அமைதியாகிவிட மாட்டேன்.. நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பிய மஹுவா மொய்த்ரா.. கொதிக்கும் பாஜக எம்பிக்கள்
டெல்லி: முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய் குறித்து நாடாளுமன்றத்தில் கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்காக, திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் பாஜக எம்பிக்கள் தீர்மானம் கொண்டு வந்துள்ளனர்.
ஆனால் இதுபோன்ற மிரட்டல்களை கண்டு அஞ்சி, ஒரு போதும் அமைதியாகிவிட மாட்டேன் என மஹுவா மொய்த்ரா எம்பி ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.
லோக்சபாவில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் குறித்து மஹுவா மொய்த்ரா புதன்கிழமை வீடியோ கிளிப்களைப் பகிர்ந்தார். இதையடுத்து ஆளும் பாஜக எம்பிக்கள், மஹுவா மொய்த்ராவுக்கு எதிராக தனிநபர் தீர்மானத்தை கொண்டு வர முடிவு செய்துள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நடவடிக்கை உறுதி
மஹுவா மொய்த்ராவுக்கு எதிராக தீர்மான கோரிக்கையை முன்னாள் அமைச்சர் பி.பி. சவுத்ரி வைத்தார். இதற்கு மற்றொரு பாஜக எம்.பியா நிஷிகாந்த் துபே ஆதரித்தார். இது தொடர்பாக நேற்று மத்திய நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி பேசுகையில், முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோயை குறிவைத்து பேசிய கருத்துக்களுக்காக மஹுவா மொய்த்ரா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
தீவிரமான விஷயம்
பிரல்ஹாத் ஜோஷி மேலும் கூறுகையில். "அயோத்தி கோயில்-மசூதி தீர்ப்பு குறித்து பிரச்சனையை எழுப்பி, அப்போதைய உச்ச நீதிமன்ற நீதிபதி பற்றி விமர்சிப்பது மிகவும் தீவிரமான விஷயம். எனவே மஹுவா மொய்த்ரா மீது நடவடிக்கைகளை எடுக்க நாங்கள் யோசித்து வருகிறோம்" என்றார்.
எனக்கு அது பாக்கியம்
இப்படி பாஜகவினர் அடுத்தடுத்து நெருக்கடி கொடுத்த நிலையில், மஹுவா மொய்த்ரா, இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் ட்வீட் போட்டுள்ளார். அந்த பதிவில். "இந்தியாவின் இருண்ட நேரத்தில் உண்மையை பேசியதற்காக எனக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்பட்டால் உண்மையில் ஒரு பாக்கியமாக இருக்கும். ஆனால் மத்திய அரசு எனக்கு எதிராக செல்ல வேண்டாம் என்று முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. சண்டைக்கு நான் தயாராக இருந்த போதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை" என்றார்.
இப்படி பேசலாமா
இதனிடையே திரிணாமுல் எம்.பி மஹுவா மொய்த்ராவின் கருத்துக்களுக்கு பாஜக எம்.பி.க்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். நாடாளுமன்ற எம்பியாக உள்ள முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயை, உயர் அதிகாரத்தில் இருந்தவர் என்று கருதாமல் மொய்த்ரா பேசியுள்ளார் என விமர்சித்தனர். மேலும் நேற்று லோக்சபாவில் பரபரப்பை ஏற்படுத்திய மஹுவா மொய்த்ராவின் கருத்துக்கள் நீக்கப்பட்டன. "இந்த கருத்துக்கள் நீதித்துறைக்கு எதிரானது" என்று சபாநாயகர் அலுவலகம் கூறி நீக்கிவிட்டது.
மொய்த்ரா பேச்சு
முன்னதாக மொய்த்ரா ஆவேசமாக நாடாளுமன்றத்தில் பேசும் போது, விவசாயிகள் போராட்டங்கள் மீது ஒடுக்குமுறை நடக்கிறது. இந்தியா அறிவிக்கப்படாத அவசர நிலையில் உள்ளது. அரசு தவறான தகவல்களை தொடர்ந்து பிரச்சாரமாக செய்து வருகிறது. நீதித்துறை மற்றும் ஊடகங்கள் தோல்வி அடைந்துவிட்டன. அதிகாரம், வெறுப்பு, பொய்யின் பின்னால் ஒளிந்து கொள்ளும் கோழைகள். அதை தைரியம் என்று அழைக்கத் துணிகிறார்கள்" என்றார்.