இருப்பதால் சிக்னலை பெறுவதில் சில தாமதம் இருக்கும். இதனால் பொதுவாக விமானத்தில் கிடைக்கும் இணையச் சேவை என்பது மெதுவாகவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications