"இந்து கடவுள்களை வழிபட மாட்டேன்" - சர்ச்சையை கிளப்பிய ஆம் ஆத்மி அமைச்சர்.. பொங்கி எழுந்த பாஜக!
டெல்லி: "இந்து தெய்வங்களை ஒருபோதும் வணங்க மாட்டேன்; எனக்கு அவற்றின் மீது நம்பிக்கை இல்லை" என்று டெல்லி ஆம் ஆத்மி அமைச்சர் ராஜேந்திர பால் கெளதம் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சர் ராஜேந்திர பால் கெளதமின் இந்த பேச்சுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், அவரை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் எனவும் அக்கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.
ஆனால், தனது பேச்சுக்கு எந்தவித மறுப்பும் தெரிவிக்காத அமைச்சர் ராஜேந்திர பால், தான் பேசியதில் எந்த தவறும் இல்லை எனக் கூறியுள்ளார்.
ஒரு வேட்பாளர் ஒரே தொகுதி! கட்சிகளுக்கு கடிவாளம் போடும் தேர்தல் ஆணையம்! அரசுக்கு பறந்த பரிந்துரை!
அம்பேத்கர் வழியில்..
சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் 1956-ஆம் ஆண்டு விஜயதசமி நாளான அக்டோபர் 14 அன்று பல லட்சம் பேருடன் சேர்ந்து இந்து மதத்தில் இருந்து பெளத்த மதத்துக்கு மாறினார். இந்து மதத்தின் வர்ணாசிரம ஜாதிய கட்டமைப்பு மற்றும் தீண்டாமையை எதிர்த்து அந்த மதத்தில் இருந்து வெளியேறுவதாகவும் அவர் தெரிவித்தார். இந்நிகழ்வுக்கு முன்னதாகவே, "இந்து மதத்தில் பிறந்துவிட்டேன்; ஆனால் ஒருபோதும் இந்துவாக இறக்க மாட்டேன்" என அம்பேத்கர் சூளுரைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆம் ஆத்மி அமைச்சர் பேச்சால் சர்ச்சை
அம்பேத்கரின் இந்த வழியை பின்பற்றி, கடந்த 5-ஆம் தேதி விஜயதசமி தினத்தில் டெல்லி ஜாண்டேவாலனில் உள்ள டாக்டர் அம்பேத்கர் பவனில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்து மதத்தினர் புத்த மதத்துக்கு மாறினர். இந்த நிகழ்ச்சியில் டெல்லி சமூக நலத்துறை அமைச்சர் ராஜேந்திர பால் கெளதமும் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியது தான் தற்போது பெரும் சர்ச்சையாகி உள்ளது. அவர் பேசிய வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
'இந்துக் கடவுளை வழிபட மாட்டேன்'
இந்த மதம் மாறும் நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜேந்திர பால் உறுதிமொழி ஒன்றை வாசித்தார். அவர் வாசிக்க வாசிக்க, அங்கிருந்தவர்களும் அதை திருப்பிக் கூறுகின்றனர். அதில் அவர், "எனக்கு பிரம்மா, விஷ்ணு, சிவன் மீது நம்பிக்கை இல்லை. அவர்களை நான் வழிபட மாட்டேன். கடவுளின் அவதாரமாக கூறப்படும் ராமர் மீதும், கிருஷ்ணர் மீதும் எனக்கு நம்பிக்கை கிடையாது. அவர்களையும் நான் வழிபட மாட்டேன். விஷ்ணுவின் அவதாரமே புத்தர் எனக் கூறப்படுவது பொய்ப் பிரச்சாரம்" என்று ராஜேந்திர பால் கூறுகிறார். இந்த வீடியோதான் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
பாஜக கண்டனம்
இந்நிலையில், அமைச்சர் ராஜேந்திர பால் கெளதமின் இந்த பேச்சுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் தகவல் தொடர்புத் துறை தேசியப் பொறுப்பாளர் அமித் மால்வியா தனது ட்விட்டர் பக்கத்தில், "ஆம் ஆத்மி அமைச்சர் ராஜேந்திர பால் கெளதம் இந்தியாவை உடைக்கும் திட்டத்தை (Breaking India Poject) செயல்படுத்தி வருகிறார். இந்த இந்து வெறுப்பு பிரச்சாரத்துக்கு டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால்தான் 'ஸ்பான்சர்' ஆக இருப்பார். அவரது பேச்சானது இந்து மதத்துக்கும், புத்த மதத்துக்கும் நடந்த மிகப்பெரிய அவமதிப்பு. ஆம் ஆத்மி அமைச்சர்கள் நாட்டில் கலவரத்தை உருவாக்க முயல்கிறார்கள். இந்து மதத்தை இழிவுபடுத்தியதற்காக ராஜேந்திர பால் கெளதமை அமைச்சரவையில் இருந்து முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் நீக்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக ராஜேந்திர பால் மீது புகார் கொடுத்திருக்கிறோம்" எனக் கூறியுள்ளார்.
அமைச்சர் விளக்கம்
இதனிடையே, தனது பேச்சு சர்ச்சையானது குறித்து டெல்லி அமைச்சர் ராஜேந்திர பால் கெளதம் விளக்கம் அளித்துள்ளார். அதில், "பாஜக ஒரு தேச விரோத சக்தி. எனக்கு பெளத்த மதத்தில் நம்பிக்கை உள்ளது. இதில் மற்றவர்களுக்கு என்ன பிரச்சினை? விரும்பிய மதத்தை பின்பற்றும் உரிமையை நமது அரசமைப்புச் சட்டம் அனைவருக்கும் வழங்கியுள்ளது. நான் எந்த மதத்துக்கும் எதிராகப் பேசவில்லை. என் மீது அவர்கள் புகார் அளிக்கட்டும். அதை நான் சட்டரீதியாக எதிர்கொள்வேன். ஆம் ஆத்மியை பார்த்து பாஜக பயப்படுகிறது. அதன் காரணமாகவே, ஆம் ஆத்மி எதை செய்தாலும் அதில் பாஜக தவறு கண்டுபிடித்து வருகிறது. பாஜகவினரால் பொய் வழக்குகளை மட்டுமே எங்களுக்கு எதிராகத் தொடுக்க முடியும்" என்றார்.