தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையா தொடங்குறீங்க? வெக்கிறோம் பாரு ஆப்பு.. "இந்தியா" அணியை கதறவிடும் பாஜக
டெல்லி: லோக்சபா தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை உடனே தொடங்க வேண்டும் என "இந்தியா" கூட்டணி போட்ட தீர்மானத்தின் ஈரம் காய்வதற்குள் நாட்டின் அத்தனை கட்சிகளின் கவனத்தையும் அடுத்தடுத்த தடாலடிகளால் திசை திருப்பிவிட்டிருக்கிறது மத்தியில் ஆளும் பாஜக.
எதிர்க்கட்சிகளின் "இந்தியா" கூட்டணியின் 3-வது கூட்டம் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் லோக்சபா தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகளை மாநிலங்களில் உடனே தொடங்க வேண்டும் என ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானம் நிறைவேறும் தருணத்திலேயே எதிர்க்கட்சிகளின் கவனத்தை சிதறடிக்க ஒரு அறிவிப்பு வெளியானது. அதுதான் நாடாளுமன்ற சிறப்பு கூட்டமும் ஒரே நாடு ஒரே தேர்தல் அறிவிப்பும். இந்தியா கூட்டணிக்குள் இந்த ஆயுதம் பெரும் தாக்கத்தை உருவாக்கிவிட்டது. ஏனெனில் தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் ஆளும் திமுக, திரிணாமுல் காங்கிரஸ் அரசுகளின் எதிர்காலத்தை ஒரே நாடு ஒரே தேர்தல் பெரும் கேள்விக்குறியாக்கிவிட்டது. மத்தியில் ஆளும் பாஜக அரசு, அப்படி ஒரு மசோதாவை கொண்டு வந்தால் அதை தோற்கடிப்பதுதான் பிரதான பணியாக இருக்கும்; தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை எல்லாம் இப்போதைக்கு சரிப்படாது என்கிற விரக்தி நிலைக்கு எதிர்க்கட்சிகள் தள்ளப்பட்டன. அதேநேரத்தில் சிறிது ஆறுதல் அடையும் வகையில் முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு குழுவையும் மத்திய அரசு அறிவித்தது. அந்தக் குழுவின் பரிந்துரைகள் வரட்டும் பார்க்கலாம் என மோடில் நிம்மதியாக இருந்தது "இந்தியா" அணி.
இப்போது நாட்டின் பெயரையே "இந்தியா" என்பதை "பாரத குடியரசு" என மாற்றப் போவதாக தகவல்கள் வெளியாகி அடுத்த பீதியை கிளப்பிவிட்டிருக்கிறது பாஜக. ஜி 20 மாநாடுகளின் அழைப்பிதழ் தொடங்கி திரும்பிய திசை எல்லாம் பாரதமா? இந்தியாவா? என்கிற விவாதம் களைகட்டிக் கொண்டிருக்கிறது. இந்த திசை திருப்புவதில் ஒரு சில ஆங்கில செய்தி ஏஜென்சிகள் படுதீவிரமாக களமாடிக் கொண்டிருக்கின்றன. இதனால் ஒரே நாடு ஒரே தேர்தல் மோடில் இருந்து இந்தியாவா? பாரதமா? என்ற விவாதத்துக்குள் எதிர்க்கட்சிகளை பாஜக தள்ளிவிட்டிருக்கிறது.

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் செப்டம்பர் 18-ல் தொடங்குகிறது. இன்னும் 13 நாட்களே உள்ளன. இதுவரையில் மத்தியில் ஆளும் பாஜக அரசு எந்த ஒரு செயல் திட்டத்தையும் தெளிவாக அறிவிக்கவில்லை. அதனால் அடுத்து என்ன அறிவிப்பு வரும்? எதை பாஜக கிளப்பும்? என்கிற திகிலிலேயே "இந்தியா" கூட்டணி தலைவர்கள் உறைந்து போயுள்ளனர். தேர்தல் தொகுதி பங்கீடு என்பதெல்லாம் இப்போதைக்கு மூட்டை கட்டி வைப்போம் என்கிற நிலைக்கு "இந்தியா" அணியை மூலைக்குள் முடக்கி வைத்திருக்கிறது பாஜகவின் தடாலடி வியூகங்கள் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications