சமூக பரவல் தொடங்கிவிட்டதா? தமிழகத்தில் 3 மாவட்டங்கள் உள்பட 69 மாவட்டங்களில் ஐசிஎம்ஆர் ஆய்வு
டெல்லி: நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் சமூக பரவல் தொடங்கிவிட்டதா என்பதை கண்டறிய இந்திய மருத்துவ கவுன்சில் ஆய்வு நடத்த முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் கொரோனோ வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இன்றைய நிலவரப்படி இதுவரை 70 ஆயிரத்து 200க்கும் அதிகமானோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதில் 46 ஆயிரம் பேர் நாடு முழுவதும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.. 22 ஆயிரம் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். சுமார் 2300 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா.. தென் மாவட்டங்களிலுள்ள சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் சென்னைவாசிகள்.. கிராமங்களின் நிலை?
மருத்துவ கவுன்சில்
இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று வழக்கத்துக்கு மாறாக அதிகரித்து வரும் நிலையில் சமூக பரவல் தொடங்கிவிட்டதா என்பதை கண்டறிய இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும் நோய் கட்டுப்பாட்டு தேசிய மையம் ஆகியவை இணைந்து நாடு முழுவதும் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் ஆய்வு நடத்த முடிவு செய்துள்ளன.
சென்னையில் சோதனை
21 மாநிலங்களில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட 69 மாவட்டங்களில் ஆய்வு நடத்த இந்திய மருத்துவ கவுன்சில் முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் சென்னை, திருவண்ணாமலை, கோவை ஆகிய மூன்று மாவட்டங்களில் ஆய்வு செய்ய உள்ளது. முற்றிலும் இந்தியாவிலேயே (புனேவில்) தயாரிக்கப்பட்ட கொரோனா வைரஸை கண்டுபிடிக்கும் கருவியான எலிஸா டெஸ்ட் கிட் மூலம் இந்த பரிசோதனை நடத்தப்பட உள்ளது.
வீட்டுக்கு ஒருவரிடம் சோதனை
ஒரு வீட்டுக்கு ஒருவர் என மொத்தம் ஒரு மாவட்டத்திற்கு ஒரு வாரத்தில் 200 மாதிரிகள் மற்றும் ஒரு மாவட்டத்திற்கு மாதத்திற்கு 800 மாதிரிகள் எடுக்கப்பட உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும், ஆறு பொது மற்றும் நான்கு தனியார் சுகாதார வசதிகள் உட்பட 10 சுகாதார வசதிகள் தேர்ந்தெடுக்கப்படும். நோயாளிகளை கணக்கெடுப்பவர், கர்ப்பிணி பெண்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்டோரிடமும் சாம்பிள் எடுக்கப்படும். ஒவ்வொரு 25 சாம்பிள்கள் சேகரிக்கப்பட்ட பிறகு சோதிக்கப்படும்.
எலிசா பரிசோதனை கருவி
இந்த சோதனைகள் அனைத்தும் கண்காணிப்பு நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட உள்ளது. தனிப்பட்ட நோயாளிகளைக் கண்டறிவதற்கு இதைப் பயன்படுத்தப்படமாட்டாது. எலிசா சோதனைக்கு ஐ.ஜி.ஜி ஆன்டிபாடிகளைக் கண்டறிய தொண்டை, நாசி துளிகளில், இரத்த மாதிரிகள் சேகரிக்கப்படும். இரத்த மாதிரிகளின் IgG ELISA அடிப்படையிலான சோதனை முற்றிலும் கண்காணிப்பு நோக்கத்திற்காக செய்யப்பட உள்ளது. அடுத்தடுத்த சுற்றுகளில், RT-PCR அடிப்படையிலான சோதனைக்கு மாற்றப்படும்.