இந்தியாவின் "மணி ஹெய்ஸ்ட்" புரோபசர்.. ரூ.25 கோடி நகை.. தனி ஆளாக ஸ்கெட்ச் போட்டு தூக்கிய நபர்.. பரபர
டெல்லி: தலைநகர் டெல்லியில் 25 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளை ஒரே ஒரு ஆள் திட்டமிட்டுக் கொள்ளையடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இது பலருக்கும் கடும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
நம்மில் பெரும்பாலானோர் மணி ஹெய்ஸ்ட் தொடரைப் பார்த்திருப்போம். அதில் என்ன தான் பலர் வங்கிக்குள் நுழைந்திருந்தாலும், ஒட்டுமொத்த கொள்ளையையும் இன்ச் இன்ச்சாக திட்டம் போட்டுச் செய்பவர் அந்த புரோபசர் தான்.

சினிமாக்களில் தான் இதுபோல நடக்கும் என நினைக்காதீர்கள். நிஜ வாழ்க்கையிலும் இதே போல நடந்துள்ளது. அதுவும் இந்தியாவில்.. ஒரே ஒரு நபர் இங்கே திட்டம் போட்டு ரூ.25 கோடி மதிப்பிலான நகைகளைக் கொள்ளையடித்துள்ளார். அது எப்படி.. அவர் என்ன செய்தார் என்பது குறித்த தகவல்களைப் பார்க்கலாம்.
கொள்ளை: தலைநகர் டெல்லியில் தான் கடந்த வாரம் இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. சமீப காலங்களில் டெல்லியில் நடந்த மிகப் பெரிய கொள்ளை சம்பவமாக இது இருக்கிறது. இதில் விஷயம் என்னவென்றால் இந்த ஒட்டுமொத்த கொள்ளையையும் திட்டமிட்டு நடத்தியது ஒரே ஒரு நபர் தான். சத்தீஸ்கரை சேர்ந்த இந்த நபர் தான் பக்காவாக திட்டமிட்டுக் கொள்ளையடித்து எஸ்கேப் ஆகிவிட்டார்.
இந்தளவுக்குச் சரியாகத் திட்டமிட்டுக் கொள்ளையடித்து அந்த கொள்ளையனைப் பிடிப்பது கடினம் என்றே பலரும் நினைத்தனர். ஆனால், அங்கு நடந்ததோ வேறு.. இந்த கொள்ளை சம்பவம் எப்படி நடந்தது.. அவன் எப்படி மாட்டினான் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
தனியொரு நபர்: இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட லோகேஷ் ஸ்ரீவாஸ் இம்மாத தொடக்கத்தில் தனியாகவே டெல்லிக்கு வந்துள்ளார். நகர் முழுக்க எங்குக் கொள்ளையடிக்கலாம் என்பதைத் தீவிரமாக அலசிய அந்த நபர் கடைசியில் போகல் பகுதியில் உள்ள இந்த உம்ராவ் ஜூவல்லர்ஸ் என்ற கடையைத் தனது இலக்காக முடிவு செய்தார்.
அதன்படி கடந்த செப்டம்பர் 24ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் பக்கத்துக் கட்டிடத்தில் இருந்து இந்த நகைக்கடைக்குள் புகுந்துள்ளார். இரவு முழுக்க அங்கே இருந்து பொறுமையாகக் கொள்ளை அடித்துள்ளார். அங்கே விற்பனைக்கு வைக்கப்பட்ட நகைகளைத் திருடியது மட்டுமின்றி ஸ்டோர் ரூமிற்கும் சென்றுள்ளார். அங்குப் பொறுமையாகச் சுவரில் துளையிட்டு, உள்ளே இருந்த அனைத்து நகைகளையும் எடுத்துச் சென்றுள்ளார்.
பக்கா பிளான்: செப்.25ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி காரணமாக நகைக்கடைக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இதைத் தெரிந்து கொண்டே முந்தைய நாள் இரவு உள்ளே புகுந்துள்ளான். மெல்ல அனைத்து விலையுயர்ந்த நகைகளையும் எடுத்த அவர், சுமார் 20 மணி நேரத்திற்குப் பிறகு, மாலை 7 மணியளவில் வந்த அதே வழியில் கடையை விட்டு வெளியே சென்றுள்ளார். செப்.26இல் கடையைத் திறந்த போதுதான், கொள்ளை சம்பவமே உரிமையாளருக்குத் தெரிய வந்துள்ளது. ஆனால், அதற்குள் லோகேஷ் ஸ்ரீவாஸ் சத்தீஸ்கருக்குச் சென்று கொண்டிருந்தார்.
கொள்ளை அடித்துக் கொண்டு நேரடியாகக் கடை ஒன்றுக்குச் சென்ற லோகேஷ் ஸ்ரீவாஸ், அங்கே சில பேக்குகளை வாங்கியுள்ளார். அதில் நகைகளைப் போட்டு எடுத்துக் கொண்டு அங்கிருந்து நேரடியாகப் பேருந்து மூலம் சத்தீஸ்கருக்கு புறப்பட்டுள்ளார் இப்படித் திட்டமிட்டுக் கொள்ளையடித்து இந்த நபர் சிக்கிய கதையும் கூட சுவாரசியமானது.
சிக்கியது எப்படி: அதாவது சத்தீஸ்கரில் உள்ள துர்க் போலீசார் வேறு ஒரு வழக்கில் லோகேஷ் ராவ் என்ற திருடனைக் கைது செய்துள்ளனர். அப்போது விசாரணையின் போது அந்த நபர் தான் லோகேஷ் ஸ்ரீவாஸை கோர்த்துவிட்டுள்ளார். லோகேஷ் ஸ்ரீவாஸ் டெல்லியில் மிகப் பெரிய கொள்ளை சம்பவத்தைச் செய்துவிட்டுத் திரும்பியதாகச் சொல்லி அவர் இருக்கும் அட்ரஸையும் கொடுத்துள்ளார். இதனால் அலர்ட் ஆன சத்தீஸ்கர் போலீசார் உடனடியாக டெல்லி போலீசாருக்கு இது குறித்து தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து லோகேஷ் ஸ்ரீவாஸ் படத்தைப் பெற்ற டெல்லி போலீசார், அதைக் கொள்ளை சம்பவத்தின் போது கிடைத்த சிசிடிவி காட்சிகளுடன் ஒப்பிட்டு பார்த்தனர். அப்போதுதான் கொள்ளையில் ஈடுபட்டது லோகேஷ் ஸ்ரீவாஸ் தான் என்பது உறுதியானது. தொடர்ந்து பஸ் ஸ்டாண்டில் இருந்த சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்துள்ளனர். அதில் இரவு 8.40 மணிக்கு ஸ்ரீவாஸ் டிக்கெட் வாங்குவதும் பதிவாகியுள்ளது. அவர் இரண்டு பைகளில் நகைகளை எடுத்துக் கொண்டு எஸ்கேப் ஆனதும் தெரிய வந்தது.
கைது: உடனடியாக கடந்த வியாழக்கிழமை சத்தீஸ்கர் வந்த டெல்லி போலீசார், லோகேஷ் ஸ்ரீவாஸ் இருந்த வீட்டைச் சுற்றி வளைத்துள்ளனர். இருப்பினும், அப்போது லோகேஷ் ஸ்ரீவாஸ் அங்கே இல்லை. இதையடுத்து அங்கேயே இரவு முழுக்க இருந்த போலீசார், லோகேஷ் ஸ்ரீவாஸ் வெள்ளிக்கிழமை காலை அங்கே வந்த போது தட்டி தூக்கியுள்ளனர்












Click it and Unblock the Notifications