தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு.. உயரும் சம்பளம்? புதிய சம்பளம் எவ்வளவாக இருக்கும்? பின்னணி
டெல்லி: 8வது ஊதியக்குழு அதிகாரபூர்வமாக அமலுக்கு வர உள்ளதால் தமிழ்நாட்டின் அரசு ஊழியர்களுக்கும் சம்பளம் உயரும் வாய்ப்புகள் உள்ளன. மத்திய அரசு ஊழியர்களுக்கு இதனால் சம்பளம் உயரும்.
பொதுவாக அதே அடிப்படையிலேயே தமிழ்நாட்டில் மாநில அரசு ஊழியர்களுக்கும் சம்பளம் அதிகரிக்கும். அதன்படி 8வது ஊதியக்குழு பரிந்துரைக்கும் சம்பள முறைகளையே தமிழக அரசும் சில திருத்தங்களுடன் பின்பற்றும்.

எவ்வளவு சம்பளம்:
8வது ஊதியக்குழுவின் சம்பள உயர்வின் சரியான சதவீதம் வெளியிடப்படவில்லை என்றாலும் சம்பளம் மற்றும் ஓய்வூதியங்களைத் தீர்மானிக்கப் பயன்படுத்தப்படும் பிட்மென்ட் காரணியின் மதிப்பு வெளியாகி உள்ளது. இந்த பிட்மென்ட் காரணி 2.57ல் இருந்து 2.86 ஆக உயரக்கூடும் என்று தகவல் உள்ளது.
இது நடந்தால், அரசு ஊழியர்களுக்கான குறைந்தபட்ச அடிப்படை சம்பளம், 18,000 ரூபாயில் இருந்து, 51,480 ரூபாயாக உயரும்.
7வது ஊதியக் குழுவின் கீழ், ஃபிட்மென்ட் காரணி 2.57 ஆக இருப்பதால், மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் 6வது ஊதியக் குழுவின் கீழ் ரூ.7,000லிருந்து ரூ.18,000 ஆக உயர்த்தப்பட்டது. 7வது ஊதியக் குழுவின் கீழ் மொத்த குறைந்தபட்ச சம்பளம் மாதம் ரூ.36,020 ஆக உயர்ந்தது. இப்படிப்பட்ட நிலையில்தான் 8வது ஊதியக்குழுவில் மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் 186 சதவீதம் உயரும் என தகவல் வெளியாகி உள்ளது.
7வது ஊதியக் குழுவின் கீழ் 2.57 ஃபிட்மென்ட் காரணி உள்ளது. இது 8வது ஊதியக்குழுவில் குறைந்தது 2.86 பிட்மென்ட் காரணியாக உயரும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
2.86 என்ற ஃபிட்மென்ட் காரணிக்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்தால், அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் 186 சதவீதம் அதிகரித்து ரூ. 51,480 ஆக இருக்கும், இது தற்போதைய ரூ.18,000 உடன் ஒப்பிடும் போது 186 சதவீதம் உயர்வு ஆகும்,
மாநில அரசு;
இதேதான் பெரும்பாலும் மாநில அரசுக்கும் பொருந்தும். 7வது ஊதியக்குழுவின் பதவிக்காலம் 2026ல் முடிவடைகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கான 8வது மத்திய ஊதியக் குழுவுக்கு பிரதமர் ஒப்புதல் அளித்துள்ளார். ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் இரண்டு உறுப்பினர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA) அவர்களின் அடிப்படை சம்பளத்தில் 50% ஐ தாண்டிய சில மாதங்களில் இந்த அறிவிப்பு வந்துள்ளது. ஜூலை 1, 2024 முதல், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் இருவரும் தங்களின் அடிப்படை ஊதியத்தில் 53% DA நிவாரணத்தை பெறுவார்கள்.
2016 ஜனவரி 1 முதல் அமலுக்கு வந்த 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை பின்பற்றி தற்போது சம்பள அமைப்பு, ஓய்வூதிய அமைப்பு நடைமுறையில் உள்ளது. 8வது ஊதியக் குழுவின் உருவாக்கத்துடன் சம்பள அமைப்பு முற்றிலுமாக மாற்றி அமைக்கப்படும்.
8வது ஊதியக்குழு:
1 கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 8வது மத்திய ஊதியக் குழுவை உருவாக்குவதற்கு ஆவலுடன் காத்திருந்தனர். இது அரசு ஊழியர்களின் ஊதியம் மற்றும் பிற சலுகைகள் தொடர்பான பல்வேறு காரணிகளைக் கருத்தில் கொண்டு அதன் பரிந்துரைகளை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கும்.
7வது ஊதியக் குழு அமலுக்கு வந்ததில் இருந்து 10 ஆண்டுகள் இடைவெளியுடன், அடுத்த ஊதியக் குழுவை 2025 அமல்படுத்த வேண்டும். பொதுவாக இரண்டு வெவ்வேறு ஊதியக் கமிஷன்களை அமல்படுத்துவதற்கு இடையே 10 ஆண்டுகள் இடைவெளியை மத்திய அரசு பின்பற்றுகிறது.
ஆனால், அடுத்த ஊதியக் குழு அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசு இதுவரை வாய் திறக்காமல் இருந்தது. லோக்சபா தேர்தல் முடிந்து, மோடி 3.0 தலைமையில், 8வது சம்பள கமிஷன் அமைப்பது குறித்த சலசலப்பு வலுத்து வந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது போக இன்னொரு பக்கம் புதிய பென்சன் திட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஊழியர்கள் கடைசியாக வாங்கிய வருமானத்தில் 40-45 சதவிகிதம் பென்ஷனாக கிடைக்கும் வகையில் விதிகளை மாற்ற உள்ளனர்.
தற்போது உள்ள புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஊழியர்கள் தங்கள் அடிப்படை சம்பளத்தில் 10% பென்ஷனுக்கு கொடுக்க வேண்டும் மற்றும் அரசாங்கம் 14% பங்களிக்க வேண்டும். இறுதியில் அந்த முதலீட்டு கார்பஸின் சந்தை வருவாயைப் பொறுத்தது கடைசி கட்ட பென்சன் தீர்மானிக்கப்படும்.












Click it and Unblock the Notifications