தொலைபேசி ஒட்டுக் கேட்பு: NSE சித்ரா ராமகிருஷ்ணனின் கூட்டாளி ரவி நரேன் அமலாக்கத்துறையால் அதிரடி கைது
டெல்லி: தேசிய பங்கு சந்தை (NSE) அதிகாரிகளின் தொலைபேசிகளை சட்ட விரோதமாக ஒட்டுக் கேட்டதாக அதன் முன்னாள் தலைவர் ரவி நரேன், அமலாக்கப் பிரிவு அதிகாரிகளால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

நாட்டின் தேசிய பங்கு சந்தையில் (NSE) கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை நிர்வாக இயக்குநராக இருந்தார் சித்ரா ராமகிருஷ்ணா என்ற சித்ரா ராமகிருஷ்ணன். சித்ரா ராமகிருஷ்ணா மீது செபி பல்வேறு ஊழல் முறைகேடு புகார்களை முன்வைத்தது. அத்துடன் பங்கு சந்தை ரகசியங்களை இமயமலை சாமியார் என்ற மர்ம நபரிடம் சட்டவிரோதமாக சித்ரா ராமகிருஷ்ணன் பகிர்ந்து கொண்டார் என்பதும் புகார்.
இது தொடர்பாக சிபிஐ, அமலாக்கப் பிரிவு விசாரணை நடத்தியது. இந்த விசாரணையில் இமயமலை சாமியார் என்ற மர்ம நபர், சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு அனுப்பிய அந்தரங்க களியாட்ட மடல்களும் அம்பலமாகியது. இதனைத் தொடர்ந்து சித்ரா ராமகிருஷ்ணா, அவரது கூட்டாளி ஆனந்த் சுப்பிரமணியம் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இருவருக்கும் ஜாமீன் கிடைக்காததால் சிறையில் உள்ளனர். மேலும் பங்கு சந்தை முறைகேடு தொடர்பாக சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ரூ5 கோடி அபராதம் விதித்தது செபி. அவரது கூட்டாளி ஆனந்த் சுப்பிரமணியத்துக்கும் ரூ5 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சித்ரா ராமகிருஷ்ணா, மும்பை மாஜி போலீஸ் கமிஷனர் சஞ்சய் பாண்டே மற்றும் தேசிய பங்கு சந்தை முன்னாள் தலைவர் ரவிநரேன் ஆகியோர் மீது அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் புதிய வழக்குப் பதிவு செய்தனர். அதாவது தேசிய பங்கு சந்தை அதிகாரிகள், பணியாளர்களின் தொலைபேசிகளை மூவரும் சட்டவிரோதமாக ஒட்டுக் கேட்டனர் என்பது சிபிஐ வழக்கு.
இந்த வழக்கில் அண்மையில் சஞ்சய் பாண்டேவுக்கு தொடர்புடைய பல இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும் ரவி நரேனிடமும் சிபிஐ, அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் போது ரவி நரேன், ஒத்துழைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்தே ரவி நரேன், அதிரடியாக அமலாக்கப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications