நான் என்ன பில்லா-ரங்காவா?.. ஏன் இப்படி செய்கிறீர்கள்.. கோர்ட்டிலேயே கொந்தளித்த சிதம்பரம் தரப்பு!
ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவலை டிசம்பர்.11 வரை நீட்டித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
டெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவலை டிசம்பர்.11 வரை நீட்டித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் சிறைக்கு சென்று நாளை மறுநாளோடு 100 நாட்கள் ஆக போகிறது. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ சார்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் கைது செய்யப்பட்டார்.
இவர் மீது இரண்டு வெவ்வேறு வழக்குகள் பதியப்பட்டு இருப்பதால் இவரால் இன்னும் முழுமையாக ஜாமீன் பெற முடியவில்லை. இவர் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை இரண்டும் தனி தனியாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த சிபிஐ வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ப. சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கினார்கள்.
ஆனால் இன்னும் அமலாக்கத்துறை வழக்கில் ப. சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடைக்கவில்லை. ஐஎன்எக்ஸ் நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெறுவதில் முறைகேடு நடந்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் புகார் உள்ளது. அமலாக்கத்துறை வழக்கில் தற்போது ப. சிதம்பரம் நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இவருக்கு ஜாமீன் வழங்க முடியாது என்று தொடர்ந்து டெல்லி ஹைகோர்ட் மறுத்து வந்தது. இதற்கு எதிராக ப. சிதம்பரம் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்து இதன் மீதான விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் இன்னொரு பக்கம் ப. சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த வாரம் அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்தது.
இந்த நிலையில் அமலாக்கத்துறை காவல் இன்றோடு முடிந்ததால் அதன் மீதான விசாரணை இன்று நடந்தது. நீதிபதி அஜய் குமார் குஹார் இந்த மனுவை விசாரித்தார். அதில் ப. சிதம்பரத்திற்கு ஜாமீன் அளிக்க வேண்டும். அவர் போதுமான நாட்கள் சிறையில் இருந்துவிட்டார். அவரிடம் அதிக நாட்கள் விசாரணை நடத்திவிட்டார்கள்.
ஆனால் அவர் எந்த முறைகேடும் செய்யவில்லை. வேண்டுமென்றே அரசியல் ரீதியாக ப. சிதம்பரம் பழி வாங்கப்படுகிறார். அமலாக்கத்துறை வேண்டுமென்றே அவருக்கு ஜாமீன் தர மாறுகிறது என்று டெல்லி சிபிஐ கோர்ட்டில் ப. சிதம்பரம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதம் செய்தார்.
ஆனால் இதை அமலாக்கத்துறை சார்பாக ஆஜரான வழக்கறிஞர் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கடுமையாக எதிர்த்தார். ப. சிதம்பரத்தை ஜாமீனில் விட்டால் ஆபத்து. அவர் ஆதாரங்களை அழித்துவிடுவார். வாக்குமூலம் கொடுத்தவர்களை சந்தித்தார் மிரட்டல் விடுக்க வாய்ப்புள்ளது என்று வாதம் செய்தார்.
இதையடுத்து ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவலை டிசம்பர்.11 வரை நீட்டித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நீதிபதி அஜய் குமார் குஹார் இந்த உத்தரவை பிறப்பித்தார். இதனால் கோபம் அடைந்த ப. சிதம்பரத்தின் வழக்கறிஞர் கபில் சிபல் மீண்டும் வாதம் செய்தார்.
அதில், ப. சிதம்பரம் என்ன ரங்கா - பில்லா போல கடத்தல்காரர்களா? அவர் எப்படி ஜாமீனில் வெளியே வந்தால் ஆதாரத்தை அழிப்பார். அவரை இப்படி நடத்துவதை ஏற்க முடியாது. ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார். ஆனால் கபில் சிபல் வாதத்தை ஏற்காத நீதிபதி அஜய், ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவலை டிசம்பர்.11 வரை நீட்டித்து உத்தரவிட்டார்.