மொத்தம் 18 பேர்.. காஷ்மீர் டூ தமிழகம்! அமலாக்கத்துறையால் அலறும் ‛இந்தியா’ கூட்டணி ‛தலை’கள்! பின்னணி
டெல்லி: அமலாக்கத்துறையால் ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டுள்ளார். அதேபோல் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. இந்நிலையில் தான் காஷ்மீர் முதல் தமிழகம் வரை ‛இந்தியா' கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் 18 பெரிய தலைவர்கள் அமலாக்கத்துறையின் விசாரணை வளையத்துக்குள் வந்துள்ளனர். இதனால் ‛இந்தியா' கூட்டணி பெரிய சிக்கலை சந்தித்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. மத்தியில் ஆட்சி செய்யும் பாஜகவை வீழ்த்த 28 எதிர்க்கட்சிகள் இணைந்து ‛இந்தியா' கூட்டணியை உருவாக்கி உள்ளன. இதில் பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவருமான நிதிஷ் குமார் மீண்டும் பாஜகவுடன் கைகோர்த்துள்ளார்.

இந்நிலையில் தான் எதிர்க்கட்சியினர் தீவிரமாக தேர்தல் பணியை தொடங்கி உள்ளன. இத்தகைய சூழலில் தான் அமலாக்கத்துறை எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரிப்பது, கைது செய்வது உள்ளிட்ட அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
குறிப்பாக நில சுரங்க முறைகேடு வழக்கில் ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில் புதிய முதல்வராக சாம்பை சோரன் இன்று பதவியேற்க உள்ளார். அதேபோல் டெல்லி மதுபான ஊழல் வழக்கில் ஆம்ஆத்மி தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. இவரும் விரைவில் கைது செய்யப்படலாம் என கூறப்படும் நிலையில் அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் புறக்கணித்து வருகிறார். ஏற்கனவே மணிஷ் சிசோடியா உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டுள்ளதால் கெஜ்ரிவால் அச்சமடைந்துள்ளார். இருப்பினும் மீண்டும் 5வது முறையாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. இதனால் அரவிந்த் கெஜ்ரிவாலும் சிக்கலில் உள்ளார்.
ஹேமந்த் சோரன், அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டவர்கள் எதிர்க்கட்சிகளின் ‛இந்தியா' கூட்டணியில் முக்கியமான தலைவர்கள். இவர்கள் மீதான அமலாக்கத்துறை நடவடிக்கை என்பது ‛இந்தியா' கூட்டணிக்கு சிக்கலை ஏற்படுத்தலாம். சரி இது இருக்கட்டும். அமலாக்கத்துறையின் வழக்கில் ‛இந்தியா' கூட்டணியில் இவர்கள் 2 பேர் மட்டும் தான் இருக்கிறார்களா? என்றால் இல்லை. இன்னும் பல தலைவர்கள் உள்ளனர். அவர்கள் யார் என்பது பற்றி இங்கு பார்ப்போம்.
பீகாரை பொறுத்தமட்டில் ‛இந்தியா' கூட்டணியில் உள்ள ஆர்ஜேடி கட்சியின் தலைவரான லாலு பிரசாத் யாதவ், அவரது மகனும், முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டவர்கள் அரசு வேலைக்கு நிலத்தை லஞ்சமாக வாங்கிய வழக்கில் அமலாக்கத்துறையின் விசாரணை வளையத்தில் உள்ளனர்.
உத்தர பிரதேசத்தை எடுத்து கொண்டால் எதிர்க்கட்சி தலைவராக உள்ள அகிலேஷ் யாதவ் கோமதி நதிக்கரை திட்ட முறைகேட்டில் சிக்கி இருக்கிறார். மேற்கு வங்க மாநிலத்தை பொறுத்தவரை முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகனான அபிேஷக் பானர்ஜி அரசு வேலைக்கு லஞ்சம் பெற்ற வழக்கில் அமலாக்கத்துறையின் விசாரணைக்கு அடிக்கடி ஆஜராகி வருகிறார்.
கேரளாவை பொறுத்தமட்டில் முதல்வர் பினராயி விஜயன் தங்கம் கடத்தல் தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறையின் கண்காணிப்பில் உள்ளார். தெலுங்கானா காங்கிரஸ் முதல்வர் ரேவந்த் ரெட்டி, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோரும் அமலாக்கத்துறையின் விசாரணை வளையத்தில் இருக்கின்றனர். இதில் ஜெகன் மோகன் ரெட்டி பாஜகவின் கூட்டணி மற்றும் ‛இந்தியா' கூட்டணி என இரண்டிலும் சேராமல் தனித்து இருக்கிறார்.
ஜம்மு காஷ்மீரை பொறுத்தமட்டில் ‛இந்தியா' கூட்டணியில் இடம்பிடித்துள்ள முன்னாள் முதல்வர்களான பாரூக் அப்துல்லா, அவரது மகன் உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்டவர்கள் அமலாக்கத்துறையின் கண்காணிப்பில் உள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தை பார்த்தால் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் முன்னாள் துணை முதல்வரும், தற்போதைய காங்கிரஸ் தலைவருமான சச்சின் பைலட் உள்ளிட்வர்கள் ஆம்புலன்ஸ் முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை கண்காணிப்பில் உள்ளனர். மேலும் இந்த வழக்கில் தமிழகத்தை பொறுத்தமட்டில் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரமும் சிக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சத்தீஸ்கரை பொறத்தமட்டில் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் பூபேஷ் பாகேல் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையிடம் சிக்கி உள்ளார். ஹரியானாவை எடுத்து கொண்டால் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் பூபேந்தர் ஹுடா நில மோசடி வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை வளையத்தில் உள்ளது. மேலும் முன்னாள் அமைச்சர் கோபால் கண்டாவும் இன்னொரு வழக்கில் அமலாக்கத்துறை கண்காணிப்பில் உள்ளார்.
மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மற்றும் அவரது சகோதரரின் மகன் அஜித்பவார் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சிக்கி உள்ளனர். இதில் அஜித் பவார் தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் நடக்கும் பாஜக-சிவசேனா கூட்டணி ஆட்சியில் துணை முதல்வராக உள்ளார்.












Click it and Unblock the Notifications