அச்சுறுத்தும் ஓமிக்ரான்.. இந்தியாவில் 3ஆம் அலை எப்போது ஏற்படும்? ஐஐடி பேராசிரியர் முக்கிய வார்னிங்
டெல்லி: இந்தியாவில் அடுத்தாண்டு ஜனவரி - பிப்ரவரி மாதங்களில் கொரோனா 3ஆவது அலை ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ள ஐஐடி கான்பூர் பேராசிரியர் மனிந்திர அகர்வால், அது எவ்வளவு தீவிரமாக மாற வாய்ப்புள்ளது என்பது குறித்தும் எச்சரித்துள்ளார்,
கடந்த 2019 இறுதியில் சீனாவில் பரவ தொடங்கி கொரோனா வைரஸ் வெகு விரைவில் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பரவியது. இந்தியாவிலும் கடந்த 2020 ஜனவரி இறுதியில் கேரளாவை சேர்ந்தவருக்கு முதல் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.
அதன் பிறகு வைரஸ் பாதிப்புகள் மெல்ல அதிகரிக்கவே. மார்ச் மாதம் நாடு முழுவதும் முதலில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.
வெளிநாட்டிலிருந்து தமிழகம் வந்த 6 பேருக்கு கொரோனா மட்டுமே.. ஓமிக்ரான் வதந்தி.. சுகாதார துறை செயலாளர்
முதல் அலை
இருப்பினும், முதல் அலை சமயத்தில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு மிக மோசமான நிலைக்கு எதுவும் செல்லவில்லை. கொரோனா கேஸ்கள் அதிகரித்தாலும் கூட எந்த நிலையிலும் நிலைமை கையை மீறிச் செல்லவில்லை. அதேபோல மருத்துவமனைகளிலும் நிலைமை கட்டுக்குள்ளேயே இருந்தது. இதனால் இந்தியா கொரோனாவை கையாண்ட விதத்தைப் பலரும் பாராட்டினர். கடந்த ஆண்டு இறுதியில் வைரஸ் பாதிப்பு மெல்லக் குறையத் தொடங்கியது.
2ஆம் அலை
இந்தச் சூழலில் தான் டெல்டா கொரோனா வேகமாகப் பரவ தொடங்கியது. டெல்டா கொரோனா மிக வேகமாகப் பரவியதால் முதல் அலையைக் காட்டிலும் 2ஆம் அலையின் பாதிப்பு மிக மோசமாக இருந்தது. பல்வேறு பகுதிகளிலும் மருத்துவமனைகளில் படுக்கைகள் கூட இடமில்லாத நிலை ஏற்பட்டது. மேலும், ஒரு புறம் கொரோனாவால் நோயாளிகள் உயிரிழந்தார்கள் என்றால் மறுபுறம் ஆக்சிஜன் பற்றாக்குறையாலும் நோயாளிகள் உயிரிழந்தனர். இந்தாண்டு மே மாதத்திற்குப் பின்னரே வைரஸ் பாதிப்பு மெல்லக் குறையத் தொடங்கியது.
ஓமிக்ரான் கொரோனா
அதின் பின்னரும் கூட ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் கொரோனா அடுத்த அலை ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரித்தனர். இருப்பினும், நல்வாய்ப்பாக அதுபோல எந்தவொரு அலையும் ஏற்படவில்லை. இருப்பினும், 2ஆம் அலையின் கோரத்தைப் பார்த்தவர்கள் மத்தியில் அடுத்த அலை குறித்த அச்சம் இருந்து கொண்டே தான் இருந்தது. இந்தச் சூழலில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமிக்ரான் கொரோனாவும் பொதுமக்களிடையே அச்சத்தை அதிகரித்தது.
3ஆம் அலை எப்போது
இந்நிலையில், கொரோனா 3ஆம் அலை எப்போது ஏற்பட வாய்ப்புள்ளது என்பது குறித்து ஐஐடி கான்பூர் பேராசிரியர் மனிந்திர அகர்வால் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த மனிந்திர அகர்வால் தான், மத்திய அரசின் கொரோனா டிராக்கிக் முறையான சூத்ரா முறையில் கொரோனா பாதிப்பைக் கணிக்கும் குழுவில் இடம் பெற்றுள்ளார். அடுத்தாண்டு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் இந்தியாவில் கொரோனா 3ஆம் அலை ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக மனிந்திர அகர்வால் எச்சரித்துள்ளார்.
அச்சம் வேண்டாம்
அடுத்தாண்டு தொடக்கத்தில் உத்தரப் பிரதேசம் பஞ்சாப், உத்தரகண்ட், கோவா, மணிப்பூர் மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அந்தச் சமயத்தில் தான் ஓமிக்ரான் கொரோனா கேஸ்கள் அதிகரிக்கத் தொடங்கும் என மகேந்திர அகர்வால் தெரிவித்துள்ளார். புதிய உருமாறிய கொரோனா குறித்து நாம் அச்சப்படத் தேவையில்லை என்றும் எச்சரிக்கையுடன் இருந்தால் போதும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தீவிர பாதிப்பு இல்லை
மேலும், தற்போதுள்ள தரவுகளை வைத்துப் பார்க்கும்போது கொரோனா ஓமிக்ரான் கொரோனா பாதிப்பும் உடலில் இருக்கும் தடுப்பாற்றலில் இருந்து தப்பும் திறனைக் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை என்று அவர் குறிப்பிட்டார். உலகின் அனைத்து பகுதிகளிலும் ஓமிக்ரான் கொரோனா லேசான பாதிப்புகளை மட்டுமே ஏற்படுத்துவதாகவும் தீவிர பாதிப்புகள் எதையும் ஏற்படுத்துவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். இது வேகமாகப் பரவினாலும் கூட அதன் தீவிர தன்மை குறைவாகவே உள்ளதாக அவர் தெரிவித்தார்
கிட்டதட்ட உறுதி
இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது நாட்டில் 3ஆவது அலை ஏற்படுவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டதாக மனிந்திர அகர்வால் கூறினார்; இருப்பினும், அது எவ்வளவு மோசமாக மாறும் என்பது அரசு எடுக்கும் நடவடிக்கைகளைப் பொறுத்தே இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். 3ஆம் அலையால் அதிகபட்ச பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்க இரவு ஊரடங்கு, பொது இடங்களில் மக்கள் கூட தடை போன்ற சில கட்டுப்பாடுகளை அரசு விதிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.