போராடும் விவசாயிகளை விட்டுவிட்டு 2,000விவசாயிகளுக்காக நீதிமன்றத்தில் வாதாடிய மத்திய அரசு
டெல்லி: மத்திய அரசின் விவசாய சட்டங்களை எதிர்த்து பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் போராடும் நிலையில் வெறும் 2,000 விவசாயிகள் நலனுக்காக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வாதத்தை முன்வைத்தது.
மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிரான வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே தலைமையிலான பெஞ்ச் இன்று விசாரித்தது. இந்த விசாரணையின் போது மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் ஆஜரானார்.
விவசாய சட்டங்களை செயல்படுத்துவதை நிறுத்தி வைத்தால்தான் ஒரு குழு அமைத்து பேச்சுவார்த்தை நடத்திப் பார்க்க முடியும் என்கிற கருத்தை தலைமை நீதிபதி போப்டே திரும்ப திரும்ப வலியுறுத்தினார். ஆனால் அட்டர்னி ஜெனரலோ, விவசாய சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
இதுவரை 2,000 விவசாயிகள் இச்சட்டத்தின் கீழ் ஒப்பந்தம் செய்துள்ளனர். இப்போது சட்டங்களை செயல்படுத்துவதை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்தால் இந்த 2,000 விவசாயிகளுக்கும் மிக கடுமையான இழப்பு ஏற்படும் என சுட்டிக்காட்டினார். அதேபோல் முந்தைய அரசுதான் இந்த சட்டத்தை கொண்டுவந்தது எனவும் அட்டர்னி ஜெனரல் பேசினார்.
இதனால் அதிருப்தி அடைந்த தலைமை நீதிபதி போப்டே, பொறுமையாக இருப்பது பற்றி எங்களுக்கு பாடம் நடத்த வேண்டாம் என கடிந்து கொண்டார். அத்துடன் காந்தியின் சத்தியாகிரக வழியில் போராட அனைவருக்கும் உரிமை உள்ளது. ஏதாவது ஒரு தவறு நிகழ்ந்துவிட்டால் அனைவரும்தான் பொறுப்பாக வேண்டியது வரும். எங்கள் கைகளில் ரத்தம் படிவதையோ காயங்கள் ஏற்படுவதையோ நாங்கள் விரும்பவும் இல்லை என்றும் நீதிபதி போப்டே தெரிவித்தார்.