இந்திய வரலாற்றின் ஆன்மாவை புரிந்துகொள்ள இந்தி படியுங்க.. சொல்வது உள்துறை அமைச்சர் அமித்ஷா
டெல்லி: இந்திய வரலாற்றின் ஆன்மாவை புரிந்து கொள்ள இந்தி மொழியை அனைவரும் கற்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தி உள்ளார்.
இந்தி திவாஸ் அல்லது இந்தி மொழி தினம் என்பது செப்டம்பர் 14-ந் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. மத்திய அரசு நாடு முழுவதும் இந்தி தின கொண்டாட்டங்களை நடத்தி வருகிறது.
இந்தி தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி தமது ட்விட்டர் பக்கத்தில், இந்தி மொழி உலகம் முழுவதும் இந்தியாவுக்கு சிறப்பு மரியாதையை கொண்டு வந்துள்ளது. அதன் எளிமையும், உணர்திறனும் எப்போதும் ஈர்ப்புடையதாக உள்ளன. இந்தி தினத்தன்று அதன் வளர்ச்சிக்கும், அதிகாரம் அளித்தலுக்கும் அயராது பாடுபட்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை நான் தெரிவித்து கொள்கிறேன் என கூறியிருந்தார்.

தேச ஒற்றுமைக்கு இந்தி
இதேபோல உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிராந்திய மொழிகளுக்கு மாற்றாக என்பது அல்லாமல் ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தியை கொண்டுவர வேண்டும். மாநில மக்கள் தங்களுக்கு இடையேயான உரையாடல்களை இந்தியில் மேற்கொள்ள வேண்டும்; தேசத்தின் ஒற்றுமைக்கு இந்தி பங்களிப்பு முக்கியம் என்றார்.

கர்நாடகா போராட்டம்
இந்தி தினத்தை கொண்டாட எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் இன்று போராட்டங்கள் நடைபெற்றன. கர்நாடகா சட்டசபை வளாகத்தில் அம்மாநில முன்னாள் முதல்வர் குமாரசாமி தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் எம்.எல்.ஏக்கள், எம்.எல்.சி.க்கள் பங்கேற்று இந்தி திணிப்புக்கு எதிராக பதாகைகளுடன் முழக்கங்கள் எழுப்பினர்.

இந்தி மொழி குறித்து அமித்ஷா
இந்நிலையில் குஜராத்தின் சூரத் நகரில் நடைபெற்ற இந்தி மொழி தின நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது: இந்திய மக்கள் அனைவரும் தங்களது பிராந்திய (உள்ளூர்) மொழிகளை கற்க வேண்டும்; புரிந்து கொள்ள வேண்டும். பிராந்திய மொழிகளை வலுப்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. இந்தி மொழி அனைத்து பிராந்திய மொழிகளுக்கும் நட்பு மொழி. இந்தியாவை ஒருங்கிணைக்கக் கூடிய மையமாக இருக்கிறது இந்தி மொழி. நமது கலாசார ஓட்டத்தில் இந்தி மொழியும் பிராந்திய மொழிகளும் முதன்மையானவை. நமது கலாசாரம், பண்பாடு ஆகியவற்றின் ஆன்மாவை உணர்ந்து கொள்ள இந்தி மொழியை கற்பது அவசியம். இவற்றை புரிந்து கொள்ள பிராந்திய மொழிகள் அவசியம்.

ஆங்கிலேயர்களால் ஏற்றத் தாழ்வு
ஆங்கிலேயர்களால் அலுவல் மொழி (இந்தி) க்கும் பிராந்திய மொழிகளுக்கும் இடையே ஏற்றத்தாழ்வுகள் விதைக்கப்பட்டன. நாம் அவற்றை போக்க வேண்டிய தருணம் இது. அலுவல் மொழி, பிராந்திய மொழிகள் ஒருங்கிணைந்து இந்த ஏற்றத் தாழ்வை அகற்ற முடியும். இவ்வாறு அமித்ஷா கூறினார்.












Click it and Unblock the Notifications