ஐகோர்ட் தப்பு பண்ணிருந்தா நாங்களும் செய்யணுமா? கெஜ்ரிவால் ஜாமீன் தடையை நீக்க மறுத்த சுப்ரீம் கோர்ட்!
டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமினுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நாளை மறுநாளுக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்து.
தலைநகர் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார். டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இது தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணையை தொடங்கியது. இந்த வழக்கில் கடந்த மார்ச் 21 ஆம் தேதி அமலாக்கத்துறையால் டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார்.

நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கெஜ்ரிவாலுக்கு தேர்தலையொட்டி உச்ச நீதிமன்றம் கடந்த மே 10 ஆம் தேதி இடைக்கால ஜாமீன் வழங்கியது. இந்த ஜாமீன் காலம் நிறைவடைந்த நிலையில், கடந்த ஜூன் 2 ஆம் தேதி கெஜ்ரிவால் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். அதேநேரம் அவர் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார்.
கெஜ்ரிவாலின் ஜாமீன் மனு விசாரணையின் போது, கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த வழக்கின் குற்றவாளிகளுடன் கெஜ்ரிவாலுக்கு தொடர்பு இருந்ததாக அமலாக்கத்துறை வாதிட்டது. ஆனால் கெஜ்ரிவாலுக்கு எதிராக அமலாக்கத்துறை தரப்பில் எந்த ஆதாரமும் தாக்கல் செய்யப்படவில்லை என அவருடைய வழக்கறிஞர் வாதிட்டார். விசாரணை முடிவில் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து கெஜ்ரிவால் இன்று சிறையில் இருந்து விடுதலை செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதேசமயம், கெஜ்ரிவாலை ஜாமீனில் விட எதிர்ப்பு தெரிவித்து அமலாக்கத்துறை தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் உடனடியாக மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், கெஜ்ரிவால் ஜாமீன் மனு மீதான உத்தரவை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. இதனால், கெஜ்ரிவால் ஜாமீனில் விடுதலையாக முடியாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் ஜாமின் நிறுத்தி வைக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மேல் முறையீடு செய்தார். டெல்லி ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் மனோஜ் மிஸ்ரா மற்றும் எஸ்.வி.என் பட்டி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரவிந்த கெஜ்ரிவால் ஜாமினுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. உயர்நீதிமன்ற உத்தரவின் முழு விவரம் கிடைத்த பின்பே மேல்முறையீட்டு மனு மீது முடிவெடுக்கப்படும் என நீதிபதி மிஸ்ரா தெரிவித்தார்.
உயர்நீதிமன்றம் விதித்த தடை உத்தரவின் முழு விவரம் கிடைத்த பின் கெஜ்ரிவாலின் மேல்முறையீட்டு மனு விசாரிக்கப்படும் என்று கூறி, இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை நாளை மறுநாளுக்கு ஒத்திவைத்துள்ளது.
முன்னதாக அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் எஸ்வி ராஜூ, பணம் மோசடி வழக்கில் விசாரணை நீதிமன்றம் வழங்கிய ஜாமீனுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்து உள்ளதாகவும், விரைவில் அந்த மனு குறித்து தீர்ப்பு வழங்கப்பட உள்ளதாகவும் கூறினார்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கின் உயர் நீதிமன்றம் தலையிட்டு உள்ளதால் உடனடியாக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நிவாரணம் வழங்க முடியாது என்றும் காத்திருந்து வழக்கு குறித்து டெல்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்நோக்குவோம் என்றும் கூறினர்.
நீதிமன்ற உத்தரவை கண்டுகொள்ளாமல் தடை விதிக்க முடியும் என்றால், உயர்நீதிமன்ற உத்தரவை ஏன் நிறுத்தி வைக்க முடியாது என்று கெஜ்ரிவால் தரப்பு வழக்கறிஞர் சிங்வி வாதிட்டார். அதற்கு நீதிபதி மிஸ்ரா, "உயர்நீதிமன்றம் தவறிழைத்திருந்தால் அதை உச்ச நீதிமன்றமும் மீண்டும் செய்ய வேண்டுமா? இது ஒரு துணை நீதிமன்றம் அல்ல, இது உச்ச நீதிமன்றம்.அனைத்து தரப்பினரும் பொறுமையாக காத்திருங்கள்" என்று அறிவுறுத்தினார்.












Click it and Unblock the Notifications