இதுதான் நேரம்னு பெட்ரோல் விலையை கூட்டினால், விடமாட்டோம் பார்த்துக்கோங்க! காங்கிரஸ் அதிரடி எச்சரிக்கை
டெல்லி: பெட்ரோல் விலையை உயர்த்தினால், தெருவில் இறங்கி போராட்டம் நடத்தும் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கியாஸ் சிலிண்டர் விலை மாதம் ஒருமுறை உயர்த்தப்பட்டு வருகிறது. நேற்று வணிக பயன்பாட்டு சிலிண்டர் மட்டும் ஒரே நாளில் 105 ரூபாய் உயர்த்தப்பட்டு ரூ.2,145.50 ஆக அதிகரித்தது.
ரஷ்யா உக்ரைன் போர் நடந்து வரும் நிலையில் கச்சா எண்ணெய் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வரும் நிலையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல்
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே தினமும் மாற்றிக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியபோது விமர்சனத்துக்குள்ளானது. எதிர்கட்சிகள் மத்திய அரசை சாடின. இந்நிலையில், உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்கள் நடந்து வருவதால், தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை.

கச்சா எண்ணெய்
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்திருப்பதால், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. ரஷ்யாவிற்கு பல்வேறு விதமான ஏற்றுமதி தடைகள் விதிக்கப்பட்டு உள்ளன. இதனால் ரஷ்யாவில் இருந்து வர கூடிய பெரும் அளவிலான கச்சா எண்ணெய் முடங்கி உள்ளது. இந்த நிலையில்தான் கச்சா எண்ணெய் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஒரு பேரல் 105 டாலருக்கு விற்பனை ஆகிறது.

பெட்ரோல் - டீசல்
தேர்தல் நடைபெற்று வருவதால், இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்படாமல் இருக்கிறது. தேர்தல் முடிந்த பிறகு, மார்ச் 7ம் தேதிக்குக்குப் பிறகு மொத்தமாக பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்படும் என தெரியவருகிறது. இந்தநிலையில் மோடி அரசு பெட்ரோல்-டீசல் விலையை உயர்த்தினால் காங்கிரஸ் கட்சி தெருவில் இறங்கி போராட்டம் நடத்தும் என்று ராகுல்காந்தி தெரிவித்துளார்.

ராகுல் காந்தி
இதுகுறித்து ராகுல் காந்தி தன்னுடைய ட்விட்டரில், ''கியாஸ் சிலிண்டர் விலையை மீண்டும் ஒருமுறை உயர்த்தியதன் மூலம் சாமானியர்களின் துன்பங்களுக்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை மோடி அரசு தெளிவுப்படுத்தி உள்ளது. இன்று சிலிண்டர், நாளை பெட்ரோல்-டீசல்'' என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ்
காங்கிரஸ் மூத்த தலைவர் அல்கா லம்பா கூறுகையில், '' 5 மாநில தேர்தல் முடிந்தவுடன் வீட்டு பயன்பாட்டு சிலிண்டர்களின் விலையில் ரூ.27 உயர்த்தப்படும் என்று அஞ்சப்படுகிறது. பெட்ரோல்-டீசல், கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு பிரச்சினையை காங்கிரஸ் கட்சி எப்போதும் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளது. தேர்தலுக்கு பிறகு பெட்ரோல்-டீசல் மற்றும் கியாஸ் விலையை உயர்த்தினால் காங்கிரஸ் கட்சி தெருவில் இறங்கி போராட்டம் நடத்தும்'' என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications