Trophical Cyclones: நிஷா முதல் ஆம்பன் வரை.. யாரு இப்படியெல்லாம் பேரு வைக்கிறா தெரியுமா உங்களுக்கு?
டெல்லி: உலகில் தோன்றும் புயல்களுக்கு பெயர்களை வைப்பது யார், இந்திய வானிலை மையத்தின் பணிகள் என்ன, புயல்களுக்கு பெயர் வைப்பது எப்படி போன்ற சுவாரஸ்யமான தகவல்களை காண்போம்.
Recommended Video
வர்தா புயல், ஃபனி புயல், வாயு புயல், நிஷா புயல், கஜா புயல் தற்போது உருவாகியுள்ள ஆம்பன் புயல் வரை பல மென்மையான மற்றும் கோரத்தாண்டவம் ஆடிய புயல்களை இந்தியா கண்டுள்ளது. இந்த புயல்களுக்கு யார் பெயர் வைப்பது என்பது பலருக்கு அறிய வாய்ப்பில்லை.
அது போன்ற தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம். வங்கக் கடல் மற்றும் அரபிக் கடலில் வருங்காலத்தில் உருவாகவுள்ள 169 வெப்பமண்டல சூறாவளிகளின் பெயர்களை பட்டியல் போட்டு இந்திய வானிலை மையம் கைவசம் வைத்துள்ளது.
Amphan cyclone: இன்று உருவாகிறது ஆம்பன் புயல்.. எங்கெங்கு மழை பெய்யும்.. தமிழகத்திற்கு என்ன பயன்?
இந்திய வானிலை மையம்
உலகில் ஒவ்வொரு கடலிலும் தோன்றும் சூறாவளிகளுக்கு மண்டல சிறப்பு வானிலை மையம் (ஆர்எஸ்எம்சி), வெப்பமண்டல சூறாவளி எச்சரிக்கை மையம் ஆகியன பெயர் வைத்து வருகிறது. உலகில் இந்திய வானிலை மையத்துடன் சேர்த்து 6 மண்டல சிறப்பு வானிலை மையங்கள் உள்ளன. ஆர்எஸ்எம்சியாக உள்ளதால் இந்திய வானிலை மையம் அரபிக் கடல், வங்கக் கடல் உள்பட வட இந்திய கடல் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைத்து வருகிறது.
அறிவுறுத்தல்
புயல்கள் மற்றும் சூறாவளி உருவாதல் குறித்து 12 நாடுகளுக்கு இந்திய வானிலை மையம் அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. புயல்கள், சூறாவளிகளுக்கு பெயர் வைக்க கடந்த 2000ஆம் ஆண்டு முதல் வங்கதேசம், இந்தியா, மாலத்தீவுகள், மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகள் இணைந்து உலக வானிலை அமைப்பு மற்றும் ஆசிய, பசிபிக் நாடுகளுக்கான ஐநா பொருளாதார மற்றும் சமூக ஆணையம் என்ற அமைப்பு தொடங்கப்பட்டது.
13 நாடுகள்
அதன் பின்னர் 2018-ஆம் ஆண்டு ஈரான், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அமீரக நாடுகள், யேமன் ஆகிய நாடுகளில் உலக வானிலை அமைப்பு குழுவில் இணைந்தன. இந்த 13 நாடுகளால் பரிந்துரை செய்யப்பட்ட 13 பெயர்களை கொண்ட 169 புயல்களின் பெயர் பட்டியலை கடந்த ஏப்ரல் மாதம் இந்திய வானிலை மையம் அறிவித்தது. தற்போது இன்று உருவாகவுள்ள ஆம்பன் புயலும் அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
புயல்களுக்கு ஏன் பெயர் வைக்க வேண்டும்?
புயல்களுக்கு ஏன் பெயர் வைக்க வேண்டும் என நீங்கள் கேட்கலாம். அப்போதுதான் அந்த புயல்கள் நமது நினைவில் எளிதாக இருக்கும். எண்கள், தொழில்நுட்ப பதங்களை கொண்டு சூறாவளிகளை அழைப்பதற்கு எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து இது போல் பெயர் வைக்கும் பழக்கம் உருவாகியுள்ளது. பொது மக்களுக்கு மட்டுமல்லாமல் அறிவியல் சார்ந்த விஞ்ஞானிகள், ஊடகங்கள், பேரிடர் மேலாண்மை துறை ஆகியவற்றுக்கும் இந்த பெயர் வைப்பு மிகவும் உதவுகிறது.
வெப்ப மண்டல சூறாவளிகள் குழு
இந்த பெயர்கள் மூலம் தனிபுயல்களை எளிதில் அடையாளம் காணமுடியும். அதன் வளர்ச்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும். தயார் நிலையில் இருக்க முடியும். மேலும் குழப்பங்களை தவிர்க்கவும் இது வழிவகுக்கும். ஒரு புயலுக்கு பெயர் வைக்கும் போது சில விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த விதிகளுக்கு உட்பட்டிருந்தால் மட்டுமே வெப்ப மண்டல சூறாவளிகளுக்கான குழு அந்த பெயரை இறுதிப்படுத்தும்.
புயலுக்கு பெயர் வைக்கும் விதிகள்
- புயலுக்காக வைக்கப்படும் பெயர்கள் அரசியல், அரசியல்வாதிகள், மத நம்பிக்கைகள், கலாச்சாரங்கள், பாலினம் ஆகியவற்றிற்கு நடுநிலையாக இருக்க வேண்டும்.
- தேர்வு செய்யப்படும் பெயர் உலகம் முழுவதும் உள்ள மக்களின் உணர்வுகளை எந்த வகையிலும் பாதிக்கக் கூடாது.
- புயலின் பெயர் முரட்டுத்தனமாகவும் கொடூரமாகவும் இருக்கக் கூடாது.
- அவை சிறியதாகவும் எளிதாக உச்சரிக்கும் வகையிலும் இருக்க வேண்டும்.
- அதிகபட்சமாக 8 எழுத்துகளை கொண்டிருக்க வேண்டும்.
- பெயர் வைக்கும் நாடுகள் அதன் உச்சரிப்புடன் கொடுக்க வேண்டும்.
- வட இந்திய கடல்களில் உள்ள வெப்பமண்டல சூறாவளிகளின் பெயர்கள் மீண்டும் மீண்டும் பயன்படுத்தக் கூடாது. ஒரு முறை பயன்படுத்தப்பட்டால் அதன் பயன்பாட்டை அத்துடன் நிறுத்த வேண்டும். மீண்டும் புதிதாக பெயர் வைக்க வேண்டும்.
இந்தியா பரிந்துரை செய்த பெயர்கள்
அண்மையில் இந்தியா 13 புயல்களுக்கான பெயரை வழங்கியுள்ளது. அவற்றில் கட்டி, தேஜ், முரசு, ஆக், வியாம், ஜோர், புரோபஹோ, நீர், பிரபஞ்சன், கர்னி, ஆம்புத், ஜலதி மற்றும் வேகா ஆகியவை ஆகும். இந்த பெயர்களில் சில பொதுமக்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளவையாகும். இந்த 169 பெயர்களில் முதல் சூறாவளியின் பெயர் வங்கதேசம் வழங்கிய நிசர்கா என்பது தேர்வு செய்யப்படும். இதையடுத்து இந்தியா வழங்கிய கட்டி தேர்வாகும். இப்படியே வரிசையாக 13 நாடுகளின் பெயர்கள் சுழற்சி முறையில் வைக்கப்படும்.