ஆஹா.. ‛இந்தியா’ கூட்டணிக்கு செக்! 33% இடஒதுக்கீடு மசோதாவால் பாஜக செம பிளான்! ஒரே கல்லில் 2 மாங்காய்
டெல்லி: 28 ஆண்டு காலமாக நிலுவையில் இருக்கும் பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதாவை அறிமுகம் செய்ய பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்மூலம் ‛இந்தியா' கூட்டணியில் பிளவை ஏற்படுத்துவதோடு, அரசியலில் லாபம் பெறுவது என ஒரே கல்லில் 2 மாங்காய் அடிக்க பாஜக திட்டமிட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் தற்போது அரசியலில் பெண்கள் உள்ளனர். இந்தியாவில் மாநிலத்துக்கு மாநிலம் பல அரசியல் கட்சிகள் உள்ளன. இருப்பினும் அரசியலில் பெண்களுக்கான அங்கீகாரம் என்பது மிகவும் குறைவாக தான் உள்ளது. ஜெயலலிதா, மம்தா பானர்ஜி, மாயாவதி உள்பட வெகு சில தலைவர்கள் மட்டுமே கட்சியின் தலைமை பொறுப்பிலும் முதல்வராகவும் பொறுப்பு வகித்துள்ளனர்.

இதுதவிர நாடாளுமன்றம், சட்டசபை, மத்திய, மாநில அமைச்சரவைகளில் பெண்களின் பங்களிப்பு என்பது மிகவும் குறைவாக தான் உள்ளது. இதனை சரிசெய்யும் வகையிலும், பெண்களும் அரசியலில் அதிகம் ஈடுபட வேண்டும் என்பதற்காகவும் இந்தியாவில் பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா கொண்டு வர திட்டமிடப்பட்டது.
இந்த 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா என்பது சட்டசபை, நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதை அம்சமாக கொண்டதாகும். இந்த மசோதா என்பது 28 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கிறது. 1996ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிரதமர் தேவேகவுடா தலைமையிலான ஐக்கிய முன்னணி கூட்டணியால் இந்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டபோது ஒப்புதல் கிடைக்கவில்லை. அதன்பிறகு 1996 டிசம்பர், 1998, 1999, 2002 மற்றும் 2003ம் ஆண்டுகளில் மீண்டும் மீண்டும் நாடாளுமன்ற சபைகளில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டாலும் நிறைவேற்றப்படவில்லை.
இந்நிலையில் தான் இந்த மசேதாவை நிறைவேற்ற பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதாவது வரும் செப்டம்ர் 18 முதல் 22 ம் தேதி வரை நாடாளுமன்றத்தில் சிறப்பு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதாவை அறிமுகம் செய்ய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய பாஜக அரசுக்கு நாடாளுமன்றத்தில் 2 சபைகளில் மசேதாாவை நிறைவேற்றும் அளவுக்கு ஆதரவு உள்ளது. இத்தகைய சூழலில் பாஜக அரசு பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டவில்லை என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, திமுக எம்பி கனிமொழி உள்ளிட்டவர்கள் கேள்விகள் கேட்டனர்.
இத்தகைய சூழலில் தான் திடீரென்று வரும் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் மத்திய அரசு பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதாவை அறிமுகம் செய்ய உள்ள தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இந்த மசோதாவின் பின்னணியின் ஒரே கல்லில் 2 மாங்காய்களை அடிக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். அதாவது பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதாவுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவாக உள்ளது. ஆனால் காங்கிரஸ் உள்பட 26 கட்சிகள் இணைந்து அமைத்துள்ள ‛இந்தியா' கூட்டணியில் பல கட்சிகள் காலம் காலமாக இந்த மசோதாவை எதிர்த்து வருகின்றன.
குறிப்பாக ராஷ்ட்ரிய ஜனதாதளம் எம்பி ஒருவர் இந்த மசோதாவை கிழிக்கவே செய்தார். தற்போதும் கூட அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி, லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் உள்பட பல கட்சிகள் இந்த மசோதாவுக்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ளனர். ஆனால் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றம் செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு 2 முறை கடிதம் எழுதினார்.
இத்தகைய சூழலில் இந்த மசோதாவை நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் அறிமுகம் செய்யும்போது காங்கிரஸ் கட்சி எதிர்க்காது. மாறாக ‛இந்தியா' கூட்டணியில் உள்ள பிற மாநில கட்சிகள் எதிர்க்கும். இதனால் ‛இந்தியா' கூட்டணியில் உள்ள கட்சிகளுக்குள் குழப்பம் ஏற்படலாம் என பாஜக நினைப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றினால் அதுவும் பாஜகவுக்கு பாசிட்டிவ்வாக அமையும். அதாவது கடந்த 28 ஆண்டுகளாக பெண்களை முடக்கும் வகையில் கிடப்பில் கிடந்த பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றியது பாஜக தான். பாஜக மட்டும் தான் பெண்களின் வளர்ச்சியில் அக்கறை காட்டுகிறது என விரைவில் நடைபெறும் 5 மாநில சட்டசபை தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் வேளையில் கூற முடியும். அதோடு பெண்களின் வாக்குகளையும் பாஜகவுக்கு கவர முடியும் என அக்கட்சி தலைமை கணக்கீட்டுள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications