ரயில் நிலையத்தில் தூங்கிய குழந்தை..நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தில் 'சுய புராணம்' பாடிய பிரதமர் மோடி!
டெல்லி: நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் பேசிய பிரதமர் மோடி தாம் ரயில் நிலையத்தில் தூங்கி கழித்த இளம்பிராயத்தை நினைவு கூர்ந்து பேசினார்.
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் லோக்சபாவில் பிரதமர் மோடி பேசியதாவது: சந்திரயான் 3-ன் வெற்றி என்பது இந்தியாவால் மட்டும் கொண்டாடப்படவில்லை. ஒட்டுமொத்த உலகமும் பெருமிதப்படுகிறது. இது 140 கோடி இந்தியர்களின் வலிமையை வெளிப்படுத்துகிறது. சந்திரயான் 3 விண்கலத்தை நிலவுக்கு அனுப்பி சாதித்த அனைத்து விஞ்ஞானிகளையும் பாராட்டுகிறேன். ஜி 20-ன் வெற்றி 140 கோடி இந்தியர்களின் மகத்தான வெற்றி.

இந்தியாவை உலக நாடுகள் இன்று உற்ற நண்பனாக பார்க்கின்றன. இந்தியா தற்போது தன்னம்பிக்கை மிக்க நாடாக மிளர்கிறது. இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் 600 பெண் எம்பிக்கள் பங்களிப்பு செய்துள்ளனர்.
நாடாளுமன்ற புதிய கட்டிடம் என்பது இந்தியர்களின் வியர்வை, பணத்தால் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. வரலாற்று சிறப்புமிக்க முடிவுகளை எடுக்கவே இந்த நாடாளுமனற கூட்டத் தொடர் கூட்டபட்டுள்ளது.
என் மீது நாட்டு மக்கள் இவ்வளவு அன்பும் மரியாதையும் வைப்பார்கள் என நினைத்துக் கூட பார்த்தது இல்லை. கற்பனை செய்து கூட பார்த்தது இல்லை. ஒரு ரயில் நிலையத்தில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த குழ்ந்தை, நாமும் ஒருநாள் நாடாளுமன்றத்தில் பேசுவோம் என கனவு கண்டிருக்க முடியாது. இன்று நான் நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறேன். இந்த நாட்டுக்கும் நாட்டு மக்களும் பெரும் நன்றி.

நாடாளுமன்றத்துக்கு ஒரு எம்பியாக உள்ளே நுழைந்த போது ஜனநாயகத்தின் கோவில் என்பதற்காக கீழே விழுந்து வணங்கினேன். அது எனக்கு உணர்ச்சி மிகுந்த தருணம். ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்த குழந்தை, ரயில்வே பிளாட்பார்மில் வளர்ந்த குழந்தை நாடாளுமன்றத்துக்குள் நுழையும் என கனவா கண்டிருக்கும்? இந்த நாட்டு மக்களின் பேரன்புக்கு பெரும் நன்றி. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.












Click it and Unblock the Notifications