"செக்ஸ் அடிமைகளாக ஏலம்.." வேலைக்காக வெளிநாட்டிற்கு சென்ற.. இலங்கை பெண்களுக்கு நேரும் கொடூரம்!
டெல்லி: வேலை என்று நம்பி வெளிநாட்டிற்குச் சென்ற இளம் பெண் ஒருவருக்கு மிக மோசமான ஒரு சம்பவம் நடந்துள்ளது.
இப்போது வெளிநாட்டிற்கு வேலைக்குச் செல்லும் போக்கு கணிசமாகவே அதிகரித்துள்ளது. கொஞ்சக் காலத்தில் அதிகப் பணம் சம்பாதிக்க விரும்புவோர் இப்படி வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர்.
இதற்காக பல்வேறு நாடுகளிலும் ஏஜென்சிகளும் கூட செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் இருந்தே பலரும் மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றி வருகின்றனர்.
வெளிநாட்டில் வேலை
முறையாக ஜாப் விசா பெற்று வேலைக்குச் சென்றால் பிரச்சினை இல்லை. ஆனால், இது பெரிய வேலை. இதனால் பலரும் ஷார்ட்கட்டையே விரும்புகின்றனர். அதாவது சுற்றுலா விசா பெற்று வெளிநாடுகளுக்குச் சென்று, அங்கு வேலை செய்கிறார்கள். ஆனால், இப்படிச் செல்லும் போது, எதாவது பிரச்சினை ஏற்பட்டால், அரசு உதவி செய்வது ரொம்பவே கடினம். இதற்குத் தமிழ்நாட்டிலேயே பல உதாரணங்கள் உள்ளன.
கொடுமை
இதன் காரணமாகவே வெளிநாடுகளுக்குச் செல்லும் போது, உரிய விதிமுறைகளைப் பின்பற்றி விசா பெற்றுச் செல்லுமாறு அரசு தொடர்ச்சியாக அறிவுறுத்தி வருகிறது. இப்படித்தான் வெளிநாட்டிற்கு நம்பி வேலைக்குச் சென்ற இலங்கையைச் சேர்ந்த பெண்களுக்குத் தான் கொடூர சம்பவம் ஒன்று நடந்து உள்ளது. அதாவது வேலை என அழைத்துச் சென்று ஒரு கும்பல் இலங்கை பெண்களை பாலியல் தொழிலுக்கு ஏலம் விடுவதாகப் புகார் எழுந்தன.
இலங்கை
இந்தச் சம்பவத்தில் வெளிநாடுகளில் இலங்கை வெளியுறவுத் துறையில் பணியாற்றும் சில அதிகாரிகளும் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டது. இதற்கிடையே இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்த இலங்கை அரசு உத்தரவிட்டது. முதற்கட்ட விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கைது செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது.
இலங்கை அமைச்சர்
பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சுற்றுலா விசாவில் அழைத்துச் செல்லப்பட்டவர்கள் என அந்நாட்டின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறை அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். இதுபோன்ற புகார்கள் அதிகரித்துள்ள நிலையில், சுற்றுலா விசாவைப் பயன்படுத்தி ஓமன் நாட்டிற்குச் செல்ல மறு அறிவிப்பு வரும் வரை இலங்கை தடை விதித்துள்ளது.
விசாரணைக்கு உத்தரவு
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "போலி முகவர்கள், குடிவரவுத் அதிகாரிகள் மற்றும் விமான நிலையத்தில் பணிபுரிபவர்கள் உட்பட மோசடியில் ஈடுபட்டவர்களைக் கைது செய்ய விரிவான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது இலங்கைப் பெண்கள் துபாய் வழியாக ஓமன் நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டு இருக்கிறார்கள். அங்கு அவர்கள் பல்வேறு இடங்களுக்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளனர். அங்குப் பெண்கள் பல மோசமான கொடுமைகளை எதிர்கொண்டு உள்ளனர்" என்றார்.
சஸ்பெண்ட்
ஓமன் நாட்டுக்கு வீட்டு வேலை செய்யச் சென்ற இலங்கை பெண் ஒருவர் சமீபத்தில் கொடூரமாகப் பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பான புகாரில் ஓமனில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் பணிபுரியும் அதிகாரியும் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார். இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்த இலங்கை அரசு சிறப்புப் புலனாய்வுப் பிரிவினரை ஓமனுக்கு அனுப்பினர்.
செக்ஸ் அடிமைகளாக ஏலம்
அவர்கள் நடத்திய விசாரணையில், அந்த பெண்கள் ஓமனில் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டது உறுதியானது. இது தொடர்பாக இலங்கை போலீஸ் அதிகாரி நிஹால் தல்துவா கூறுகையில், "அங்கு ஏமாற்றி அழைத்துச் செல்லப்பட்ட இலங்கை பெண்கள் வயது மற்றும் தோற்றத்திற்கு ஏற்ப வரிசைப்படுத்தப்பட்டு உள்ளனர். பின்னர் அவர்கள் பாலியல் தொழிலாளர்களாகவும் செக்ஸ் அடிமைகளாகவும் ஏலம் விடப்பட்ட கொடுமையும் நடந்துள்ளது" என்றார்.
இலங்கை பெண்கள்
இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இலங்கை அரசு விரிவான விசாரணையைத் தொடங்கி உள்ளது. ஓமனில் உள்ள இலங்கை பெண்கள் தங்கள் புகார்களை ஓமன் இலங்கை தூதரகத்தில் துணிச்சலாகத் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தாண்டு மட்டும் பாதிக்கப்பட்ட 240 பெண்கள் மீண்டும் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.