போக்குவரத்து விதிமீறல் அபராதங்கள்.. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சொன்ன முக்கிய தகவல்
டெல்லி: போக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத்தை உயர்த்திய போதும் விதி மீறல்கள் குறையவில்லை என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கவலை தெரிவித்தார். அரசு எவ்வளவோ முயற்சி எடுத்த போதிலும், 2019ம் ஆண்டில் இருந்து சாலை விபத்து இறப்புகள் எண்ணிக்கை 2022ல் 6 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டு மட்டும் 50,029 பேர் ஹெல்மெட் பயன்படுத்தாததால் இறந்துள்ளனர் என்று தெரிவித்தார்.
உலக பாதுகாப்பு மாநாடு டெல்லியில் கடந்த செப்டம்பர் 2-ம் தேதி முதல் செப்டம்பர் 4-ம் தேதி வரை நடந்து முடிந்தது. இந்நிகழ்ச்சியில் மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின்கட்கரி பேசுகையில், இந்தியாவில் சாலைகளில் விதிமீறல் இருப்பதை சுட்டிக்காட்டினார். மேலும் விதிமீறல்களால் விபத்து ஏற்படுவதை பற்றியும் கவலை தெரிவித்தார். விதிமீறல்களில் ஈடுபடுவோருக்கு எவ்வளவு தான் அபராதம் விதிப்பது என்று கேள்வி எழுப்பிய அமைச்சர் நிதின் கட்கரி, அபராதத் தொகையை அரசு உயர்த்திக் கொண்டே போகமுடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

கடந்த 2019-ம் ஆண்டு மோட்டார் வாகன சட்டத்தில் அபராதத் தொகையை உயர்த்தி மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தது. அதன்பிறகும் சாலைவிதிமீறல்கள் அதிகரித்து தான் வருகின்றன. இதுபற்றி கூறிய அமைச்சர் நிதின் கட்கரி, சட்டங்களால் மட்டும் சாலை விபத்துகளில் நேரிடும் உயிரிழப்புகளை தடுக்க இயலாது என்றும் வாகன ஓட்டிகளின் மனநிலையில் மாற்றம் வரவேண்டும். பாதுகாப்பாக வாகனங்களை ஓட்ட வேண்டும் என்றார். அபராதம் கடுமையாக உயர்த்தப்பட்டாலும், மக்கள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்பது குறித்து தனது விரக்தியையும் அமைச்சர் வெளிப்படுத்தினார்.
இரு சக்கர வாகனங்களில் செல்வோர் தலைக்கவசம் அணியாமல் செல்வதால் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், இரு சக்கர வாகன உற்பத்தியாளர்கள், தலைகவசத்தையும் சலுகை விலையில் வழங்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. இதுபற்றியும் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் நிதின் கட்கரி, கடந்த 2022-ம் ஆண்டு மட்டும் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டியவர்கள் 50,029 பேர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர் என்றார்.
அதேபோல இந்திய சாலைகளில் 'லேன்' ஒழுங்குமுறையும் இல்லை என்று கவலை தெரிவித்த அமைச்சர் நிதின் கட்கரி, பேருந்து மற்றும் டிரக் ஓட்டுநர்கள் சாலைகளில் 'லேன்'களை ஒழுங்காக கையாண்டால் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் தவிர்க்கப்படும் என்றார். 2019 ஆம் ஆண்டிலிருந்து சாலை விபத்தினால் ஏற்படும் இறப்புகள் சுமார் 6% அதிகரித்துள்ளதாக கூறிய நிதின் கட்கரி, 2019 இல் 1.59 லட்சத்தில் இருந்த சாலை விபத்து உயிரிழப்பு எண்ணிக்கை , 2022 இல் 1.68 லட்சமாக உயர்ந்துள்ளதாக தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications