"சாலைகள் மோசமான நிலையில் இருந்தால்.. சுங்க கட்டணம் வசூலிக்கக் கூடாது.." நிதின் கட்கரி அதிரடி!
டெல்லி: நமது நாட்டில் இப்போது நெடுஞ்சாலைகளில் பயணிக்கத் தனியாகச் சுங்கக் கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது. இருப்பினும், பல இடங்களில் சாலைகள் நல்ல நிலையில் இல்லாத போதிலும் சுங்கக் கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது. இதற்கிடையே சாலைகள் நன்றாக இருந்தால் மட்டுமே சுங்கக் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்றும் மோசமான நிலையில் இருந்தால் சுங்கக் கட்டணங்கள் வசூலிக்கக் கூடாது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்குச் சுங்கக் கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது. இப்போது அவை பாஸ்ட் டேக் தானியங்கி முறையில் வசூலிக்கப்படுகிறது.

சாலைகளைப் பராமரிக்கவே இந்த சுங்கக் கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. அதேநேரம் பல இடங்களில் சாலைகள் முறையாகப் பராமரிக்கப்படாத போதிலும் சுங்கக் கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது.
நிதின் கட்கரி: இதற்கிடையே மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இது தொடர்பாக சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். அதாவது சாலைகள் சரியாக இல்லை என்றால் குறிப்பிட்ட சாலைகளுக்குச் சுங்க கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
மத்திய அரசு நடப்பு ஆண்டு முதல் சாட்டிலைட் மூலம் இயங்கும் ஜிபிஎஸ் அடிப்படையிலான சுங்க கட்டணம் வசூலிக்கும் முறையைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது. நடப்பு ஆண்டிலேயே சுமார் 5,000 கி.மீட்டருக்கு மேல் இத்திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான பயிற்சிப் பட்டறை நடந்த நிலையில், அதில் நிதின் கட்கரி கலந்து கொண்ட போது தான் இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார்..
வசூலிக்கக் கூடாது: இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "தரமான சேவையை வழங்கவில்லை என்றால் சுங்க கட்டணம் வசூலிக்கக் கூடாது.. சரியான முறையில் மக்கள் நலனைக் காக்கும் வகையில் சுங்கக் கட்டணத்தை வசூலிக்கத் திட்டமிட்டுள்ளோம்.. தரமான சாலையை வழங்கினால் மக்களிடம் இருந்து சுங்கக் கட்டணத்தை வசூலிக்கலாம். சாலையில் பள்ளங்கள், சேறு சகதி இருக்கும் போது அந்த சாலைகளுக்குச் சுங்கக் கட்டணம் வசூலிக்கக்கூடாது.. அப்படி வசூலித்தால் மக்கள் அதற்குக் கடுமையான எதிர்ப்பு தெரிவிப்பார்கள்" என்றார்.
மத்திய அரசு: மத்திய அரசுக்குச் சொந்தமான தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் இப்போதுள்ள FASTag அமைப்பிற்குப் பதிலாக GNSS-அடிப்படையிலான எலக்ட்ரானிக் டோல் கலெக்ஷன் (ETC) முறையைச் செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இது சாட்டிலைட் அடிப்படையில் இயங்கும் சுங்கக் கட்டண வசூலிக்கும் முறையாகும். முதற்கட்டமாக வணிக வாகனங்களில் இந்த முறையை அமல்படுத்தவும் அதன் பிறகு தனியார் வாகனங்கள் உட்பட அனைத்து வாகனங்களிலும் இந்த முறையை அமல்படுத்தத் திட்டமிட்டுள்ளனர்.
இந்த முறையில் மோசடி நடக்காமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஜிஎன்எஸ்எஸ் மூலம் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் போது கட்டண முறைகள் ப்ரீபெய்டில் இருந்து போஸ்ட்பெய்டுக்கு மாற்றப்படலாம். வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் பயணத் திட்டங்களின் அடிப்படையில் இதற்கான கிரெடிட்களை விரிவாக வழங்க முடியும் என்று தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
சிக்கல்கள்: அதேநேரம் இந்த ஜிபிஎஸ் அடிப்படையிலான சுங்க கட்டண முறையில் குறிப்பிட்ட வாகனங்களில் இருப்பிடங்கள் ஜிபிஎஸ் தொழில்நுட்பம் மூலம் டிராக் செய்யப்படும். இது தனியுரிமை சார்ந்த கேள்விகளையும் எழுப்புகிறது. எனவே, இது தொடர்பாகவும் மத்திய அரசு ஆலோசனை செய்து வருகிறது.












Click it and Unblock the Notifications