“கோல்மால்”.. 18 வழக்குகள்.. இதை ஏற்கலைனா மொத்தப் பேரின் பதவியும் காலியாகிடும்.. புகழேந்தி பேட்டி!
டெல்லி : "எடப்பாடி பழனிசாமி எப்படியெல்லாம் கோல்மால் செய்துள்ளார் என்பதை தேர்தல் ஆணையத்தில் தெளிவாக எடுத்துரைத்துள்ளோம். ஓபிஎஸ்ஸை ஒப்புக்கொள்ளவில்லை என்றால் அதிமுகவின் எல்லா எம்.எல்.ஏக்கள், எம்பிக்களின் பதவியும் போய்விடும்" என ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
ஜூலை 11ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தரப்பினர் நிறைவேற்றிய தீர்மானங்கள் செல்லும் என ஐகோர்ட் உத்தரவிட்டு, பொதுச் செயலாளர் தேர்தலுக்கு எதிராக ஓபிஎஸ் தரப்பு தொடர்ந்த வழக்குகளை தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, அதிமுக பொதுச்செயலாளராகப் பதவியேற்றார் எடப்பாடி பழனிசாமி. அதை எதிர்த்து ஓபிஎஸ் மேல்முறையீடு செய்துள்ளார்.

இந்நிலையில், பொதுக்குழு முடிவுகளை அங்கீகரிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடமும் ஈபிஎஸ் தரப்பு கோரியிருந்தது. அதன் மீது தேர்தல் ஆணையம் எந்த முடிவும் எடுக்காததால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது, கர்நாடகா தேர்தலில் அதிமுக போட்டியிட உள்ளதால் அதிமுகவின் புதிய சட்டவிதிகளை அங்கீகரித்து தேர்தல் ஆணையம் ஒப்புதல் தர வேண்டும் ஈபிஎஸ் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
ஆனால் தேர்தல் ஆணையமோ, இந்த பிரச்சனையில் நிலைமையை கவனித்து வருகிறோம். எடப்பாடி பழனிசாமி தரப்பின் கோரிக்கை தொடர்பாக முடிவெடுக்க 10 நாட்கள் அவகாசம் தேவை என தெரிவிக்கப்பட்டது. இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு கடும் ஆட்சேபனை தெரிவித்தது. எனினும், 10 நாட்கள் அவகாசம் அளித்து கோர்ட் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது.
இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்கக் கூடாது எனவும், கடந்த ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி நடந்த பொதுக்குழு தீர்மானங்களை அங்கீகரிக்கக் கூடாது எனவும் தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணியின் கொள்கை பரப்புச் செயலாளர் புகழேந்தி மனு ஒன்றை அளித்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த புகழேந்தி, "ஒருங்கிணைப்பாளர் தலைமையில் தான் அதிமுக இயங்குகிறது. இங்கு பொதுச் செயலாளர் என்ற பேச்சுக்கே இடமில்லை. எடப்பாடி பழனிசாமி தன்னைத் தானே பொதுச் செயலாளராக அறிவித்துக் கொண்டுள்ளார். அதிமுக ஒன்றரைக் கோடி தொண்டர்கள் பட்டியலே இல்லை. 18 வழக்குகள் வழக்காடு மன்றங்கள் முன்பு நிலுவையில் இருக்கின்றன. தேர்தல் ஆணையத்திலேயே நான் இதுவரை 5 மனுக்கள் கொடுத்திருக்கிறேன்.
பொதுக்குழு முடிவுகளை அறிவிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்தார். தேர்தல் ஆணையம் தெளிவாக, இத்தனை வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன எனக் கூறி பரிசீலிக்க 10 நாட்கள் அவகாசம் கேட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி எப்படியெல்லாம் கோல்மால் செய்துள்ளார் என்பதை தேர்தல் ஆணையத்தில் தெளிவாக எடுத்துரைத்துள்ளோம்.
எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். எனவே ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்குத்தான் இரட்டை இலையை ஒதுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளோம். அப்படி தேர்தல் ஆணையம் ஒதுக்கினால், ஓபிஎஸ் தான் ஏ ஃபார்ம், பி ஃபார்மில் கையெழுத்து போடுவார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் எல்லா ஏ ஃபார்ம், பி ஃபார்மிலும் ஓ.பன்னீர்செல்வம் கையெழுத்துப் போட்ட பிறகுதான் பழனிசாமி கையெழுத்துப் போட்டிருக்கிறார். உள்ளாட்சி தேர்தல்களுக்கும், ராஜ்யசபா எம்.பி என அனைவருக்கும் ஓபிஎஸ் தான் கையெழுத்து போட்டுள்ளார். ஓபிஎஸ்ஸை ஒப்புக்கொள்ளவில்லை என்றால் எல்லா எம்.எல்.ஏக்கள், எம்பிக்களின் பதவியும் போய்விடும். எல்லா விவரங்களையும் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்திருக்கிறோம்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications