காங்கிரஸ் தேர்தலில் முறைகேடு.. போர்க்கொடி தூக்கிய சசிதரூர் தரப்பு.. திடீரென சமாதானம் ஆனது எப்படி?
டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் அனைவரும் எதிர்பார்த்தபடி மல்லிகார்ஜுன கார்கே வெற்றி பெற்றிருக்கிறார்.
இந்நிலையில், இந்தத் தேர்தலில் மிக மோசமான முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக சசிதரூரின் ஆதரவாளர்கள் திடீரென போர்க்கொடி தூக்கிய நிலையில், அவர்கள் சமாதானம் ஆனது எப்படி என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கேப்டன் இல்லாத கப்பலை போல, நிரந்தரத் தலைமை இல்லாமல் இயங்கிக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சிக்கு ஒருவழியாக நிரந்தரத் தலைவர் கிடைத்துள்ளார். கடந்த 24 ஆண்டுகளுக்கு பிறகு நேரு குடும்பத்தை சேராத ஒருவர் காங்கிரஸ் கட்சிக்கு தலைவராக பொறுப்பேற்க உள்ளார்.

எதிர்பார்த்த ஒன்றுதான்
காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் சோனியா, ராகுல், பிரியங்கா காந்தி 3 பேருமே போட்டியிட மறுத்துவிட்டனர். நேரு குடும்பம் பங்கேற்க வேண்டும் என ஒருதரப்பும், நேரு குடும்பம் பங்கேற்கக் கூடாது என மற்றொரு தரப்பும் வலியுறுத்தி வந்த நிலையில், அவர்கள் மூவருமே இந்த தேர்தலில் நிற்கவில்லை. காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, திருவனந்தபுரம் எம்.பி. சசி தரூர் ஆகியோரே இந்த தேர்தலில் போட்டியிட்டனர். இதில் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு நேரு குடும்பத்தினரின் ஆதரவு இருப்பதால் அவர்தான் இந்த தேர்தலில் வெற்றி பெறுவார் என உறுதியாக கூறப்பட்டது.

போர்க்கொடி தூக்கிய சசிதரூர்
இதனிடையே, காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. அந்தந்த மாநிலங்களின் காங்கிரஸ் தலைமை அலுவலகங்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 9,900 நிர்வாகிகள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். அவர்களில் 9,500 பேர் நேற்று முன்தினம் தங்கள் வாக்குகளை செலுத்தினர். இந்த தேர்தலில் 95 சதவீத வாக்குகள் பதிவானதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று காலை முதல் வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, இந்த தேர்தலில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக வேட்பாளர் சசிதரூரின் ஆதரவாளர்கள் திடீரென போர்க்கொடி தூக்கினர்.

'அப்பட்டமான முறைகேடு'
உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற காங்கிரஸ் தேர்தலில் பயங்கர முறைகேடு நடைபெற்றிருப்பதாக சசிதரூர் ஆதரவாளர்கள் குற்றம்சட்டினர். இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் தேர்தல் ஆணையத் தலைவர் மதுசூதனன் மிஸ்திரியிடம் அவர்கள் புகார் கடிதமும் அளித்தனர். அந்தக் கடிதத்தில், "உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் தலைவர் வாக்குப்பதிவில் மிக அப்பட்டமான மற்றும் மோசமான முறைகேடுகள் நடந்துள்ளன. அங்கு நடைபெற்ற தேர்தல் உண்மைத்தன்மைக்கு புறம்பாக உள்ளது. அதிகாரப்பூர்வ சீல் இல்லாத வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கின்றன. யாரென்று தெரியாத நபர்கள் வாக்களிக்கும் அறைகளில் இருந்துள்ளனர். எனவே, உத்தரபிரதேசத்தில் பதிவான வாக்குகளை செல்லாது என அறிவிக்க வேண்டும்" என சசிதரூர் தரப்பு கூறியிருந்தது.

சமாதானம் ஆனது எப்படி?
தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டை வைத்து சசிதரூர் தரப்பு கடிதம் எழுதிய சில நிமிடங்களிலேயே, சசிதரூர் ஆதரவாளரான சல்மான் அனீஸ் தனது ட்விட்டரில் ஒரு ட்வீட்டை வெளியிட்டர். அதில், "நாங்கள் எழுப்பிய குற்றச்சாட்டுகள் குறித்து உரிய விசாரணை நடத்துவதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது. அதனால் வாக்கெடுப்பை தொடர்ந்து நடத்த நாங்கள் ஒப்புக்கொண்டோம்" என அவர் தெரிவித்திருந்தார். பிறகு, அடுத்த ஒரு மணிநேரத்தில் மல்லிகார்ஜுன கார்கே வெற்றி பெற்றார் என அறிவிப்பு வெளியானது. இது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. முறைகேடு புகார் குறித்து ஒரு மணிநேரத்திலேயே எப்படி விசாரித்து தீர்வு கண்டிருக்க முடியும்? முறைகேடு நடைபெற்றதா இல்லையா? போன்ற பல கேள்விகள் எழுகின்றன. இந்நிலையில், சசிதரூரிடம் இந்த விவகாரம் குறித்து கட்சித் தலைமைக்கு நெருக்கமான ஒருவர் பேசியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன் பின்னர், சசிதரூர் தனது ஆதரவாளர்களை சமாதானப்படுத்தியதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications