Throwback: "அண்ணே தெய்வம் நீங்க!" திருடனை விரட்டி பிடித்த விஜயகாந்த்! காலில் விழுந்து கதறிய இளம்பெண்
டெல்லி: தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் காலமான நிலையில், அவரது நெருங்கிய நண்பரும் நடிகருமான தியாகு விஜயகாந்த் வீரம் குறித்துப் பேசிய வீடியோ இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று காலை காலமானார். அவரது உடலுக்கு ரசிகர்கள், தொண்டர்கள், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அவரது உடல் இப்போது தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே திரை பிரபலங்கள் விஜயகாந்த் உடன் தங்களது நட்பு குறித்தும் விஜயகாந்த் உதவிகள் குறித்தும் ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். அப்படி அவரது நெருங்கிய நண்பரும் நடிகருமான தியாகு விஜயகாந்த் வீரம் குறித்து டிவி சேனல் ஒன்றுக்குப் பேசிய வீடியோ இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
தியாகு பேச்சு: இது குறித்து தியாகு பேசுகையில், "அவர் முன்னணி கதாநாயகனாக வரும் முன்பு என்னுடன் நட்பு ஏற்பட்டது. விஜயகாந்த்திற்கு ராவுத்தர் நண்பராக இருந்தாலும், என்னுடன் சில விஷயங்களை வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்வார், நிறைய விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். பல அசிங்கங்கள், அவமானங்களைத் தாண்டி தான் விஜயகாந்த் டாப் இடத்திற்கு வந்தார்.
ரஜினி, விஜயகாந்த் என இரண்டு பேர் தமிழ் சினிமாவை ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், இருவருக்கும் நடுவே பெரும் போராட்டத்திற்குப் பிறகு விஜயகாந்த் வந்தார். பூவுடன் சேர்ந்து நாறும் மணக்கும் என்பது போல, எனக்கும் தொடர்ச்சியாக வாய்ப்புகள் கொடுத்தார். பல கேரக்டர் ரோல்கள் எனக்குக் கொடுத்தார். இதனால் அவருடன் சுமார் 28 படங்கள் நடித்துள்ளேன்.
திருடனை விரட்டி பிடித்த சம்பவம்: இப்படி தொடர்ச்சியாகப் படங்கள் நடிக்க நடிக்க இருவரும் ரொம்பவே நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டோம். இதனால் பெரும்பாலும் நான் அவரது ஆபீசில் தான் இருப்பேன். அப்படிதான் ஒரு நாள் அவரது ஆபீசில் இருந்து வெளியே வந்தோம். அப்போது வெளியே செல்ல இருவரும் காரில் ஏற சென்றோம். அப்போது திருடன் அங்கே திடீரென பெண் ஒருவர் கழுத்தில் இருந்து செயினை பறித்துவிட்டார்.
செயினை பறித்துக் கொண்டு ஓட ஆரம்பித்துவிட்டார். அந்த பெண் திருடன் எனக் கத்தினார். இதைப் பார்த்த விஜயகாந்த் நொடியும் தாமதிக்காமல் திருடனை துரத்திக் கொண்டு ஓட தொடங்கினார். விஜயகாந்த் வேகத்திற்குத் திருடனால் ஈடுகொடுக்க முடியவில்லை.
காலில் விழுந்த பெண்: கொஞ்ச தூரத்திலேயே திருடனைப் பிடித்துவிட்டார் விஜயகாந்த். திருடனைப் பிடித்து, அடித்து செயினை வாங்கி அந்த பெண்ணிடமே கொடுத்தார். இதைச் சற்றும் எதிர்பார்க்காத அந்த பெண் சட்டென விஜயகாந்த் காலிலேயே விழுந்துவிட்டார். அண்ணே தெய்வம் மாதிரி காப்பாற்றினீர்கள். கடும் வறுமையில் இருக்கும் குடும்பம். இந்த செயின் போயிருந்தால் அவ்வளவு தான் எனச் சொல்லிக் கதறினார்.
ஒரு பக்கம் அந்த திருடனுக்கும் பளிச் பளிச் என இரண்டு அறை கொடுத்தார். அந்த திருடனோ ஒரு பக்கம், அண்ணே நான் உங்க ரசிகர்.. தெரியாமல் இதைப் பண்ணிவிட்டேன் என்று சொல்லிக் கதறினார். இரண்டு அடி விட்டு திருடனை விட்டுவிட்டார். அந்தளவுக்குத் துணிச்சலான ஒரு நபர் விஜயகாந்த்.
துணிச்சல்: மற்ற நடிகர்கள் பொது இடத்திற்குச் செல்லும் போது கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டு சத்தமில்லாமல் போய் வருவார்கள். ஆனால், விஜயகாந்த் அப்படியில்லை. என்ன பிரச்சினை என்றாலும் ரோட்டில் இறங்கிவிடுவார்கள். காரில் சென்று கொண்டிருந்தாலும் பிரச்சினையைப் பார்த்துவிட்டால் ரோட்டில் இறங்கிவிடுவார். மதுரைக் காரன் ஆச்சே. வீரம் விதைந்த மண்ணில் இருந்து வந்தவர். அப்படிதான் இருப்பார்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications