ட்ரூடோவை விடுங்க! அவரது அப்பா செஞ்ச அடாவடி தெரியுமா! கனடாவின் அலட்சியத்தால் 300+ பேர் பலியான சோகம்
டெல்லி: காலிஸ்தான் பயங்கரவாதி கொலை வழக்கில் ஜஸ்டின் ட்ரூடோ எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் இந்தியாவைக் குற்றஞ்சாட்டி வருகிறார். சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு, அவரது தந்தை காலிஸ்தான் பயங்கரவாதிக்கு ஆதரவாக ஒரு செயலை செய்தார். இதனால் பல நூறு பேர் உயிரிழக்கும் சூழல் ஏற்பட்டது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
கடந்த செப்டம்பர் 18ஆம் தேதி, கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கூறிய கருத்துக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்ஜீத் சிங் நிஜார் கொலை செய்யப்பட்டதில் இந்தியாவுக்குத் தொடர்பு இருப்பதாக அவர் கூறியிருந்தார்.

இந்தியா இந்தக் குற்றச்சாட்டுகளைத் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்த குற்றச்சாட்டிற்கான ஆதாரத்தை வெளியிடுமாறு இந்தியா வலியுறுத்திய போதிலும், கனடா எந்தவொரு ஆதாரத்தையும் வெளியிடாமல் குற்றச்சாட்டை மட்டுமே முன்வைத்தது.
ஜஸ்டின் ட்ரூடோ: இதைத் தொடர்ந்து இந்தியத் தூதரக அதிகாரியைக் கனடா வெளியேற்றிய நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவும் கனடா தூதரை வெளியேற்றியது. இரு நாடுகளும் மாறி மாறி நடவடிக்கை எடுத்தனர். மேலும், இந்தியா கனடா நாட்டவருக்கு விசா வழங்கும் முறையையும் நிறுத்தி வைத்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே செல்கிறது. இதனால் அங்குள்ள இந்திய மாணவர்களும் குழப்பத்தில் உள்ளனர்.
இது ஒரு பக்கம் இருக்க இதற்கு முன்பும் கூட கனடா காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே எடுத்துள்ளது. இதனால் ஒரு கட்டத்தில் பல நூறு பேர் உயிரே போய் உள்ளது. அதற்கும் இப்போது பிரதமராக இருக்கும் ஜஸ்டின் ட்ரூடோவுக்கும் தொடர்பும் இருக்கிறது. அவை குறித்து நாம் பார்க்கலாம்.
ட்ரூடோவின் தந்தை: 1980களில் நடந்த இந்தச் சம்பவத்திற்குக் காரணம் அப்போது பிரதமராக பியர் ட்ரூடோ. இவர் வேறு யாரும் இல்லை. இப்போது பிரதமராக இருக்கும் ஜஸ்டின் ட்ரூடோவின் தந்தை தான் அவர். அப்போதே அங்கே காலிஸ்தான் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருந்தது. அப்படி அங்கே இருந்த காலிஸ்தான் பயங்கரவாதி தல்விந்தர் சிங் பர்மார் என்பவரை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு இந்திரா தலைமையிலான அரசு கோரிக்கை விடுத்தது.
இந்தியாவில் போலீசாரை கொன்ற குற்றச்சாட்டுக் காரணமாக தல்விந்தர் சிங் பர்மாரை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு இந்திரா அரசு கோரிக்கை விடுத்தது. பொதுவாகக் காமன் வெல்த் நாடுகளுக்கு மத்தியில் இதுபோல குற்றவாளிகளை நாடு கடத்துவது வழக்கமாக நடைபெறும். இதன் காரணமாகவே கனடாவிடம் இந்தியா கோரிக்கை விடுத்தது.
வினோதமான காரணம்: இருப்பினும், இந்தியாவின் கோரிக்கையைக் கனடா மறுத்துவிட்டது. தல்விந்தர் பர்மரை அவர்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கவில்லை. இதற்கு அவர்கள் சொன்ன காரணம் தான் இன்னும் விநோதமாக இருந்தது. அதாவது இந்தியா காமன்வெல்த் நாடாக இருந்தாலும் கூட கனடாவைப் போல இந்தியா பிரிட்டன் மகாராணியைத் தலைவராக ஏற்கவில்லை.. இதனால் காமன்வெல்த் நாடுகளுக்கு இடையே குற்றவாளிகளை நாடு கடத்தும் ஒப்பந்தம் பொருந்தாதது என்று வினோத விளக்கத்தைக் கொடுத்தது அந்த ட்ரூடோவின் அரசு.
இதே தல்விந்தர் பர்மர் தான் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பான பாபர் கல்சாவின் தலைவராக இருந்தார். இந்த அமைப்பு தான் 1985இல் அயர்லாந்து கனிஷ்கா என்ற ஏர் இந்தியா விமானத்தை நடுவானில் வெடிக்கச் செய்தது. இதில் மொத்தம் 329 பேர் கொல்லப்பட்டனர், அவர்களில் 268 பேர் கனடா மக்கள். அவர்கள் கனடா குடிமக்களாக இருந்தாலும் அவர்கள் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களாகும். இந்த பயங்கரவாத செயலுக்கு பியர் ட்ரூடோவே காரணம் என அப்போது பலரும் சாடினர்.
அலட்சியம்: பர்மரின் திட்டம் குறித்து கனடா அதிகாரிகள் தெரிந்தே இருந்ததாகவும் நடவடிக்கை எடுக்கத் தவறியதாகவும் தகவல்கள் உள்ளனர். அதாவது விமானத்தில் வெடிகுண்டு வைக்கச் சம்மதித்தால் பெருந்தொகையைத் தருவதாக பர்மர் உறுதியளித்ததாக இன்பார்மர் ஒருவர் கனடா போலீசாரிடம் கூறியுள்ளார். மேலும், பர்மர் மற்றும் அவரது உதவியாளர் இணைந்து வான்கூவர் தீவில் வெடிகுண்டு சோதனை நடத்தியுள்ளனர். இவ்வளவு நடந்த பிறகும் கனடா எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை,
சொல்லப்போனால், அவர்கள் சில சில முக்கிய ஆதாரங்களை அழித்ததாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக கனிஷ்கா குண்டுவெடிப்பு வழக்கின் விசாரணையில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் குற்றவாளிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். இருப்பினும், சில ஆண்டுகள் கழித்து 1992இல் பாகிஸ்தானில் இருந்து பஞ்சாபிற்கு நுழைந்த பர்மரை இந்திய போலீசார் சுட்டுத் தள்ளினர்.
ஒப்புக் கொண்ட கனடா: இருப்பினும், ட்ரூடோவின் அலட்சியமாக அன்று இந்தியர்கள் மரணமடையக் காரணம் என்பதை மறுக்க முடியாது. ட்ரூடோ மட்டும் இந்தியாவின் கோரிக்கையை ஏற்றுப் பயங்கரவாதியை ஒப்படைத்திருந்தால் பயங்கரவாத செயல் தடுக்கப்பட்டிருக்கும். இதை நாம் மட்டும் சொல்லவில்லை. கனடாவின் 22ஆவது பிரதமரான ஸ்டீபன் ஹார்ப்பர் பொதுவெளியில் வைத்து மன்னிப்பு கேட்டார். கனடாவின் தவறால் தான் இந்த விபத்து நடந்ததாகவும் கூறியிருந்தார்.
பியர் ட்ரூடோ அரசியல் காரணங்களுக்காக பர்மரை பாதுகாத்தாக குற்றச்சாட்டுகள் நீண்ட காலமாக இருக்கிறது. அரசியல் லாபத்திற்காக அவர் எடுத்த முடிவைப் பல நூறு கனடா நாட்டுக் குடிமக்கள் உயிருக்கே ஆபத்தாக முடிந்துவிட்டது. எனவே, வரலாற்றில் இருந்து பாடத்தை கற்று, பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையைத் தீவிரப்படுத்த வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications