இன்று நடுக்கடலில் தியானம்! 2014, 2019லிலும் இதே மாதிரி பிரேக் விட்ட மோடி-அப்போ என்ன செய்தார் பாருங்க
டெல்லி: கடந்த 2014, 2019 தேர்தல்களைப் போலவே இந்த முறையும் கடைசிக் கட்ட பரப்புரை ஓய்ந்த பிறகு பிரதமர் மோடி ஆன்மீக இடத்திற்குச் சென்று தியானம் மேற்கொள்ள உள்ளார்.
லோக்சபா தேர்தல் இப்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே 6 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், கடைசிக் கட்ட தேர்தல் நாளை மறுநாள் நடைபெறுகிறது.

இதற்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் கடைசிக் கட்ட பிரச்சாரம் நிறைவடைகிறது. இதனால் அனைத்து அரசியல் தலைவர்களும் இப்போது தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.
பிரதமர் மோடி: இதற்கிடையே இன்று பிற்பகல் கன்னியாகுமரி வரும் பிரதமர் மோடி இரண்டு நாட்கள் இங்கேயே தியானம் செய்ய உள்ளார். கன்னியாகுமரிக்கு வரும் மோடி, ராக் மெமோரியலுக்கு செல்லவுள்ளார். பிறகு சுவாமி விவேகானந்தர் அமர்ந்திருந்த அதே இடமான தியான மண்டபத்தில் இன்று மே 30ஆம் தேதி மாலை முதல் ஜூன் 1ஆம் தேதி வரை அவர் தியானம் செய்ய உள்ளார்.
2014, 2019 தேர்தல்கள்: அதேநேரம் லோக்சபா தேர்தல் பிரச்சாரம் நிறைவடையும் போது பிரதமர் மோடி இதுபோல ஆன்மீக வழிபாட்டுத் தளத்திற்குச் செல்வது இது முதல்முறை இல்லை. ஏற்கனவே 2014ஆம் ஆண்டு லோக்சபா தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்த உடன் பிரதமர் மோடி பிரதாப்கருக்குச் சென்றிருந்தார். அங்கு தான் சிவாஜி தலைமையிலான மராட்டியப் படைகளுக்கும், ஜெனரல் அப்சல் கான் தலைமையிலான பீஜப்பூர் படைகளுக்கும் இடையே போர் நடந்தது குறிப்பிடத்தக்கது.
அதேபோல 2019இல் பிரச்சாரம் முடிந்தவுடன் அவர் கேதார்நாத்தில் உள்ள ஒரு குகையில் வழிபாடு மேற்கொண்டார். அதன்படியே இந்தாண்டு பிரச்சாரம் முடிந்த உடன் அவர் கன்னியாகுமரியில் தியானம் மேற்கொள்ள உள்ளார்.
என்ன காரணம்: இது தொடர்பாக விவரமறிந்த சிலர் கூறுகையில், "மோடிக்குச் சுவாமி விவேகானந்தர் மீது மிகப் பெரிய பற்றும் மரியாதையும் இருக்கிறது. இதன் காரணமாகவே விவேகானந்தர் பாறை தியானத்திற்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.. தேர்தல் முடிந்த பிறகும் அவர் தமிழகத்திற்கு வருகிறார். இது தமிழ்நாடு மீது பிரதமர் மோடி எந்தளவுக்கு அன்பை வைத்திருக்கிறார் என்பதைக் காட்டும் வகையிலேயே இருக்கிறது" என்றார்.
பாஜக தமிழ்நாட்டில் கால் பதிக்கத் தீவிரமாக முயன்று வரும் நிலையில், இது முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. சுவாமி விவேகானந்தர் இதே இடத்தில் தான் இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக அமர்ந்து தியானம் செய்ததாக நம்பப்படுகிறது. இப்போது அதே இடத்தில் தான் மோடியும் அமர்ந்து தியானம் செய்ய உள்ளார்.
முதல்முறை இல்லை: மேலும், பிரதமர் மோடி ஆன்மீக தளங்களுக்குச் சுற்றுலா செல்வது இது முதல்முறை இல்லை. அவர் ஆன்மீக தளங்களுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். கடந்த மே 20-ம் தேதி ஒடிசாவின் பூரியில் பிரச்சாரம் செய்த அவர், ஜெகநாதர் கோயிலில் பிரார்த்தனை செய்தார். அதற்கு முன்பு ஜனவரியில் தமிழ்நாடு வந்த போது இங்கும் சில கோயில்களுக்கு அவர் சென்றார். ராமேஸ்வரம் ஸ்ரீ அருள்மிகு ராமநாதசுவாமி கோயில், தனுஷ்கோடி கோதண்டராம சுவாமி கோயில்களுக்கும் அவர் சென்று வழிபாடு செய்திருந்தார்.
அதற்கு முன்பு ஜனவரி 22ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகத்திலும் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது அவர் சில காலம் விரதமும் இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications