"இப்படி சொல்லிட்டாங்களே".. பாலியல் சீண்டலுக்குள்ளான ஜப்பான் பெண் உருக்கம்.. கலங்கிய நெட்டிசன்கள்!
ஒருகட்டத்தில், மூர்க்கமான இளைஞர்கள் அவரிடம் முரட்டுத்தனமாக நடந்துகொண்டனர். அவரை கட்டிப்பிடிப்பதும், தலையில் முட்டைகளை உடைப்பதும், கண்ட இடங்களில் கை வைப்பதுமாக அவர்களின் செயல் எல்லை மீறியது.
டெல்லி: டெல்லியில் ஹோலி பண்டிகையின் போது சிறுவர்கள் சிலரால் கடுமையான பாலியல் சீண்டலுக்கு உள்ளான ஜப்பான் பெண் தனது ட்விட்டரில் வெளியிட்டிருக்கும் கருத்துதான் அனைவரையும் கலங்க வைத்துள்ளது.
இந்தியாவின் வட மாநிலங்களில் கடந்த 8-ம் தேதி ஹோலி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பொதுவாக, இந்த ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தை பார்ப்பதற்காகவே வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் இந்தியாவுக்கு வருகை தருவார்கள்.
அந்த வகையில், ஹோலி பண்டிகையை இந்தியர்களுடன் சேர்ந்து கொண்டாட ஆசைப்பட்டு டெல்லிக்கு வந்த ஜப்பான் இளம்பெண்ணுக்குதான் இந்த மோசமான அனுபவம் நேர்ந்துள்ளது.

எச்சரிக்கையை மீறி..
டெல்லியின் பஹர்கஞ்ச் பகுதிக்கு தனது நண்பர்களுடன் ஹோலி கொண்டாட்டத்தை பார்வையிட அந்த 23 வயது ஜப்பானிய பெண் வந்துள்ளார். ஏற்கனவே அவர்கள் தங்கிய ஹோட்டலில் இருந்த சிலர், "ஹோலி அன்று வெளியே போகாதீர்கள்.." என எச்சரித்துள்ளனர். ஆனால், பல முறை இந்தியாவுக்கு வந்திருந்த அந்த ஜப்பான் பெண்ணோ, "இந்தியர்களை பற்றி எனக்கு நன்றாக தெரியும். அவர்கள் மிகவும் அன்பானவர்கள். அவர்களால் எங்களுக்கு ஆபத்து ஏற்படாது" எனக் கூறி தனது நண்பர்களை அழைத்து சென்றிருக்கிறார்.

பயங்கர பாலியல் சீண்டல்
இந்தியர்கள் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கை சில மணிநேரங்கள் கூட நீடிக்கவில்லை. பஹஹ்கஞ்ச் பகுதியில் ஹோலி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிறுவர்களும், இளைஞர்களும் அங்கு வரும் பெண்கள் மீது வண்ணம் பூசுகிறோம் என்ற பெயரில் தவறாக நடப்பதை ஜப்பான் சுற்றுலா பயணிகள் பார்த்துள்ளனர். பின்னர், அவர்கள் திரும்பிச் சென்றுவிட முடிவு செய்த போது, அவர்களை 20-க்கும் மேற்பட்ட சிறுவர்களும், இளைஞர்களும் சூழ்ந்து கொண்டனர். பின்னர் அவர்கள் மீது வண்ணப்பொடிகளை அள்ளி வீசினர். பின்னர், அந்த ஜப்பானிய பெண் மீது அவர்களின் கவனம் திரும்பியது. இதையடுத்து, வண்ணம் பூசுவதாக கூறி அவரது உடல் பாகங்களை தவறான நோக்கத்தில் சீண்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தினர்.

பளார் அறை
இளைஞர்களின் நோக்கத்தை புரிந்துகொண்ட அந்தப் பெண் அங்கிருந்து நழுவிச்செல்ல முயன்றார். ஆனால், அவரை விடாத இளைஞர்கள், அவரிடம் தொடர்ந்து பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டனர். ஒருகட்டத்தில், மூர்க்கமான இளைஞர்கள் அவரிடம் முரட்டுத்தனமாக நடந்துகொண்டனர். அவரை கட்டிப்பிடிப்பதும், தலையில் முட்டைகளை உடைப்பதும், கண்ட இடங்களில் கை வைப்பதுமாக அவர்களின் செயல் எல்லை மீறியது. இதனால் பொறுமை இழந்த அப்பெண், அவர்களை பளார் பளார் என அறைந்தார். அவரது இந்த எதிர்வினையை எதிர்பார்க்காத இளைஞர்கள் அவரிடம் இருந்து விலகிச் சென்றனர்.

3 பேர் கைது
இதனிடையே, இந்த பாலியல் சீண்டல் வீடியோ சமூக வலைதளங்களில் தீயாக பரவி பூதாகரமானது. இதுதொடர்பாக தேசிய மகளிர் ஆணையத்தின் உத்தரவின் பேரில் டெல்லி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக, ஜப்பான் பெண்ணிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட 3 சிறுவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். மற்றவர்களை அடையாளம் காணும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

ஜப்பான் பெண் பதிவு
இது ஒருபுறம் இருக்க, பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான ஜப்பானிய பெண் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ஹோலி பண்டிகையில் நடந்த சம்பவத்தை எனது நண்பர்கள் வீடியோ எடுத்தனர். அந்த வீடியோவை நான் தான் சமூக வலைதளங்களில் பதிவிட்டேன். ஆனால், அந்த வீடியோ வைரலாகியதும் அதை நான் நீக்கிவிட்டேன். இந்த வீடியோவால் பாதிக்கப்பட்டவர்களிடம் நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்.

"இந்தியாவை நேசிக்கிறோம்"
இந்தியாவில் உள்ள அனைத்து விஷயங்களையும் நாங்கள் நேசிக்கிறோம். இந்தியாவையும் நேசிக்கிறோம். நான் பல முறை இந்தியாவுக்கு வந்திருக்கிறேன். இந்தியர்களின் அன்பைக் கண்டு நெகிழ்ந்திருக்கிறேன். இதுபோன்ற சில சம்பவங்களை வைத்துக்கொண்டு, ஒட்டுமொத்த இந்தியாவையும் என்னால் வெறுக்க முடியாது. நாங்கள் தற்போது வங்கதேசத்தில் பாதுகாப்பாக இருக்கிறோம். இவ்வாறு தனது பதிவில் அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications