”உறுதியா சொல்றேன்.. திரௌபதி முர்மு இந்தியாவின் சிறந்த ஜனாதிபதியாக இருப்பார்” - பிரதமர் மோடி வாழ்த்து
டெல்லி: இந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு தேர்வு செய்யப்படுவார் என உறுதியாக சொல்கிறேன் என பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்தி இருக்கிறார்.
Recommended Video
இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் அடுத்த மாதத்துடன் நிறைவடைகிறது.
இதனை தொடர்ந்து வரும் ஜூலை 18 ஆம் தேதி நாட்டின் 15 வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் கடந்த 9 ஆம் தேதி அறிவித்தது.

பாஜக கூட்டணி வேட்பாளர்
தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பை தொடர்ந்து குடியரசுத் தலைவர் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான முயற்சியில் பாஜக முழு மூச்சாக இறங்கியது. கூட்டணி கட்சிகள், நட்பு கட்சிகளிடம் இதுகுறித்து பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. முன்னாள் மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், கேரள ஆளுநர் ஆரிப் முஹம்மது கான், தெலுங்கானா புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் உள்ளிட்டோர் பெயர்களும் அடிப்பட்டன.

திரௌபதி முர்மு
இந்த நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளராக 64 வயதான திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டு உள்ளார். ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவரான திரௌபதி முர்மு பழங்குடியின வகுப்பை சேர்ந்தவர். இவர் குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டால் இந்தியாவின் முதல் பழங்குடியின பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமையை பெறுவார்.

ஒடிசா அமைச்சர்
பாஜகவை சேர்ந்த இவர் கடந்த 2000 வது ஆண்டில் ஒடிசாவில் பாஜக, பிஜு ஜனதா தளம் கட்சி கூட்டணி ஆட்சி நடந்தபோது அமைச்சராக பதவியேற்றார். அதன் பின்னர் ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டதன் மூலம், ஒடிசாவிலிருந்து ஆளுநராக நியமிக்கப்பட்ட முதல் பெண் மற்றும் முதல் பழங்குடியின ஆளுநர் என்ற அவர் பெருமையை பெற்றார்.

பிரதமர் மோடி வாழ்த்து
இந்த நிலையில் குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ள திரௌபதி முர்முவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார். அதில், "திரௌபதி முர்மு தனது வாழ்க்கையை சமுதாய சேவைக்காகவும், ஏழைகள், தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் விளிம்புநிலை மக்களுக்கு அதிகாரம் கிடைப்பதற்காகவும் அர்ப்பணித்தவர். சிறந்த நிர்வாக அனுபவத்தை கொண்ட அவர், சிறந்த ஆளுநராக பதவி வகித்து உள்ளார். அவர் நம் நாட்டின் சிறந்த குடியரசுத் தலைவராக இருப்பார் என்று நான் நம்புகிறேன்." என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications