யுபிஎஸ்சி தலைவராக பிரீத்தி சுதன் நியமனம்.. யார் இந்த ஓய்வு பெற்ற பெண் ஐஏஎஸ் அதிகாரி தெரியுமா? பின்னணி
டெல்லி: யுபிஎஸ்சி எனும் மத்திய பணியாளர் தேர்வாணயத்தின் தலைவராக இருந்த மனோஜ் சோனி தனது பதவிக்காலம் முடியும் முன்பே பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து யுபிஎஸ்சியின் புதிய தலைவராக ஓய்வு பெற்ற பெண் ஐஏஎஸ் அதிகாரி பிரீத்தி சுதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் நாளை பதவியேற்க உள்ள நிலையில் பிரீத்தி சுதன் யார்? பின்னணி என்ன? என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
நம் நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஃஎப்எஸ் உள்பட பல மத்திய அரசு பணிகளுக்கான தேர்வுகளை யுபிஎஸ்சி எனும் மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. இதன் தலைவராக இருந்தவர் மனோஜ் சோனி. இவர் குஜராத்தை சேர்ந்தவர். பிரதமர் மோடிக்கு மிகவும் நெருக்கமானவர்.

இவர் கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் 16ம் தேதி முதல் யுபிஎஸ்சி தலைவராக பொறுப்பேற்றார். இவர் வரும் 2029ம் ஆண்டு வரை இந்த பொறுப்பில் நீடிக்க முடியும் என்ற சூழலில் திடீரென்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.
தனிப்பட்ட காரணங்களால் யுபிஎஸ்சி தலைவர் பதவியில் இருந்து விலகி கொள்வதாக மனோஜ் சோனி தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டு ஜனாதிபதி திரெளபதி முர்முவுக்கு அனுப்பி வைத்தார். அவரது ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டது. இதையடுத்து யுபிஎஸ்சிக்கு புதிய தலைவரை நியமிக்கும் பணி என்பது தொடங்கியது.
இந்நிலையில் தான் யுபிஎஸ்சியின் புதிய தலைவராக ஓய்வு பெற்ற பெண் ஐஏஎஸ் அதிகாரி பிரீத்தி சுதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதி திரெளபதி முர்முவின் ஒப்புதலை தொடர்ந்து பிரீத்தி சுதன் இந்த பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார். நாளைய தினம் அவர் யுபிஎஸ்சி தலைவராக பொறுப்பேற்க உள்ளார். இவர் 2025 ஏப்ரல் மாதம் 29 ம் தேதி வரை இந்த பொறுப்பில் நீடிப்பார்.
இந்நிலைலயில் தான் பிரீத்தி சுதன் யார்? என்பது பற்றிய விபரம் வெளியாகி உள்ளது. அதாவது பிரீத்தி சுதன் 1983ம் ஆண்டு ஐஏஎஸ் பேட்ஜ்ஜை சேர்ந்தவர். இவர் ஆந்திராவில் ஐஏஎஸ்ஸாக பணியாற்றினார். அதன்பிறகு மத்திய அரசின் பணிக்கு சென்றார். மத்திய அரசில் சுகாதாரத்துறை செயலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றார்.












Click it and Unblock the Notifications